எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்

ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்திற்காகவா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது?

தேர்தல் நேரத்தில் கட்சியை ஆரம்பித்து, அப்படியே முதல்வர் ஆகிவிடவேண்டும் என்கிற நோக்கத்தில் தி.மு.க. உருவாக்கப்படவில்லை. படிப்படியாக மக்களின் மனதில் திராவிடக் கொள்கைகளை விதைத்து, தேர்தல் அரசியலில் வெற்றி பெறும் நோக்கமே தி.மு.க.வினுடையது. அண்ணா அதை சாதித்துக் காட்டினார்.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

எழுத்தாளர் மா.இலெ.தங்கப்பா மறைவு?

தமிழ்ப் பற்றும் போராட்ட குணமும் கொண்ட ஒரு பேனா முனையை முறித்துவிட்டது இயற்கை.

mavalianswer

Advertisment

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"இந்தியா மதச்சார்பற்ற நாடாக விளங்க ஜவகர்லால் நேருதான் காரணம்' என்கிறாரே பிரணாப் முகர்ஜி?

nehrubook-release

வெள்ளைக்காரர்கள் வெளியேறிவிட்டால் இவர்களால் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ள முடியுமா என ஏளனமாகப் பார்த்த நாடுகள் வியக்கும்படி சர்வதேசத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நின்று, இந்தியாவை உயர்த்திக் காட்டியவர் முதல் பிரதமர் நேரு. இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் நாடான நிலையில், இந்தியாவை இந்துநாடாக்க நேருவைச் சூழ்ந்திருந்த சிலர் விரும்பியபோது, மதச்சார்பற்ற நாடாக நிலைபெறச் செய்ததில் நேருவின் பங்கு மகத்தானது. இன்றைய சூழலில் நேரு பற்றிய பார்வை அவசியமானது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா எழுதி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் வெளியிட்ட நேரு பற்றிய புத்தகம் அரிய படங்கள் நிறைந்த ஆவணம்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

வடகிழக்கு மாநிலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆவேசமாக சிறைச்சாலைக் கதவை உடைத்து பாலியல் குற்றம் புரிந்தவரை இழுத்து வந்து கொலை செய்ததை குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாக எடுத்துக் கொள்ளலாமா?

சட்டத்தை அவரவரும் கையில் எடுத்து செயல்படுவதே குற்றம்தான். சிறைக்கதவை உடைத்த பொதுமக்களிடம் இருந்தது கோபம். அவர்களின் செயல் தவறு என்றாலும் அதில் ஒரு நியாயம் உள்ளது. சட்டத்தைப் போலீசாரே கையில் எடுத்துக்கொண்டு, பல பத்தாயிரம் பேர் திரண்ட தூத்துக்குடி பேரணியில், குறிவைத்து 13 பேரை சுட்டுக்கொன்றது அநியாயம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"கர்நாடகாவில் காங்கிரஸ் தயவில்தான் ஆட்சி அமைத்தேன். அதனால் காங்கிரசுக்குத்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கர்நாடக மக்களுக்கு அல்ல' என முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறாரே?

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 40க்கும் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது இடம்பிடித்த மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் குமாரசாமி முதல்வராகியிருப்பதற்கு காரணம், இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவுதான். அதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார் குமாரசாமி. அதே நேரத்தில், அதிக இடங்களில் வென்ற பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காமல் செய்தது மக்கள்தானே! அதுதானே குமாரசாமியை முதல்வராக்கியிருக்கிறது. எனவே, ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களுக்கும் சேர்த்துதான் நன்றிக்கடன் பட்டுள்ளார், பதவிக்காகவே அரசியல் செய்யும் குமாரசாமி.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடந்தால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெற வாய்ப்பு?

கவனம் சிதறாமல் கட்டுக்கோப்புடனும் உள்ளடி வேலைகள் இல்லாமலும் செயல்பட்டால், கடந்த முறை 1.1% வித்தியாசத்தில் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

__________________________

ஆன்மிக அரசியல்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

ஆன்மிக அரசியல் சிறுபான்மை மதத்தினருக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?

எல்லா மதத்தினருக்குமான ஆன்மிக உரிமைகளை நிலைநாட்டுவதுதான் ஆன்மிக அரசியலாக இருக்கமுடியும். ஆனால், ஆன்மிகம் என்கிற பெயரில் தங்கள் மதம் சார்ந்தவற்றை முன்வைத்து, மற்ற மதங்களை அச்சுறுத்தும் போக்கே உலகின் பல பகுதிகளிலும் இருக்கிறது. பக்கத்து நாடான பங்களாதேஷில் முஸ்லிம்கள் அதிகம். அங்கே இந்துக்கள் சிறுபான்மையினர். அவர்கள் மீதான தாக்குதல்-நெருக்கடிகள் குறித்து எழுதியவர்தான் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். மத அடிப்படைவாதிகள் அவருக்கு எதிராக "பட்வா' விதித்ததால், அவர் பங்களாதேஷைவிட்டு வந்து, இந்தியாவில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. அருகிலுள்ள மியான்மரில் பவுத்த மதம்தான் பெரும்பான்மையானது. அங்கே ரோஹிங்யா முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. போராட்டம்-தாக்குதல்-கொலை எனத் தொடர்வதால் அவர்கள் அங்கிருந்து பங்களாதேஷுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இலங்கையின் நிலை என்ன என்பது நம் எல்லோருக்கும தெரியும். அந்த நாட்டில் புத்த பிட்சுக்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றனர்.

பவுத்தத்தில் தேராவதம் என்கிற பிரிவைச் சேர்ந்தவர்களின் ஆளுமையில் உள்ள இலங்கையில், மொழி ரீதியாக மட்டுமின்றி மத ரீதியாகவும் சைவநெறியைப் பின்பற்றும் தமிழர்களும், கிழக்கு மாகாணத்தில் அதிகமாக உள்ள தமிழ் முஸ்லிம்களும் சிங்கள பவுத்த வெறியர்களால் உரிமைகள் பறிக்கப்பட்டு, படுகொலைகளுக்குள்ளானார்கள். ஆன்மிக அரசியல் என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்றாலும், எங்கே எந்த மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களிடம் வெறியூட்டி, சிறுபான்மையினரை ஒடுக்கும் நிகழ்வாகவே தொடர்கிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஆன்மிக அரசியல் என்றால் நடைமுறையில் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்.