மல்லிகா அன்பழகன், சென்னை-78
தமிழக காங்கிரசின் கோஷ்டி சண்டைக்கும் பா.ஜ. க.வின் கோஷ்டி சண்டைக்கும் என்ன வித்தியாசம்?
யார் தலைவர் என்ற கோஷ்டி சண்டை பா.ஜ.க.வில்! எல்லாருமே தலைவர்களாக இருப்பதால் கோஷ்டி சண்டை காங்கிரசில்!
ராகவன், மார்த்தாண்டம்
அழகு, திறமை, சம்பளம் இதில் எதை வைத்து நடிகைகளின் மவுசை முடிவு செய்ய வேண்டும்?
அழகின் அடிப்படையில் திறமைக்கு வாய்ப்புகள் குவியும்போது அதற்கேற்ப சம்பளமும் கூடுவதால் நடிகைகளுக்கு மவுசு ஏறுவது வாடிக்கை. சொந்தக் குரல் வளம் இல்லாவிட்டாலும் டப்பிங் வாய்ஸில் அவர்கள் ஜமாய்த்து விடுவார்கள். ஆனால், திரையுலகின் இலக்கணப்படியான அழகோ, பலவித கதாபாத் திரங்களுக்கேற்ற நடிப்புத் திறனோ இல்லாமல் எளிமையான தோற்றம் கொண்ட வேடத்தில் தன் சொந்தக் குரல் வளத்தை மட்டுமே நம்பிப் பயணித்த கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள்தான் ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வாங்கிய முதல் நடிகை என்பது தமிழ்த் திரை வரலாறு.
ஆர்.துரைசாமி, கோவை
"இந்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்கள் நம்பத் தகுந்தவையாக இல்லை' என பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கைசேர்மன் கருத்து தெரிவித் துள்ளாரே?
அதற்கு எதற்கு பிரெஞ்சு நிபுணர் வரை போக வேண்டும்? புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் என தமிழ்நாடு அரசுக்கு மத்திய பா.ஜ.க. அரசு விருது கொடுக்கிறது. அதே பா.ஜ.க. அரசில் இணையமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் "தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது' என்கிறார். அவரது குமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு துணை ஆய்வாளர் வில்சன், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல் லப்படுகிறார்.
முருகேசன், வீரவநல்லூர்
ஊராட்சித் தலைவர்கள் காசோ லைக்குப் பதில் ஆன்லைன் பரிவர்த்தனை யை நடைமுறைப்படுத்திட நிர்பந்திக்கப் பட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா?
வெளிப்படைத் தன்மை அதிகரிக் கும்போது ஊழலின் அளவு குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனினும், ஊரை ஆட்சி செய்பவர்களுக்கு மட்டும் எதற்கு இந்த நிர்பந்தம்? மாநிலத்தையும் நாட்டையும் ஆள்பவர்களுக்கும் நிர்பந்திக்கலாமே? அப்படிச் செய்தால், எட்டு வழிச்சாலை முதல் எத்தனையோ திட்டங்கள் சத்தமின்றி முடங்கிவிடும்.
நித்திலா, தேவதானப்பட்டி
"ரூபாய் நோட்டில் லட்சுமி படம் போட்டால் ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும்' என்கிறாரே சுப்பிரமணியசாமி?
ஹார்வர்டு பல்கலைக்கழக அறிவாளிகளாக இருந்தாலும் அவர்களின் ரத்தத்துடன் கலந்த இயல்புடனேயே பேசுவார்கள். லட்சுமி விலாஸ் பேங்க்கே திவாலாகும் நிலைக்குத் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், லட்சுமி படம் போட்டால் மதிப்பு உயரும் என்பது ரூபாய் நோட்டி லிருந்து காந்தியை அகற்று வதற்கான கோட்சே கும்பலின் செயலன்றி வேறில்லை.
_________
தமிழி
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளர்களைத் தமிழர்கள் வழிபடு கிறார்கள். ஆனால், அரசியல் தளத்தில் இதனை விமர்சிப்பவர்களையும் தேர்தல்களத்தில் தமிழர்கள் ஆதரிக்கிறார்ளே?
தமிழர்கள் எந்த தெய்வத்திற்கும் எதிரானவர்களில்லை. நாகூர் ஏர்வாடி தர்காக்களில் தங்கள் குறை தீர ஓதுகின்ற இந்துக்கள் உண்டு. வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்குப் போய் இந்து கோவில் பாணியில் மொட்டை போட்டுக் கொள் பவர்கள் உண்டு. பெருமாள் கோவிலுக்குப் போய் தரிசித்து விட்டு புளியோதரை வாங்கிக் கொண்டு வருகிற வழியில், சிவன் கோவிலிலும் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்குகிறவர்கள் உண்டு. தமிழர்களின் இயற்கையான வழிபாட்டு முறை என்பது இயற்கையை வணங்குவதும், முன்னோரை வணங்குவதும், வீரமரணம் எய்தியவர்களை வணங்குவதும்தான். அது காலப்போக்கில் தெய்வ வழிபாடாக மாறியது. முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என ஐவகை நிலங்களுக்கான தெய்வங்களையும் தமிழர் வழிபாடு வகைப்படுத்தியிருந்தது. பின்னர் அவற்றுக்குள் புராணம் புகுந்தது. முருகன், சுப்பிரமணியர் ஆனார். வள்ளிக்கு முந்தைய வாழ்க்கைத் துணையாக தெய்வானை அமைந்தார். எந்தப் பெயரில் இருந்தாலும் அதனைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதாபாத்திரங்களும் அப்படித்தான். சைவத்துக்கும் சமணத்திற்கும், சைவத்துக்கும் வைணவத்திற்கும் நடந்த மோதல்களின் பின்னணியில் முடியாட்சி செய்தவர்களின் ஆதரவு இருந்தது. அதன் காரணமாக ஒரு தரப்பின் ஆளுமை மேலோங்கி மற்றொன்றின் செல்வாக்கு கீழிறக்கப்பட்டது. இப்படி காலந்தோறும் வழிபாட்டு முறைகள் மாறியிருக்கின்றன. ஒன்றுக்கு மாற்றாக மற்றொரு கருத்தை முன்வைப்பதை காமன் பண்டிகையில் எரிந்த கட்சி எரியாத கட்சி என வாதிடுவதிலிருந்து, பட்டிமன்றம், வழக்காடுமன்றம், நாட்டுப்புற எசப்பாட்டு என பல வழிகளிலும் தமிழ்ப் பண்பாடு ஏற்றுக்கொண்டே வந்திருக்கிறது. புராணங்களில் கூறப்படும் தெய்வங்கள் குறித்த விமர் சனங்களும் அப்படிப்பட்டவைதான். கடவுளர்களை விமர் சிப்பவர்கள் தங்கள் வழிபாட்டுக்கு குறுக்கே நிற்காத வரை மக்கள் அதுபற்றிக் கவலைப்படமாட்டார்கள். அரசியல் தளத்தில் இருப்பவர்கள் மக்களின் நன்மைக்கான திட்டங்களைக் கொண்டு வருபவர்களா, மதவெறி சாதிவெறியைத் தூண்டி குளிர்காய்கிறவர்களா என்பதைப் பார்த்துதான் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பார்களே தவிர, அங்கே கடவுள் சர்ச்சைக்கு இடம் கிடையாது. அவரவருக்கு அவரவர் தலைவர்கள்தான் ராமரும் கிருஷ்ணரும்.