மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டியது தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்கப் பெருமூச்சு என்கிறாரே தமிழக அமைச்சர் ஒருவர்?
தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் சரிவராது என்று அதனைப் புறந்தள்ளி, மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டுவர முயன்று தோற்றுப் போனவர் ஜெயலலிதா. கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்காலம்தான் மெட்ரோ ரயில் சென்னைக்கு வருவதற்கு அடிப்படைக் காரணம். அவரது பெயரைத் தவிர்த்துவிட்டு, அண்ணா-எம்.ஜி.ஆர்-ஜெ. பெயர்களை மட்டும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சூட்டுகின்ற அ.தி.மு.க. அரசின் முடிவு, அடுத்தவர் குழந்தைக்குத் தனது இனிஷியலை போடுகின்ற அரசியல் அநாகரிகம்.
ம.தமிழரசிமணி, குப்பம், ஆந்திரா மாநிலம்
எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் மிகச் சரியான பொருத்தமான கதாநாயகியாக திகழ்ந்து இரண்டு பக்கம் ரசிகர்களையும் கவர்ந்த நாயகி யார்?
ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில் உள்பட எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்த ஜெயலலிதா, சிவாஜியுடன் சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, எங்கிருந்தோ வந்தாள் உள்பட பல படங்களில் போட்டி போட்டு நடித்திருப்பார். ஆனாலும், எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக கொஞ்சு மொழி பேசி, புதிய பறவையில் சிவாஜி முன் உணர்ச்சி மொழிகளைக் கொட்டி நடித்த சரோஜாதேவிதான் இருதரப்பு ரசிகர்களையும்- தனக்கெனத் தனி ரசிகர் வட்டத்தையும் கொண்டிருந்த கதாநாயகி.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
ஐ.பி.எல். போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறதாமே?
ஷார்ஜாவில் எத்தனையோ கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அதுவும், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்றால் வெள்ளிக் கிழமைகளில் களைகட்டும். கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் பாகிஸ்தானின் ஜாவித் மியான்டட் அடித்த சிக்ஸரால் இந்தியாவின் வெற்றி பறிபோனதும், மணல் புயலுக்கு நடுவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இளம்புயலாக சச்சின் டெண்டுல்கர் வெளுத்து வாங்கியதும் மறக்க முடியாத ஆட்டங்கள். சூதுவாது இல்லாத உண்மை யான கிரிக்கெட் ஆட்டம் என்றால் துபாயில் நடந்தாலும் தூத்துக்குடியில் நடந்தாலும் ரசிக்கும்படி இருக்கும். பெட்டிங் ஆட்டம் என்றால் எங்கே நடந்தாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
எஸ்.மோகன், கோவில்பட்டி
ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்கு ஏன் ஆலாய் பறக்கிறார்கள்?
லோக்சபா (மக்களவை) எம்.பி.யாக வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்காளர்களில் பெரும்பான்மையானவர் களின் ஆதரவைப் பெற வேண்டும். அதற் கான ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெறவேண்டும். அதன்பிறகும், வெற்றியா- தோல்வியா என்பது வாக்கு எண்ணிக்கை யின்போதுதான் தெரியும். ராஜ்யசபா சீட் என்றால் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையைப் பொறுத்து எத்தனை சீட் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். சீட் உறுதியானால் வெற்றியும் ஏறத்தாழ உறுதியாகிவிடும். அதனால்தான் பெரிய கட்சிகளில் மட்டுமின்றி, அதன் தோழமைக் கட்சி யினரும் ராஜ்யசபா சீட்டுக்கு ஆலாய் பறக்கிறார்கள்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
கொரோனா வைரஸ் பாதிப்பு, நம் பலவீனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது என நோபல் பரிசு பெற்றவரும், கிராமிய வங்கி நிறுவனருமான முகமது யூனுஸ் கூறியுள்ளாரே?
நுண்கடன் (மைக்ரோ கிரெடிட்) என்ற புதிய வழிமுறை மூலம் எளிய மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக்கியவர் வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனூஸ். நம்முடைய நிதி நிர்வாக முறை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை இந்த கொரோனா காலம் அம்பலப்படுத்திவிட்டது என்கிற யூனூஸ், இனியாவது நிதி நிர்வாகம் தொடர்பான துணிச்சலான முடிவுகளை எடுத்து செயல்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என ராகுல்காந்தியுடனான உரையாடலில் தெரிவித்திருப்பது, பொதுமக்களின் குரலாகவே எதிரொலிக்கிறது.
ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்
ஆத்திகம், நாத்திகம் இவற்றில் எது மனிதனை மனிதனாக வாழ வைக்கிறது?
மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்திருந்தால் ஆத்திகம்-நாத்திகம் இரண்டும் மனிதர்களை வாழவைக் கும். பெரியாருடன் குன்றக்குடி அடிகளார் ஒரே மேடையில் உரையாற்றியதும், கலைஞரை சாய்பாபா வீடு தேடி வந்து சந்தித்ததும் ஆத்திகம்-நாத்திகம் இவற்றிற்கு அப்பாற்பட்ட மனிதத்தன்மை.
___________
தமிழி
நித்திலா, தேவதானப்பட்டி
இருமொழிக்கொள்கை என்ற பெயரில் வெள்ளைக்காரர்களின் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்நாட்டில், இந்தியாவின் மொழிகளான இந்தி அல்லது சமஸ்கிருதத்தை ஏற்க மறுத்து கொந்தளிப்பது ஏன்?
ஏறத்தாழ 58 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இதற்கான பதிலை அறிஞர் அண்ணா தெரிவித்துவிட்டார். வெள்ளைக்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, ஆங்கிலம் என்பது தமிழர்களுக்கும் அந்நியமொழி. இந்தி பேசுபவர்களுக்கும் அந்நிய மொழி. அதனால் அது தொடர்பு மொழியாக இருப்பதில் சிக்கல் எதுவுமில்லை. ஆனால், ஒரே நாட்டைச் சேர்ந்த பல மொழிகள் இருக்கும்போது, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மட்டும் முன்னுரிமைப் படுத்தி, ஆதிக்கம் செலுத்துவது மற்ற மொழி பேசுவோரை அடிமைப்படுத்துவதற்கு சமம். அது ஜன நாயகமல்ல என்ற அண்ணாதான் தமிழக முதல்வரானபோது, தமிழ்-ஆங்கிலம் எனும் இருமொழிக்கொள்கையைக் கொண்டு வந்தார்.