ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்

மத்தியில் நடப்பது பா.ஜ.கவின் ஆட்சியா அல்லது இந்துக்களின் ஆட்சியா என்று கேட்கும் அளவில் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறதே?

கோவில் கட்டுவதால் இந்துக்களின் ஆட்சி என்று நினைத்துவிடாதீர்கள். தற்போது மத்தியில் நடப்பது, சிறுபான்மை மதத்தினரின் மசூதியை இடித்து, அந்த இடத்தில் கோவில் கட்டும் அதே வேளையில், இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப் பட்டோர்-பட்டியல் இனத்தவரின் உரிமை களையும் பறித்துக்கொள்ளும் ஆட்சி.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி- 642003

Advertisment

அ.தி.மு.க. கொடியில் இருந்து அண்ணாவை நீக்க வேண்டும் என பேசிய எஸ்.வி.சேகர்மான, ரோஷம் இருந்தால் அவர் அதிமுக எம்.எல்.வாக 5 ஆண்டுகளாக இருந்து வாங்கிய சம்பளம், பென்சனை திருப்பி தருவாரா..? என்று அமைச்சர் ஜெயகுமார் கேட்டுள்ளது பற்றி?

அமைச்சர் மட்டுமா? முதலமைச்சரும் கூட, எஸ்.வி.சேகர் எதையாவது பேசுவார். வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என நையாண்டி செய்திருக்கிறார். தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது, கறுப்பு-சிவப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு தி.மு.க பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான எஸ்.வி.சேகர். அப்போதே, அமைச்சர் ஜெயக்குமார் கேட்கும் விவரங்கள் அவரிடம் இருந்தனவா எனத் தெரியவில்லை. ஊரடங்கு நேரத்தில் வீடு தேடிச் சென்று பால் பாக்கெட் போடச் செய்த முதல்வருக்குத்தான், எஸ்.வி.சேகர் யார் பின்னால் ஒளிந்திருந்தார் என்பது நன்றாகத் தெரியும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது என்கிறாரே மோடி?

அதைத்தானே நேபாள பிரதமர் சர்மா ஒலியும் சொன்னார். ஒருத்தருக்கு வந்தால் ரத்தம், இன்னொருவருக்கு வந்தால் தக்காளி சட்னியா?

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

"தி.மு.க.வில் குடும்ப அரசியல்' என்ற காரணத்தைக் கூறி, அக்கட்சியின் எம்.எல்.ஏ., கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணைந்துள்ளாரே?

கலைஞர் குடும்பத்தில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர், மு.க.அழகிரி மத்திய அமைச்சர், கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி. எனப் பதவிகள் வழங்கப்பட்டபோது கு.க.செல்வம் எந்தக் கட்சியில் இருந்தாராம்? தி.மு.க.வுக்கு குடும்ப அரசியல் பல ஆண்டுகளாக இருக்கிறது. இப்போது செல்வத்துக்கு தன் பெயருக்கேற்ற அரசியல் தேவைப் படுகிறது.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை 6

பொதுத்துறை-கூட்டுறவுத் துறை-தனியார்துறை இவற்றில் மாவலிக்கு பிடித்தது எந்தத் துறை?

அரசுக்கு வருவாய் தருகிற பொதுத்துறை- நிர்வாகக் குளறுபடி இல்லாத கூட்டுறவுத்துறை- தொழிலாளர் நலன் காக்கும் தனியார்துறை.

________

தமிழி

mavali

சி. கார்த்திகேயன், சாத்தூர் 626203

நம் நாட்டில் தேசிய மொழி என்று என எந்த மொழியும் கிடையாதாமே?

இந்திய அரசியல் சாசனத்துடன் இணைந்த எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இருக்கின்றன. இதில் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், மராத்தி உள்ளிட்டவை உண்டு. இந்தப் பட்டியலில் தங்கள் மொழியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காத்திருக்கும் மொழிகளும் உண்டு. இப்போதைய நிலையில், அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே சமமான வைதான். இந்தி என்பது இந்தியாவின் மத்திய அரசினுடைய அலுவல் மொழி மட்டுமே. அதிலும், மத்திய அரசின் இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எனவே, தேசிய மொழி என்று எந்த ஒரு மொழிக்கும் தனி அங்கீகாரம் கிடையாது. குறிப்பாக, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி எனத் தமிழர்கள்கூட நம்புகிறார்கள். அது தவறான நம்பிக்கை. பொய்யான பரப்புரை.

மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி, இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் இருப்பதுபோல, எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்குங்கள் என்பதுதான் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமிழ்நாட்டின் கோரிக்கை. 22 மொழிகளில் பல மொழிகள் இன்னும் அலுவல் மொழியாகும் நிலைக்கு வரவில்லை என்றால், எல்லாத் தகுதியும் பெற்ற செம்மொழியான தமிழை முதலில் அலுவல் மொழியாக்குங்கள் என டெல்லி அரசியல் தலைவர்கள் இருந்த மேடையில் முழங்கியவர் கலைஞர். இன்றயை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த மொழியையும் அவரவர் விருப்பப்படி கற்றுக்கொள்ளலாம். ஒரு மொழியில் உள்ள சொல்லை இன்னொரு மொழிக்கேற்ப மொழி பெயர்க்கலாம். எந்த மொழியையும் திணிக்காமல் புதிய மொழிகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், தனது சொந்த மாநிலத்தில் உள்ள போஜ்புரி, மைதிலி, சந்தலி, அவதி உள்ளிட்ட மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இந்தி மொழியை இந்தியாவின் பிறமொழி பேசும் மாநிலங்களில் திணிப்பதற்கு மத்திய ஆட்சியாளர்கள் துடியாயத் துடிக்கிறார்கள். வங்காளம், கன்னடம், மராத்தி எனப் பல மொழி பேசுவோரும் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.