வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"நீட் தேர்வு என்பது மருத்துவர் ஆக்கவா- மனநோயாளிகளாக மாற்றவா' என அ.தி.மு.க. நாளேடு விமர்சனம் செய்துள்ளதே?

நீட் தேர்வினால் மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் உயிரிழப்பதும், மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாவதும் ஆண்டுதோறும் தொடர்கிறது. அ.தி.மு.க. நாளேடு அதை விமர்சிப்பது சரி.. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியோ சட்டமன்றத்தில், தான் இயற்றிய தீர்மானம் என்னவாயிற்று என்றே தெரியாமல் மவுனம் காக்கிறதே, அது எந்தளவில் சரி?

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

Advertisment

ஆபாச வசனங்கள் நிறைந்த "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தை சென்சார் எப்படி அனுமதித்தது?

சென்சார் கத்திரி, ஆளுக்கும் நேரத்துக்கும் தகுந்தபடி வெட்டக்கூடியது. 1960களில் "சந்திரோதயம்' படத்தில் ‘"இதழோடு இதழ் சேர்த்து விளையாடவோ'’ என்ற பாடல் வரியையே தடை செய்த சென்சார், 1980களில் "புன்னகை மன்னன்' படத்தில், இதழோடு இதழ் சேர்த்து நாயகனும் நாயகியும் காதலில் உருகும் காட்சியையே அனுமதித்தது. பாக்யராஜ் படங்கள் சக்கைப் போடு போட்ட காலத்தில், ‘"ஆராரோ.. ஆரிரரோ"’ படத்தில் "உப்பு மூட்டையைத் திருப்பிப் போடணும்'’ என்கிற வசன வரி டபுள் மீனிங் என விமர்சிக்கப்பட்டது. இப்போதோ, ‘காட்டுறது.. போடுறது.. அடிக்கிறது.. வேலை செய்யுறது..’ என ஸ்ட்ரெய்ட் மீனிங்கிலேயே வசனங்களை அனுமதிக்கிறது சென்சார். ஏற்கனவே "ஹரஹர மகாதேவகி' படத்தை இதேபோல தந்து வசூல் பார்த்த இயக்குநர், அதைவிட தீவிரமான மனநிலையுடன், "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' எனத் தலைப்பிலேயே ஓப்பனாகப் பேசும் படத்தை தந்திருக்கிறார். இதுபற்றி கேள்விகளும் விமர்சனங்களும் வந்தால் படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி என்பதே படக்குழுவின் கணக்கு.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

Advertisment

அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக செயல்படுவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மீறுவது இவையெல்லாம் இந்தியாவைத் தவிர வேறு நாடுகளில் உண்டா?

ஜனநாயகத்தை மதிக்காத நாடுகளில் ஆட்சியாளர்கள் விருப்பத்திற்கேற்ப அரசமைப்புச் சட்டத்தை வகுப்பதும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுவதும் உண்டு. ஜனநாயகம் என்பது இவை இரண்டுக்கும் மதிப்பளிக்கும் அமைப்பு. இந்தியாவிலோ தற்போது, ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகாரத்தைக் கையாளும் தொழில்நுட்பத்தை பா.ஜ.க. கண்டுபிடித்திருக்கிறது. 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்னென்ன அக்கிரமங்கள் செய்தனவோ அவற்றை 4 ஆண்டுகளிலேயே மிஞ்சிவிடவேண்டும் என்பதில் மோடி அரசு அதிபயங்கரமாக இருக்கிறது.

ஜி.ஆர்.சந்திரன், ஈரோடு-2

கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்க அரசாங்கமே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வருமானம் பார்ப்பது போல, செக்ஸ் தொல்லைகளால் அதிகரிக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, அரசாங்கமே பாலியல் தொழிலுக்கு உரிமம் தருவது மும்பைபோல இங்கும் சாத்தியமா?

சாத்தியம்தான்.. ஆனால் கள்ளச்சாராயத்தைப் போல டாஸ்மாக்கும் சமுதாயச் சீரழிவை வளர்க்கும் நிலையில், பாலியல் தொழில் உரிமத்தினால் புதுவித சிக்கல்கள் உருவாகாதபடி தடுக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டுமே!

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு

"துக்ளக்' சோ- "துக்ளக்' குருமூர்த்தி ஒப்பிடுக

சிரிப்பு நடிகரை அரசியல் மேதைபோல காட்டுவதற்கு பயன்பட்ட துக்ளக், இப்போது ஆடிட்டர் என்ற தகுதியுடன் அரசியல் தரகு வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ்.காரரை சாணக்கியர் போல முன்னிறுத்துகிறது. சமூக நீதிக்கும் மதநல்லிணக்கத்திற்கும் எதிரான மனுநீதி பேசும் துக்ளக்கின் விஷக்கொடுக்கு அப்படியேதான் இருக்கிறது.

british princes

நித்திலா, தேவதானப்பட்டி

என்னதான் ஜனநாயகத்தில் முன்னோடி நாடாக இங்கிலாந்து இருந்தாலும், இப்போதும் அரச குடும்பத்து திருமணம் என்றால் அங்குள்ள மக்கள் வாய்பிளந்து பார்க்கிறார்களே?

அரண்மனை ரகசியங்களும், அரண்மனைவாசிகளின் வாழ்க்கையும் எப்போதும் பொதுமக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுபவை. அதிலும் இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனை என்றால், அந்நாட்டு மக்களுக்கும் ஜனநாயக ஆட்சியாளர்களுக்கும் தனி மரியாதை. தற்போது நடைபெற்ற இளவரசர் ஹாரி திருமணத்திற்கு நேரில் குவிந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு இலட்சம். ஹாரியின் மனைவியாகி, அரண்மனையின் புதிய இளவரசியாகியுள்ள மேகன் மார்க்லே கறுப்பினத்தின்வழி வந்தவர் என்பதும் நடிகையாக பிரபலமானவர் என்பதும் கூடுதல் சிறப்பு. ஹாரியின் அம்மா டயானாவை இளவரசர் சார்லஸ் திருமணம் செய்தபோது, ஒரு சாதாரண குடும்பத்துப் பெண் அரண்மனையில் நுழைகிறார் என்பது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அதன்பின் பல சர்ச்சைகள் கிளம்பின. அதற்கு இடம்தராமல் புதுமணத் தம்பதிகளான ஹாரி-மேகன் மார்க்லே இணையர் வாழ்வாங்குவாழ நேரில் கூடிய லட்சம் பேரும், டி.வி.யில் பார்த்த கோடிக்கணக்கானவர்களும் வாழ்த்தியுள்ளனர்.

________________

ஆன்மிக அரசியல்

பாலாசத்ரியன், பாகாநத்தம்

கோவில்களையும் அதன் சொத்துகளையும் தமிழ்நாடு அரசாங்கம் தனது இந்து அறநிலையத்துறையின்கீழ் நிர்வகிக்கக் காரணம் என்ன?

மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்கள் பலவும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. அவை வழிபாட்டுக்குரிய இடங்கள் என்பதையும் தாண்டி, மன்னராட்சிக் காலங்களில் கருவூலங்களாக, உணவு தானிய சேமிப்பு கிடங்குகளாக இருந்திருப்பதை வரலாற்றின் வாயிலாக அறிய முடிகிறது. கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளும் நிலங்களும் நீர்நிலைகளும் வழிபாட்டு வசதிகளுக்கு மட்டுமின்றி, அரசு நிர்வாகத்திற்கும் பயன்பட்டு வந்தன. காலப்போக்கில் உயர்சாதியினர் கைகளிலும்-ஊரில் செல்வாக்குமிக்க குடும்பத்தினர் கைகளிலும் சிக்கிக் கொண்டன. சிவன் சொத்து குல நாசம் என்ற அச்சத்தையும் மீறி, கோவில் சொத்துகளை அபகரித்தும், ஆக்கிரமித்தும், அதிகாரம் செலுத்தியும் வந்தவர்களிடமிருந்து அதனை மீட்கவே, பிரிட்டிஷார் காலத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை முழுமையான அளவில் உருவானது. கோவில் நிர்வாகத்தில் இந்து மதத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை கோவிலையும் சொத்துகளையும் நிர்வாகம் செய்யும் நிலை உருவானது. தற்போது இதிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளதால், நிர்வாக சீர்திருத்தம் அவசியமாகிறது. இதையே அரசியலாக்கி, கோவில்களை மீண்டும் தாங்கள் அபகரிக்க திட்டம் போடுகிறார்கள் மதவாதப் பேர்வழிகள்.