பி.மணி, வெள்ளக்கோவில்

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி மேலாண்மை ஆணையம் இவற்றில் எது தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும்?

தமிழ்நாட்டின் நன்மையை மட்டுமல்ல, அதன் உரிமையையும் நிலைநாட்ட உருவாக்கப் பட்டதுதான் நடுவர் மன்றம். அதன் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது வாரியம்தான். அதுதான் முழுமையான பலனைத் தரக்கூடியது.

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

Advertisment

கலைவாணரிலிருந்து கவுண்டமணி வரை எந்த நகைச்சுவை நடிகராவது எஸ்.வி.சேகர் போல பண்பாடற்ற சொல்லைச் சொல்லிவிட்டு கண்ணாமூச்சி காட்டியிருக்கிறார்களா?

கலைவாணர் காலத்துச் சொற்களுக்கும் கவுண்டமணி காலத்துச் சொற்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஆனாலும், அவை காட்சியமைப்பைச் சார்ந்தே இருந்தன. பொதுத்தளத்தில் இழிவான சொற்களைப் பயன்படுத்தியதில்லை. எஸ்.வி.சேகர்தான் தனது நாடகங்களில் இரட்டை அர்த்த வசனங்களையும், சமூக வலைத்தளங்களில் இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தும் பண்பாட்டைக் கொண்டிருக்கிறார்.

Advertisment

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

ஆபாச வசனங்கள் நிறைந்த "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தை சென்சார் எப்படி அனுமதித்தது?

சென்சார் கத்திரி, ஆளுக்கும் நேரத்துக்கும் தகுந்தபடி வெட்டக்கூடியது. 1960-களில் "சந்திரோதயம்' படத்தில் ‘"இதழோடு இதழ் சேர்த்து விளையாடவோ'’ என்னும் பாடல் வரியையே தடை செய்த சென்சார், 1980-களில் "புன்னகை மன்னன்' படத்தில், இதழோடு இதழ் சேர்த்து நாயகனும் நாயகியும் காதலில் உருகும் காட்சியையே அனுமதித்தது. பாக்யராஜ் படங்கள் சக்கைப் போடு போட்ட காலத்தில், ‘"ஆராரோ.. ஆரிரரோ'’ படத்தில் ‘"உப்பு மூட்டையைத் திருப்பிப் போடணும்'’ என்கிற வசன வரி டபுள் மீனிங் என விமர்சிக்கப்பட்டது. இப்போதோ, ‘காட்டுறது... போடுறது... அடிக்கிறது... வேலை செய்யுறது...’ என ஸ்ட்ரெய்ட் மீனிங்கிலேயே வசனங்களை அனுமதிக்கிறது சென்சார். ஏற்கெனவே "ஹரஹர மகாதேவகி' படத்தை இதேபோல தந்து வசூல் பார்த்த இயக்குநர், அதைவிட தீவிரமான மனநிலையுடன், "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' எனத் தலைப்பிலேயே ஓப்பனாகப் பேசும் படத்தை தந்திருக்கிறார். இது பற்றி கேள்விகளும் விமர்சனங்களும் வந்தால் படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி என்பதே படக்குழுவின் கணக்கு.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

கர்நாடகத் தேர்தல் முடிவுக்குப் பிறகும், மூன்றாவது அணி என்பது சாத்தியம்தானா?

தற்போதைய நிலையில், காங்கிரசை தவிர்த்துவிட்டு மூன்றாவது அணி அமைத்தாலும் பா.ஜ.க.வுக்கே சாதகம். மூன்றாவது அணி அமைக்க நினைக்கும் கட்சிகளை காங்கிரஸ் தவிர்த்தாலும் பா.ஜ.க.வுக்கே சாதகம்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

மத்திய-மாநில அரசுத்துறை-பொதுத்துறை ஆகியவற்றில் பணி செய்து ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பென்சன் தேவைதானா?

அரைக்காசு சம்பாதித்தாலும் அரசாங்க சம்பளமாக இருக்கவேண்டும் என்கிற அளவில் அரசு உத்தியோகங்கள் பணி பாதுகாப்பாக அமைந்த காரணத்தால், 58 வயது வரை அரசாங்கத்திற்காக உழைத்தவர்களின் மிச்ச வாழ்நாளுக்கும் பென்சன் வழங்கப்படுகிறது. ஆனால் நிர்வாகச் சீர்கேடுகளால் மத்திய-மாநில அரசாங்கம் பெரும் கடனில் தத்தளிக்கும் நிலையில், பென்சன் தேவையா எனப் பொதுமக்கள் மனதில் கேள்வி எழுகிறது. தன் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கே பாதுகாப்பு வழங்க அரசாங்கத்தால் முடியாவிட்டால், பொதுமக்களுக்கு எப்படி வழங்க முடியும் என்கிற கேள்வியும் இதில் அடங்கியுள்ளது.

rajivgandhi

வி.கார்மேகம், தேவகோட்டை

27 ஆண்டுகளாகியும் ராஜீவ் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையாமே?

பின்னணியில் இருந்த டெல்லி பட்டணத்து அரசியல் புள்ளிகளை அப்போதே கண்டு விட்டார்கள்; பிடிக்கத்தான் இன்றுவரை முடியவில்லை.

ஆன்மிக அரசியல்

நித்திலா, தேவதானப்பட்டி

பைபிள் -குரான்- இந்து மத வேதங்கள் -புத்த தம்மம் -இவற்றைப் பின்பற்றி அரசியல் செய்வதுதான் ஆன்மிக அரசியலா?

"ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டு' என்கிறது பைபிள். எத்தனை பேர் அதற்குத் தயாராக இருக்கிறார்கள்? "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என்கிறது கீதாசாரம். நடப்பது நடக்கட்டும் என்று எத்தனை பேர் சும்மா இருக்கிறார்கள். "ஆசையே துன்பத்துக்கு காரணம்' என்றார் புத்தர். ஆனால், இன்று துறவிகளும்கூட, அத்தனைக்கும் ஆசைப்படு என தனது சீடர்களுக்குப் போதித்தபடி, அவர்களே மண் -பொன் -பெண் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிறார்கள். மத நூல்களில் நல்ல போதனைகள் இருக்கின்றன. அதன் நோக்கம், மனித சமுதாயத்தில் அன்பும் அறமும் தழைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், மதவாதிகளிடம் அடிப்படைவாதமே மேலோங்கியிருக்கிறது. அது சர்வாதிகாரத்தனமாக செயல்படுத்தப்படுகிறது. அதையே முழுமையான அரசியலாக கொண்டுவந்தால், அது மதநூல்கள் சுட்டிக்காட்டும் கருத்துகளுக்கே எதிராக அமைந்துவிடும். வன்முறை -தீவிரவாதம் -சுயநலம் -மோசடி இவை எந்த மதத்தில் இருந்தாலும் அவை களையப்படவேண்டும். அவற்றைக் கொண்டு அரசியல் லாபம் தேட நினைப்பவர்கள், ஆன்மிக அரசியல் என்கிற முகமூடி அணிந்து வந்தாலோ, அந்த முகமூடியுடன் யாரையாவது முன்னிறுத்தினாலோ மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.