டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
வைகோவுக்கும் தி.மு.க.வுக்குமான உறவு எப்படி உள்ளது?
பங்காளிச் சண்டைகள் ஓய்ந்து, தனது தாயகமான தி.மு.க.வுடன் தற்போதைய நிலையில் சகோதரப் பாசத்துடன் இருக்கிறார் வைகோ. தேர்தல் விருந்தின்போது பந்தியில் என்ன மரியாதை என்பதையும் பார்க்க வேண்டும்.
ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்
மக்களையும் அவர்களின் நலனுக்காகப் போராடியவர்களையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் தமிழ்நாட்டில் இதுதான் முதல் முறையா?
பிரிட்டிஷ் காலத்தில் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பெருங்காமநல்லூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழக இளைஞர்களும் மாணவர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மட்டுமின்றி துணை ராணுவத்தை வரவழைத்தும் சுட்டுக் கொன்ற கொடூரம் நிகழ்ந்தது. தி.மு.க. ஆட்சியில் கோவில்பட்டியிலும் தேனியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டன. எனினும், அ.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
வைகோவுக்கும் தி.மு.க.வுக்குமான உறவு எப்படி உள்ளது?
பங்காளிச் சண்டைகள் ஓய்ந்து, தனது தாயகமான தி.மு.க.வுடன் தற்போதைய நிலையில் சகோதரப் பாசத்துடன் இருக்கிறார் வைகோ. தேர்தல் விருந்தின்போது பந்தியில் என்ன மரியாதை என்பதையும் பார்க்க வேண்டும்.
ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்
மக்களையும் அவர்களின் நலனுக்காகப் போராடியவர்களையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் தமிழ்நாட்டில் இதுதான் முதல் முறையா?
பிரிட்டிஷ் காலத்தில் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பெருங்காமநல்லூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழக இளைஞர்களும் மாணவர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மட்டுமின்றி துணை ராணுவத்தை வரவழைத்தும் சுட்டுக் கொன்ற கொடூரம் நிகழ்ந்தது. தி.மு.க. ஆட்சியில் கோவில்பட்டியிலும் தேனியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டன. எனினும், அ.தி.மு.க. ஆட்சிகள் நடைபெற்ற காலங்களில்தான் அதிகளவில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். காலத்தில் வாகைக்குளத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு, மெரினாவில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, வடமாவட்டங்களில் நக்சலைட்டுகள் என்ற பெயரில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு எனத் தொடங்கி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கலைஞர் கைதை கண்டித்த தி.மு.க.வினர், கோவில்பட்டி விவசாயிகள், தேனி இறுதி ஊர்வலத்தில் என துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டு, தற்போது எடப்பாடி ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு, அரசாங்க கணக்குப்படியே 13 பேர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
இந்த சிறுவயதிலேயே நடிகையர் திலகமாக அசத்தியிருக்கிறாரே கீர்த்தி சுரேஷ்?
குருவி தலையில் பனங்காயை வைத்தார்கள். அதை கிரீடமாக மாற்றி சூடிக்கொள்ளும் லாவகமும் பக்குவமும் அந்தக் குருவிக்குத் தெரிந்திருக்கிறது. பெயரிலேயே கீர்த்தி இருப்பதால், கறுப்பு-வெள்ளை காலத்து நாயகி சாவித்திரியை, வண்ணப்படமாக வார்த்தெடுத்துள்ளார் இளம் நடிகை.
பி.மணி, வெள்ளக்கோவில்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணி எளிதாக 200 ரன்களை எடுக்கின்ற நிலையில், 50 ஓவர் கொண்ட சர்வதேச போட்டியில் 500 ரன்களை எடுக்க முடியாதா?
உங்கள் கணக்குப்படி பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 1000, 2000 என ரன் அடிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. சாதாரணமாக ஓடுவதைவிட, ஒரு நாய் துரத்தும்போது வேகமாக ஓடுவோம். டெஸ்ட் மேட்ச் என்பது சாதா ஓட்டம், 50 ஓவர் என்பது குறிப்பிட்ட கால அளவிலான ஓட்டம், ட்வென்ட்டி 20 என்பது நாய் துரத்தும்போது ஓடுகின்ற வேகம்.
அயன்புரம் த.சத்தியநாராயணன் சென்னை-72
எஸ்.வி.சேகரை கைது செய்யவே முடியாதா?
அவர் என்ன தூத்துக்குடிவாசியா? அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு! "ஒளியத் தெரியாதவர் தலையாரி வீட்டில் ஒளிந்தார்' என்பது பழமொழி. "ஒளியத் தெரிந்தவர் தலைமைச் செயலாளர் தயவில் ஒளிந்துகொண்டார்' என்பது எஸ்.வி.சேகர் உருவாக்கியிருக்கும் புதுமொழி.
தூயா, நெய்வேலி
சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் மீண்டும் சசிதரூரின் கழுத்தை இறுக்குகிறதே?
பெரிய இடத்து மர்ம மரணங்கள் அரசியல் காரணங்களுக்காக சில நேரங்களில் இறுக்கும். சில சமயங்களில் நழுவும். இது சுனந்தா புஷ்கர் மரணத்தில் மட்டுமல்ல, ஜெயலலிதா மரணமும் அப்படித்தான் என்பதை விசாரணைக் கமிஷனின் போக்கு காட்டுகிறது.
--------------------
ஆன்மிக அரசியல்
ரா.கீர்த்திப்பிரியன், துடியலூர்
"ஆன்மிகத்தின் பெயரில் அரசியல் செய்வது தவறு' என்று செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார். ஆன்மிகம் என்பதே அரசியல்தானே?
காலையில் பல்துலக்கப் பயன்படும் பற்பசையிலிருந்து, இரவில் பயன்படுத்தும் கொசுவிரட்டி வரை எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஆன்மிகமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. அது யாருக்கான உரிமைகளை நிலைநாட்டுகின்ற அரசியல் என்பது முக்கியமானது. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து நிகழ்த்திய ஆய்வுரையில், தேவதாசி குலத்தினர் பற்றிய ஆங்கில நூல் ஒன்றின் மேற்கோளைக் காட்டிய காரணத்தால், அவருக்கு எதிராகக் கொந்தளித்து வீதிக்கு வந்து போராடியவர்களின் நோக்கம் ஆன்மிகம் அல்ல, பச்சையான அரசியல். அதுபற்றி திருவில்லிபுத்தூர் ஜீயர் கருத்து தெரிவிக்கும்போது, "எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்' என்கிற அளவுக்கு அரசியல் ரவுடி போலவே பேசினார்.
ஆன்மிகத்தை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதும் அதே பாணிதான். தேவதாசி என்ற முறையைக் கொண்டு வந்ததே கோவிலில் ஆன்மிகத்தை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தியவர்கள்தான். அதற்காக குறிப்பிட்ட சில சமுதாயத்தின் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு, கொடுமைக்குள்ளாகினர். அதனை ஆதரித்த ஆதிக்க உணர்வாளர்கள்தான், ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் ஆய்வுரையில் "தேவதாசி' என்னும் வார்த்தை குறிப்பிடப்பட்டதும் கொந்தளித்தார்கள். அரசியல்வாதிகள் செய்யும் நேரடி அரசியலுக்கு குறைவின்றி, ஆன்மிகத்தின் பெயரால் மறைமுக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.