மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்யப்பட மாட்டார் என்கின்ற காவல்துறையின் அறிவிப்பு எல்லா தரப்பு மக்களுக்கும் பொருந்துமா?

ஊகும்... எஸ்.வி.சேகருக்கும் அவர் வீட்டுக்குப் பால் பாக்கெட் போட்ட எடப்பாடி அரசு அமைய காரணமான ஜெயலலிதா போன்ற பிறவிப் பயனாளி களுக்குத்தான் பொருந்தும். முதலமைச்சருக்கான நன்னடத்தை விதியை மீறி வாங்கிய டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னதும் ஜெயலலிதாவை விடுவித்தது உச்சநீதிமன்றம். சேகர், ஜெயலலிதா போன்றவர்கள் பிறப்பாலேயே எல்லாச் சலுகையும் பெற்றவர்கள்.

கே.ஆர்.உபேந்திரன்,தஞ்சாவூர்

Advertisment

கல்லூரிகளில் "அரியர்ஸ் ' வைத்துள்ள மாணவ, மாணவிகள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலே "ஆல் பாஸ்' என்ற முதல்வரின் உத்தரவு பல தவறான முன்னுதா ரணங்களுக்கு வழி வகுக்காதா?

கொரோனா காலத்தில் எவையெல்லாம் லாபம் என கணக்குப் போடுகிறது எடப்பாடி அண்ட் கோ. அரியர்ஸ் மாணவர்களை பாஸ் போடுவதாக சொன்னதும், எடப்பாடியைப் பாராட்டி மீம்ஸ் போட்டு, போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துவிட்டார்களே, தேர்தலில் வாக்களிக்க இருக்கும் மாணவர்கள்!

mm

Advertisment

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர் 77

அன்று... ""ஜா... ஜெ''...அணிகள் என்று இருந்த போது... அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி... "ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை ஆதரிப்போம்' என்றார். அதுபோல இப்போது பா.ஜ.க... "ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்... சசிகலா... ஆகிய மூவரையும் உள்ளடக்கிய அ.தி.மு.க.வை உருவாக்க திட்டமிடுவது குறித்து?

ராஜீவ் கணக்கு வேறு. மோடி கணக்கு வேறு. எம்.ஜி.ஆர். இறந்தபோது தேசிய துக்கமாக அறிவித்து, அதன்பின்னர் அவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கியவர் ராஜீவ்காந்தி. அதையெல்லாம் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி துளிர்ப்பதற்கான உரமாக்கலாம் என்பதுதான் அவர் கணக்கு. அதனால்தான், ஜானகி ஆட்சி கவிழ்வதற்கு துணை நின்றார். அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். டெல்லியில் கட்சிப் பொறுப்பில் இருந்த மூப்பனாரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி, முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார். ஜானகியும் ஜெயலலிதாவும் குழாயடி சண்டை பாணியில் ஒருவரையொருவர் விளாசிக் கொண்டிருந்த சூழலில், ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கூட்டணி என்று சொன்னது, அது நடக்காது என்ற நம்பிக்கையில்தான். கடைசியில், காங்கிரஸ் ஆட்சி என்ற ராஜீவ் கணக்கும் நிறைவேறவில்லை. இப்போது மோடி எதிர்பார்ப்பது, சட்டமன்றத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்க எண்ணிக்கையில் நுழைய வேண்டும் என்பதே. அதற்கு, அ.தி.மு.க வாக்குகள் சிதறாமல் இருந்தால்தான் அதன் மீது ஏறி சவாரி செய்ய முடியும்.

ம.தமிழரசிமணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்

கமல், ரஜினி இருவருக்கும் மிகச்சரியான கதாநாயகியாக திகழ்ந்தவர் யார்?

அது என்ன இரண்டு ஹீரோக்களைக் குறிப்பிட்டு, ஒரு ஹீரோயினை மட்டும் சுட்டிக்காட்டச் சொல்வது? ஸ்ரீதேவிக்கு ஈடுகொடுத்தது வாழ்வே மாயம் கமலா? அடுத்த வாரிசு ரஜினியா? என்று கேட்கக்கூடாதா! அதுபோலவே ஸ்ரீப்ரியா, அம்பிகா, ராதா, குஷ்பு, கௌதமி எனப் பலர் இருக்கிறார்கள். பஞ்சதந்திரம் சிம்ரனா, பேட்ட சிம்ரனா என்றுகூட கேட்கலாமே?

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"தர்மம் வெல்லும்... வாய்மையே வெல்லும்... வலியதே வெல்லும்' என்ன வேறுபாடு?

தர்மம் வெல்லும் என்பது நீதி போதனை. வாய்மையே வெல்லும் என்பது நம்பிக்கை. வலியதே வெல்லும் என்பதே நடைமுறை உண்மை.

__________

தமிழி!

சு.வெங்கடேஷ், கோட்டயம்

யோகா என்பது வட நாட்டுக் கலையா? அதை இந்தியில்தான் சொல்லித்தர முடியுமா?

யோகா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலை என்றால் அதற்கும் இந்திக்கும் சம்பந்தமே கிடையாது. ஏனெனில், இந்தி சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மொழி. வடஇந்திய யோகக் கலைப் பயிற்சிகள் சமஸ்கிருதத்தில் உள்ளன. அவை இந்திக்கு மாற்றப்பட்டுள்ளன. அதை வைத்துக்கொண்டு தான், இந்தி தெரியாதவர்கள் யோகா பயிற்சி கருத்தரங்கிலிருந்து வெளியேறுங்கள் என்று சொன்னார் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர். உண்மையில், ஓகம் என்கிற மூச்சுக்கலை தொல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. வெற்றிடத்தில் காற்று அசையும்போது ஏற்படுகிற ஓம் என்கிற ஓங்கார ஒலியின் தன்மையை உணர்ந்துகொள்ளும் அளவுக்கு மனதைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சிதான் ஓகம். தமிழில் இதனை திருமூலர் தனது திருமந்திரம் நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார். அவருக்கு முன்பும் பின்பும் பல சித்தர்கள் இந்த மூச்சுக்கலையைப் பயிற்றுவித்து வளர்த் திருக்கிறார்கள். ஒரு மனிதன் ஒரு நாளில் சராசரியாக விடுகின்ற மூச்சுக்கும், மூச்சுப்பயிற்சிக்குப் பிறகு விடுகின்ற மூச்சுக்கும் வேறுபாடு உண்டு. இடது நாசி, வலது நாசி வழியே மூச்சு விடுவ தால் ஏற்படும் பலன்கள், தொடர்ச்சியான பயிற்சியால் உடலுக்குள் எழுகின்ற ஆற்றல், அதன்காரணமாக, மனித வாழ்நாள் நீடிப்பு எனப் பலவற்றையும் சித்தர்கள் வழங்கியுள்ளனர். நேரடி வார்த்தைகளில் சொல்லாமல் கொஞ்சம் மூடுமந்திரமாக சொல்லப்பட்டதால் தமிழின் அருமையை உணரமுடியாத தமிழர்கள் பதஞ்சலி யோகா போன்றவற்றில் மயங்கிக் கிடக்கிறார்கள்.