பிரதிபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவந்துள்ளதே?

ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் வரலாறுதான். எடப்பாடியின் வாழ்க்கை அவருக்கு மட்டுமான வரலாறு, நமக்கல்ல!

Advertisment

திராதி, துடியலூர்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடிக்கு ஏர் Go Back என்று எதிர்ப்புக்காட்டிய கலைஞரின் மகனுக்கு தமிழ் வார்த்தைகள் கிடைக்கலீங்களாண்ணா?

"உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில், உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் கதாநாயகனான முருகன் தமிழில் பேசுவார். பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ள மாநாட்டில் மொழிபெயர்ப்பே இல்லாமல் தமிழில் பேசுவது போன்ற காட்சி எப்படி சரியாக இருக்கும் என்று படக்குழுவினர் கேட்டுள்ளனர். அதற்கு படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் கதாநாயகன் முருகனுமான எம்.ஜி.ஆர்., “"படத்தில் வேண்டுமானால் பலநாட்டுக்காரர்கள் இருப்பதுபோல காட்சி அமையலாம். ஆனால், படத்தைப் பார்க்கப்போகிறவர்கள் தமிழ் ரசிகர்கள். அவர்களுக்குப் புரியும்படியான மொழியில்தான் காட்சி இருக்க வேண்டும்' என்றாராம். அந்தப் படம்தான் எம்.ஜி.ஆர். படங்களிலேயே அதிக வசூலைக் குவித்தது. அதுபோல மு.க.ஸ்டாலின், கலைஞரின் மகன் என்றாலும் அவர் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தது மோடிக்கு எதிராக! மோடிக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் இந்திய ஊடகங்களுக்கும் புரியும்படி 'ஏர் இஹஸ்ரீந் ஙர்க்ண்' என எதிர்ப்புக் காட்டியதால்தான் அது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பங்கு பெருமைப்படும் அளவுக்கு இருந்ததா?

காமன்வெல்த் என்பது இங்கிலாந்தும் அதனிடம் அடிமைப்பட்டிருந்த-அதிகாரத்தின் கீழிருந்த நாடுகளும் கொண்ட கூட்டமைப்பாகும். அதன் சார்பிலான விளையாட்டுப் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா முதலிடமும், ஆட்சி செலுத்திய இங்கிலாந்து இரண்டாவது இடமும், அடிமை நாடுகளிலேயே பரப்பில் பெரியதாக இருந்த இந்தியா மூன்றாவது இடமும் பிடித்துள்ளன. இந்தப் பெருமை போதுமா?

mavalianswers

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

ஃபிடல் காஸ்ட்ரோவும் அவரைத் தொடர்ந்து அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் ஆட்சி செய்த கியூபாவின் புதிய அதிபராக மிகேல் டயஸ் கேனல் பதவியேற்றுள்ளாரே?

அமெரிக்காவின் பொம்மை அரசிடமிருந்து ஆயுதப்புரட்சியின் மூலம் ஃபிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும், கியூபாவுக்கு விடுதலை கிடைக்கச் செய்து, சோஷலிச அரசை நிறுவினார்கள். கடும் நெருக்கடிகள்-அச்சுறுத்தல்களை அமெரிக்கா தொடர்ந்தபோது எதிர்கொண்டு நின்றார் காஸ்ட்ரோ. மக்கள் நலனை முன்னிறுத்தி, காலத்திற்கேற்ற அணுகுமுறைகளைக் கையாண்டனர் காஸ்ட்ரோ சகோதரர்கள். ரவுல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குரிய புதிய அதிபர் கேனல் இதற்கு முன் துணை அதிபராக இருந்தவர். ஜனநாயகம் -கருத்துசுதந்திரம் -மக்கள் நலன் கொண்ட கியூபாவை வலிமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்.

தட்டார்மடம் சித்தர்ராஜ், நெல்லை

பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, "தமிழக மக்கள் காவிரி தண்ணீர் கேட்டால் கிடைக்காது. வேண்டுமானால் கடல்நீரைக் குடிநீராக்கித் தருகிறேன்' என்கிறாரே?

உள்ளூர் எச்.ராஜா-எஸ்.வி.சேகர் போல நேஷனல் லெவலில் சு.சாமி பேசுகிறார். எல்லாருக்கும் சேர்த்துதான், "பா.ஜ.க.வினர் பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது' என "ஆப்'பு வைத்துள்ளார் தேர்தல் மிரட்சியில் இருக்கும் மோடி.

ஆன்மிக அரசியல்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இணையதளமும் செயற்கைக்கோளும் இருந்ததாக திரிபுரா பா.ஜ.க. முதல்வர் சொன்னதை அந்த மாநில ஆளுநரும் ஆதரித்துள்ளாரே? இது உண்மையா? ஆன்மிக அரசியலின் முன்னோட்டமா?

இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்பவை, நடந்த நிகழ்வுகளும் கற்பனைக் காட்சிகளும் சேர்ந்தவை. இலக்கியத்தில் சொல்லப்படுகின்ற அன்னப்பறவை போல தண்ணீர் கலந்த பாலில், பாலை மட்டும் பருகிவிட்டு, தண்ணீரை விட்டுவிடுவது போல நடந்தவற்றை புரிந்துகொண்டு, கற்பனையை விட்டுவிட வேண்டும். அதற்குப் பதிலாக அன்னப்பறவையை இப்போது நீங்கள் தேடினால் கிடைக்காது. உயிரியல் ஆய்வாளர்கள் அப்படியொரு பறவை இல்லை என்கிறார்கள். சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் மதுரையை எரித்த கண்ணகி, மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு மரத்தடியில் நின்றபோது, வான்வழியே வந்த கணவன் கோவலன், அவளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வானுலகு சென்றதாகக் குறிப்பிடுகிறார் இளங்கோஅடிகள்.

புறநானூற்றில் முதுகண்ணன் சாத்தனார் சோழ அரசன் நலங்கிள்ளியைப் பாடும்போது, நற்செயல்கள் செய்வோருக்கு விமானியே இல்லாமல் பறக்கக்கூடிய விமானத்தில் மேல் உலகம் செல்ல வாய்ப்பு அமையும் என்பதை "வலவன் ஏவா வானஊர்தி' எனக் குறிப்பிடுகிறார். இதை அடிப்படையாக வைத்து, திரிபுரா முதல்வர்போல தமிழக முதல்வரும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஃப்ளைட்டில் பறந்தான் என்று சொன்னால், அது கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்பதுபோல காமெடியாகிவிடும். வடமொழி இதிகாசங்களான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ஏவுகணைகள் போன்ற அஸ்திரங்கள், புஷ்பக விமானம், களத்தில் நடப்பதை இருப்பிடத்திலிருந்தே பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கற்பனைத் திறனை அறிவியல் கண்டுபிடிப்புகள்போல சித்தரித்து ஏமாற்ற நினைப்பதும் ஆன்மிக அரசியல்தான்.