கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி

இந்தியாவில் ஒரு கோடி குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறதே?

1.01 கோடி, அதாவது 1 கோடியே 1 லட்சம் குழந்தைகள் என யுனிசெஃப் கூறுகிறது. அதுவும் இது 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்குப்படிதான். அதன்பின் நிலவரம் மேம்பட்டிருக்கிறதா,… சீரழிந்திருக்கிறதா என அடுத்த கணக்கெடுப்பு நடந்தால்தான் தெரியும்.  பேதமில்லாமல் இந்தியாவை ஆண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. அதற்கடுத்தபடியாய் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளாமல் நிறுவனங்களை, கடைகளைத் தடுக்கவேண்டிய அதிகாரிகளுக்கும் பொறுப்புண்டு. 1 கோடியே 1 லட்சம் குழந்தைகள் படிக்கும் வயதில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக வந்ததில் என்ன பெருமிதம் இருக்கமுடியும்?

Advertisment

எச்.மோகன், மன்னார்குடி

பள்ளிக்கூடம் -நூலகம் இரண்டில் அறிவை வளர்க்கும் இடம் எது?

இரண்டுமேதான். முதலில் அறிவை வளர்ப்பதற்கான அடிப்படை சாதனமாகிய மொழி, கணிதம் குறித்து பள்ளியில் கற்றுக்கொள்கிறோம். நூலகத்தில் இத்தனை நூற்றாண்டுகளாய் இந்த உலகத்தில் என்ன நடந்தது என்பது முதல் மற்ற மனிதர்கள் பெற்ற அனுபவங்களின் தொகுப்பை வாசித்து, நாமே அறிவை வளர்த்துக்கொள்கிறோம். இந்த இரண்டு இடங்களுக்குமே சென்றும் அறிவை வளர்த்துக்கொள்ளாதவர்களும் இருக்கமுடியும்.

Advertisment

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

ஆயிரம் உண்டிங்கு ஜாதி, இங்கு ஆணவக் கொலை வந்து புகலென்ன நீதி -எனப் பாடலாமா?

அந்த ஆயிரம் ஜாதிகள் அன்று பாரதியார் காலத்தில் இல்லாமலிருந்திருந்தால் அந்நியர் வந்து புகுவதற்கு சிரமமாகவே இருந் திருக்கும். அதேபோல ஆயிரம் ஜாதிகள் ஒன்றாக மாறிவிட்டால் ஆணவக் கொலைக்கான அவ சியமும் தானாகவே மறைந்துவிடும். பாட்டு வரிகளை மாற்றுவதற்கு காட்டும் அக்கறையை, ஜாதிய பேதங்கள் மறைவதில் நாம் காட்டினால் நல்லது.

வண்ணைகணேசன், கொளத்தூர்

அண்ணாமலையார் கோயிலில் தம்பதிகள் முட்டை பிரியாணி சாப்பிட்டதால் பரிகார பூஜை செய்து புனித நீர் தெளித்திருக் கிறார்களே?

அந்த தம்பதி தெரிந்து செய்தார்களா,  இல்லை தெரியாமல் செய்தார்களா தெரியவில்லை. ஆனால் தன் பக்தனின் மன உறுதியைச் சோதிக்க சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டு பரிமாறச் சொன்னதாகவும், வேடனான கண்ணப்ப நாயனார், பன்றி இறைச்சி படைத்தபோது முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றும் ஆன்மிக இலக்கியம் கூறுகிறது. ஒவ்வாமை மகேசனுக்கா, மற்றவர்களுக்கா என்பதுதான் கேள்வி.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

ரூ.10 கோடி மதிப்பிலான ரேஸ் காரை நடிகர் அஜித்குமார் வாங்கியிருப்பது சரியா?

இதில் சரி -தவறு சொல்ல நாம் யார்? அவர் காசு, அவர் வாங்கியிருக்கிறார். ரேஸில் ஓட்டி ஜெயித்தால் சந்தோஷம். ஆனால் இரண்டு குதிரையில் சவாரி செய்கிறவன் போகுமிடம் சென்று சேரமாட்டான் என்றொரு வாசகம் உண்டு. சினிமாவில் ஒரு கால், ரேஸில் ஒரு கால் என வைப்பது இரண்டிலும் சரிவுக்கு வழிவகுக்கலாம். 

சையத் அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

உலகம் முழுவதும் 1,600 கோடி கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாமே?

நமது ஆதார் விவரங்கள் லட்சக்கணக்கில் திருடப்பட்டு விற்பனையாவதாகச் சொல்கிறார்கள். நீங்கள் கடவுச் சொற்களைச் சொல்ல வந்துவிட்டீர்கள். செல் போனில், ஒரு செயலியை நிறுவும் போது உங்களது புகைப்படங்கள், வீடியோ, குறுஞ்செய்திகளைப் பார்க்க அனுமதி கொடுத்து விட்டுதான் நிறுவுகிறீர்கள். இந்தச் செயலிகளெல் லாம் நம் தரவைச் சேகரித்துக்கொண்டு போய், தரவாரியாகப் பிரித்து விற்கின்றன. அதனால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

வாசுதேவன், பெங்களூரு

தொழில்துறையில் தமிழகம் பின்தங்கியதற்கு 2026 தேர்தலில் பரிசு கிடைக்கும் என்று இ.பி.எஸ். கூறியுள்ளாரே?

அப்படியானால், இ.பி.எஸ்.ஸுக்கு மக்கள் அளித்த பரிசுதான் இந்த ஐந்தாண்டு ஓய்வா!

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை. 

ஆங்கிலத்தில் பேசினால் அவமானம் என்ற நிலை வரும்' என பேசியுள்ளாரே அமித்ஷா?

இந்தியா இன்னும் சுதந்திர நாடுதானே. தனது தொடர்பு மொழி எதுவென்று தேர்வுசெய்யும் சுதந்திரம் இந்தியர்களுக்கு இருக்கிறதுதானே. அப்படி இல்லையென்று சொல்வாரானால் அது அமித்ஷாவுக்கும், அவர் சேவகம் செய்யும் மோடி அரசுக்கும்தான் அவமானம்.