மா.சந்திரசேகரன், மேட்டுமகாதானபுரம்
"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க யாரும் இடையூறாக இருக் கக்கூடாது' என்கிறாரே பொன்.ராதாகிருஷ்ணன்?
ஜெயலலிதாவின் பெயருக்கு சாதகமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டு, அவரது கட்சியையும் ஆட்சியையும் தங்கள் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தவர்களின் தலைமையில் இயங்குபவராயிற்றே நமது மத்திய இணையமைச்சர்! அவரது வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் ஆணையம் விசாரணை அறிக்கையை வெளி யிடக்கூடாது என்கிற உயர்நீதிமன்ற உத்தரவு பற்றி?
அரசாங்கம் நிய மித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடப்பதால், அதற்கு முன்பாக ஆளு நர் நியமித்த ஆணை யத்தின் விசாரணையை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. எத்தனை விசா ரணை நடந்தாலும் ராஜ்பவனின் ரகசிய அறைகள் வரையிலுள்ள உண்மைகள் வெளிவருமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
ஊழலில் பா.ஜ.க.வுடன் காங்கிரசால் போட்டியிட முடியாது. அதில் பா.ஜ.க.வே வெற்றி பெறும் என்கிறாரே ராகுல்?
முந்த்ரா ஊழல் தொடங்கி சரிகா நாயரின் சோலார் பேனல் ஊழல்வரை காங்கிரசின் தேசிய -மாநில அளவிலான ஊழல் சாதனைகள் பெருமளவில் உள்ளன. ஆட்சியில் காங்கிரசுடன் ஒப்பிடும்போது குறைந்த காலமே ஆன பா.ஜ.க.வும் ராணுவ வீரர்களின் சவப்பெட்டி ஊழல் தொடங்கி, குவாரி ஊழல், வியாபம் ஊழல் என தனது "மாமூல்' நடவடிக்கையை கச்சிதமாக செய்திருக்கிறது. ஒன்றையொன்று விஞ்சக்கூடிய சரிக்குச் சமமான போட்டிதான் இரண்டு கட்சிகளுக்கும்.
மணி, கே.கே.நகர், சென்னை
கர்நாடக ஆளுநர், நீதிமன்றம் இரண்டும் கர்நாடகாவில் பா.ஜ.க.வின் மேட்ச் பிக்ஸிங்கிற்கு துணை போவது சரியா?
அம்பயராக இருக்கவேண்டிய ஆளுநரையே ஆட்டக்காரர்களில் ஒருவராக மாற்றிவிடுவது பா.ஜ.க.வுக்கு வழக்கமாகிவிட்டது. தேர்டு அம்பயர்களான தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவையும் உடனடியாக அவுட் கொடுக்காமல், ஆடும் வரை ஆடட்டும் என அனுமதிப்பதால், ஜனநாயகப் பந்துதான் இங்குமங்குமாக உருளுகிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
92 வயதில் மலேசியாவின் பிரதமராகி யிருக்கிறாரே மகாதீர் முகமது?
பொதுவாழ்வுக்கு மக்கள் ஆதரவும் முனைப்பான செயல்பாடுகளும்தான் முக்கியமே தவிர, வயது இரண்டாம்பட்சம்தான் என்பதை மகாதீரும் நிரூபித்திருக்கிறார். மலேசியாவில் 60 ஆண்டுகால ஆளுங்கட்சியை வீழ்த்தும் கூட்டணி வியூகம்தான் மகாதீரை மீண்டும் பிரதமராக்கி யுள்ளது. அவர் மலேசியாவின் ஏழாவது பிரதமரானவுடன் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிறைப்பட்டிருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். பதவி இழந்த முன்னாள் பிரதமரின் வீட்டில் ரெய்டுகள் வேகமெடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. போன்ற வரிவிதிப்புகளை தளர்த்தியிருக்கிறார். ஆக, அர சியலை சரியாகத்தானே செய்கிறார் 92 வயதுக்காரர்.
லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)
"இந்தியா என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான்' என வைகோ கூறுகிறாரே?
நிர்வாக வசதிக்காக பிரிட்டிஷார் உருவாக் கிய நிரந்தர அமைப்புதான் இந்தியா. பலவகை மதங்கள், மொழிகள், பண்பாடு என்கிற பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம். ஆனால், பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அந்த பன்முகத்தன்மை யைச் சிதைக்கின்ற வகையில் இருப்பதன் வெளிப்பாடுதான் வைகோவின் வார்த்தைகள்.
ஆன்மிக அரசியல்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆன்மிக அரசியல் வந்தால் பகுத்தறிவுக் கருத்துகளுக்கு அரசாங்கம் தடையுத்தரவு போடுமா?
ஆன்மிகத்திலும் பகுத்தறிவாளர்கள் நிறையபேர் உண்டு. உதாரணத்திற்கு, மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் பெய்யும் பனி, உடலுக்கு நல்லது என்பதால், ஆன்மிகச் சிந்தனையுள்ளவர்கள் அந்த விடிகாலை பனிப்பொழுதில் பஜனைகள் பாடிக்கொண்டு தெருக்களில் நடக்கிறார்கள். அதன்பின், மிளகும் சீரகமும் கலந்த பொங்கல் பிரசாதத்தை சாப்பிடும்போது உடலுக்கும் குரலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. பெண்களுக்கு அந்தளவு நடமாடும் சுதந்திரம் வழங்காத மதக்கட்டுப்பாடுகள் நிறைந்த காலத்தில், மார்கழிமாத அதிகாலைப் பனி நேரத்தில், வீட்டு வாசலில் பெரிய கோலம் போடும் வேலை பெண்களுக்குத் தரப்பட்டது. இதனால், வழக்கத்தைவிட அதிக நேரம் செலவழித்துக் கோலம் போடும் பெண்களுக்கும் மார்கழிப் பனியின் பலன் கிடைத்தது. இது ஆன்மிகம் சார்ந்த பகுத்தறிவு. ஆனால், தற்காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகாலையில் எழுவதற்கு அலுப்புப் பட்டுக்கொண்டு, முதல்நாள் இரவிலேயே, டி.வி. சீரியல் எல்லாம் பார்த்து முடித்தவுடன், வீட்டு வாசலில் பெரிய கோலம் போடுகிறார்கள் பெண்மணிகள். மார்கழி அதிகாலைப் பனி உடலுக்கேற்றது. இரவுநேரப் பனி உடலுக்கு கேடு. இந்தப் பகுத்தறிவுப் பார்வை இல்லாத ஆன்மிகம் அரசியலாகி, அரசாட்சி செய்து, சட்டங்கள் இயற்றினால் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, சாதா அறிவுக்கே தடையாகத்தான் இருக்கும்.