கே.ஆர்.உபேந்திரா, தஞ்சாவூர்
தற்போதைய காலச் சூழலில் நியாயமாக வாழ நினைப்பதே தவறா?
நியாமாக வாழ்வதாவது, அநியாயமாக வாழ்வதாவது. ஊரடங்கால் முடங்கிப் போன வாழ்வின் நிலையைப் பார்த்தால், வாழ நினைப்பதே தவறோ என்றுதான் பலருக்கும் தோன்றுகிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
ஜெ கார் டயரை ஓ.பி.எஸ் கும்பிட்டதற்கும், இ.பி.எஸ். கார் டயரை அமைச்சர் சம்பத் கும்பிட்டதற்கும் என்ன வேறுபாடு?
அவர் பதவிக்காக அவர் கும்பிட்டார். இவர் பதவிக்காக இவர் கும்பிட்டார் என்பதைத் தவிர வேறு எந்த வேறுபாடும் கிடையாது. அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க.வில் உள்ள ஆண்-பெண் அத்தனை பேரும் தன் காலில் விழவேண்டும் என்பதை விரும்பியவர் ஜெயலலிதா. அவர் காரில் உட்கார்ந்திருந்த நிலையில், கதவைத் திறந்து காலைத் தொட்டு வணங்க முடியாது என்பதால் ஓ.பி.எஸ். எனும் அரசியல் விஞ்ஞானி கண்டுபிடித்ததுதான் கார் டயரைத் தொட்டுக் கும்பிடும் கலாச்சாரம். தேனி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த கலாச்சாரத்தை முதன்முத லில் வெளிக்கொண்டு வந்து பரவலாக்கியது நக்கீரன். மக்கள் சிரித்தாலும், மந்திரிகளுக்கு இதுவே புது டெக்னிக்காகி விட்டது. ஜெ. காலில் விழ முடியாவிட்டாலும் அவர் கார் டயரையாவது தொட்டுக் கும்பிடலாம் என்ற பாணியைக் கடைப்பிடித்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டனர். இப் போது அமைச்சர் சம்பத்திடம் பதவி இருக்கிறது. அவருக்கு எடப்பாடி, ஜெடப்பாடியாகத் தெரிகிறார்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77
அரியர்ஸ் மாணவர்கள் ஆல்பாஸ் என்ற தமிழக அரசின் முடிவால், வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்கிறார்களே கல்வியாளர்கள்?
எது பாதித்தால் என்ன? ஆல்பாஸாகும் அரியர்ஸ் மாணவர்கள், ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டு, அதை மறுபடி யும் பாஸ் செய்ய வைத்தால் போதுமே!
மு.முஹம்மது ரஷாதீ, விழுப்புரம்
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய கலைஞர் ஆட்சியின் சட்டத்திற்கு எவ்வித தடையும் இல்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்திருக்கிறதே?
பட்டியல் இன மக்களுக்கான 18% இடஒதுக்கீட்டில் 3% உள்ஒதுக்கீட்டை அருந்ததியருக்கு கலைஞர் அரசு வழங்கிய தால் அந்த சமூகத்தில் பலரும் இன்று டாக்டர்கள்- இன்ஜினியர்கள் ஆகியுள்ள னர். அதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், கலைஞர் அரசின் சட்டம் செல் லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது. அதுபோலவே, கிராமப்புறங்களில் சேவையாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ உயர்படிப்பில் இடஒதுக்கீடு என்ற கலைஞர் அரசின் சட்டத்தையும் செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறந்தும், சமூக நீதி காக்கிறார் கலைஞர்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
நேர்மையான அரசியல்வாதிகளை யும் அதிகாரிகளையும் காண்பது அரிதாக உள்ளதே?
நேர்மையான அதிகாரிகள் என விளம் பரப்படுத்தி, அவர்களை அரசிய லுக்கு கொண்டு வந்து பதவி கொடுக் கிறார்கள். அப்புறம், எப்படி இரண்டும் உருப்படும்?
_________
தமிழி
இரா.இலக்கியா, மன்னார்குடி
கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகளின் முடிவுகளை முறையாக வெளி யிடாவிட்டால் வரலாற்றைத் திரித்துவிட முடியுமா?
வரலாறு ஒன்றுதான் என்றாலும் அதன் கோணம் பல்வேறுபட்டது. எவர் வாயால் அது சொல்லப்படுகிறது என்பது முக்கியமானது. கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் மட்டுமல்ல, சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான அகழாய்வுகளையே சரஸ்வதி ஆற்று நாகரிகம் என மாற்ற முயற்சிக்கும் பெரும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்த எருது உருவத்தை குதிரை எனக் காட்டுவதற்கு பலத்த முயற்சிகள் அவ்வப்போது நடக்கும். காரணம், ஆரியர் நுழைவுக்குப் பிறகே குதிரைகளின் குளம்பொலி இந்த மண்ணில் கேட்டது. அதனை மாற்றி, ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் எனக் காட்டுவதற்காக காளையை குதிரையாக்கும் வரலாற்றுத் திரிபாளர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் நடந்த போர்கள் போலவே, வரலாறு தொடர்பான கருத்துப் போர்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். புதிய புதிய தரவுகள்- ஆவணங்கள் வழியாக உண்மை நிலைநாட்டப்படும். இந்தியா, கிரேக்கம் போன்ற நாடுகளின் வரலாற்றுத் தேடல்களில் புராணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதனால்தான் அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை ஆவணங்கள் ஏதுமின்றி, புராண நம்பிக்கையின் அடிப்படை யில் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்து, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது. ராமர், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவர் என்றால், மற்ற அவதாரங்களையும் அதுபோல முன்னிறுத்துவது புராண வழி வரலாற்றின் அடிப்படையிலான அரசியல். மலையாள நாட்டில் நல்லாட்சி செய்த மாவலி மன்னனின் புகழை விரும்பாத தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் வேண்டி, அவரை வாமன அவதாரம் எடுக்க வைத்து, மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்கச் செய்து, மூன்றாவது அடிக்குத் தன் தலையை மாவலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறது புராணம். வாமன அவதாரத்தால் தலை அழுத்தப்பட்டு, புதையுண்ட மாவலி மன்னன், தன் மக்களைக் காண ஆண்டுக்கு ஒரு நாள் வருவார். அதுதான் ஓணம் திருநாள். மாவலியைக் கொண்டாடும் கேரள மக்களிடம், வாமன அவதாரத்தைக் கொண்டாடச் சொன்னார் அமித்ஷா. அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இப்போது வாமனனை மாவலி தூக்கி வீசுவதுபோன்ற ஓவியங்களையும் வரையத் தொடங்கிவிட்டனர். வரலாற்றைத் திரிக்க நினைத்தால், எதிர்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.