மு.சந்திரசேகரன், மேட்டுமகாதானபுரம்
தெலங்கானா அரசு கொரோ னாவை மெத்தனமாகக் கையாள்கிறது என ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறாரே ஆளுநர் தமிழிசை சவுந்திரராசன்?
பாஜ.க. அரசால் நியமிக்கப் பட்ட மற்ற ஆளுநர்களை ஒப்பிடும் போது அக்கா ரொம்ப பொறுமையாகத்தான் ஆடுகிறார்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறாரே ரவிக்குமார் எம்.பி.?
தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தலைநகர் தேவையென்றால், இந்தியாவுக்கும் இன்னொரு தலைநகர் தேவை என்பது வாதத்தின் அடிப்படையில் சரிதானே! துறைமுகம் கொண்ட சென்னை இருக்கும்போது, கடல் இல்லாத மதுரை அல்லது திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்கிறார்கள். கடல் இல்லாத டெல்லி இந்தியாவின் தலைநகர் என்றால், துறைமுகம் கொண்ட தென்னிந்தியாவின் பெரிய நகரமான சென்னையை இரண்டாவது தலைநகராக்கலாம் எனினும், கட்டமைப்பு வசதிகளும் கணினித் தொழில்நுட்பமும் சரியான முறையில் இருந்தால் எந்த நகர-கிராம மக்களும் தலைநகருக்கு அலைய வேண்டியதில்லை என்பதே இன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி காட்டும் உண்மை.
யாழினிகுமார், சென்னை 21
முந்தைய பா.ஜ.க. தலை வர்களைவிட தற்போதைய தலைவர் முருகனிடம் வேகம் தெரிகிறதே?
தேர்தல் வருகிறதே.. வேகம் காட்டித்தான் ஆக வேண்டும். ஆனால், அதிவேகம் ஆபத்தானது என்பது சாலை விதி மட்டுமல்ல, அரசியல் விதி என்பது நன்கு படித்தவரான முருகனுக்கும் தெரியும். புழலில் இருக்க வேண்டி யவர்களை எல்லாம் கமலாலயத்துக்கு அழைத்து வருவது வேகமாகத் தெரியலாம். விவேகமாக இருக்காது.
அ.யாழினி பர்வதம், சென்னை-78
நேரு குடும்பத்தைத் தவிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியேற்க வேறு யார் தகுதியாக இருக்கிறார்?
நேரு குடும்பத் தலைமையின் கீழ் இருக்கும்போது ஒவ்வொருவரும் தாங்கள்தான் தலைவர் என்பதுபோல நடந்து கொள்வதும், நேரு குடும்பத் தலைமை இல்லாவிட்டால் நெல்லிக் காய் மூட்டை போல அத்தனை தலைவர்களும் சிதறிக் கிடப்பதும் காங்கிரஸின் பரிதாப நிலைமை. இதற்கு நேரு குடும்பத் தலைமையே காரணம். நேருவுக்குப் பிறகு, இந்திராகாந்தி ஆட்சியிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமைமிக்க மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். வெளியேற்றப்பட்டனர். ராஜீவ் காந்தியும் இதனைத் தொடர்ந்தார். சோனியா காலத்திலும் தொடர்ந்தது. ராகுல் சரி செய்ய நினைக்கும்போது காலம் கடந்து போயிருக்கிறது.
செ.பொன்னுசாமி, சிவகங்கை
அண்ணா-கலைஞர்- ஸ்டாலின்- உதயநிதி?
விதைத்தவர் அண்ணா. அதனை ஆலமரமாக்கிய கலைஞர் உருவாக்கிய விழுது ஸ்டாலின். விழுதுகளைப் பிடித்து உதயநிதிகள் ஊஞ்சலாடுகிறார்கள். பலம் மிகுந்த ஆலமரத்தின் ஆணிவேர், தொண்டர்கள்.
___________
தமிழி!
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
பழந்தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தது கல்வியா- காதலா- வீரமா?
காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் இரு கண்கள் என்கிறார்கள் புலவர்கள். அதனை அகப்பாடல்களும் புறநானூறும் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே மனிதகுலத்தின் அடிப்படை உணர்வு காதல். அறிவியல் வழியாகப் பார்த்தாலும், ஆதாம்-ஏவாள் கதைப்படி பார்த்தாலும் காதல்தான் மனிதகுலத்தைப் பெருக்கியிருக்கிறது. எனவே, தமிழர் பண்பாடு மட்டுமின்றி எல்லாப் பண்பாட்டிலும் காதல் முதன்மையானது. அதன் வகைப்பாடு ஒவ்வொரு பண்பாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்றாலும் காதல் உலகத்திற்குப் பொதுவானது. வேட்டைச் சமூகமாக விலங்குகளிடம் வீரம் காட்டிய மனிதன், நிலவுடைமைச் சமுதாயமானபோது சக மனிதர்களிடம் அந்த வீரத்தைக் காட்டத் தொடங்கினான். தமிழ் அரசர்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டு வீரம் காட்டியிருக்கிறார்கள். பிற நாட்டு மன்னர்களுடன் போரிட்டு வீரம் காட்டியிருக்கிறார்கள். கடல் கடந்து கப்பற்படையுடன் சென்று போர் புரிந்திருக்கிறார்கள். வலிமை இருந்தும் போர் நடத்தாமலேயே எதிரியை மன்னித்து வீரம் காட்டி யிருக்கிறார்கள். எல்லாவற்றையும் இலக்கியம் விரிவாக எடுத்துரைக்கிறது. தமிழக மன்னர்கள் போலவே கிரேக்க, ரோமானியப் பேரரசர்களும் போர் புரிந்திருப்பதை அவர்களின் புராண- வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. காதலும் வீரமும் மனித குலத்தின் இயல்பு. அந்த மனிதகுலம் நாகரிகமிக்கதாக மேம்படுவதற்கு பயன்பட்டதில் கல்விக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இதனைப் பழந்தமிழர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் எல்லாவற்றிலும் சிறப்பு. கேடு இல்லாத உயர்ந்த செல்வமான கல்வியைவிட சிறந்த சொத்து ஒரு மனிதனுக்கு வேறு எதுவும் இல்லை என்கிறது தமிழ் மறையாம் திருக்குறள். "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றும் பழந்தமிழ் இலக்கியம் வலியுறுத்துகிறது. பிச்சை எடுக்கின்ற அளவுக்கு வாழ்க்கைச்சூழல் தள்ளப்பட்டிருந்தாலும் எப்படியாவது படித்துவிடு என்பதை தமிழ்ப் பண்பாடு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. பழந்தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பதிலிருந்தே கல்வியில் இருபாலின சமத்துவத்தைத் தமிழ்ப் பண்பாடு முன்னிறுத்தியிருப்பதை நாம் அறிய முடிகிறது. இந்திய மொழிகளில் வேறு எதற்கும் இத்தகையத் தொன்மை பண்பாட்டுச் சிறப்பு கிடையாது. காதல், வீரம் இரண்டும் தமிழ்ப் பண்பாட்டின் ஒளி மிகுந்த கண்கள் என்றால், கல்வி என்பது தமிழ்ப் பண்பாட்டின் உயிர்த்துடிப்பான இதயம்.