ரா.ராஜ்மோகன், முட்டியூர்.
"நான் தமிழ்நாட்டுக்கு முதல்வரானால் ஆளுநர் வாய் திறந்து பேசவேமாட்டார்' என்கிறாரே சீமான்?
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுத பயிற்சி யளிப்பார்கள். அதில் "நான் முதல்வரானால்' என்பது பிரபலமான தலைப்பு. கற்பனையும் சொல்வளமும் மிக்க மாணவர்கள் அதில் புகுந்து விளையாடுவார்கள். ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால் சீமானும் அடித்துவிடுகிறார். சீமான் முதல்வராகும்போது மட்டும் ஆளுநர்கள் ஊமை யாகிவிடுவார்களா? ஆளுநர் இடைஞ்சலில்லாமல் இருக்கவேண்டுமானால், ஒன்று மத்தியில் இருக்கும் கட்சியே மாநிலத்திலும் ஆளவேண்டும் அல்லது மத்திய அரசிடம் முற்றிலும் சரணடைய வேண்டும். சினிமாவில் மட்டும்தான் நாயகர்கள் ஹீரோயிசம் காட்டிக்கொண்டு கமிஷனர், நீதிபதி, ஆளுநர் களுக்கு எதிராக வசனம் பேசலாம், அடித்து இழுத்துவரலாம். நிஜத்தில் சாத்தியப்படாது.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை' என்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. பதிவுசெய்துள்ளாரே...?
அதாவது ஆஸ்திரேலியாவில் பிரதமர் வீட்டில் எல்லாம் வருமான வரித்துறை பேதமின்றிச் செயல்படுகிறது. இந்தியாவில், ஆளுங்கட்சிப் பக்கமே வருமானவரித்துறை, அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை தலைவைத்துப் படுக்கமாட் டேன் என்கிறது என்ற ஆதங்கத்தில் அப்படி பதிவுசெய்திருக்கலாம். மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) மாதிரி, இது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் மனதின் குரல்!
அன்னூரார், பொன்விழி
குடிமக்களைவிட ஆட்சியாளருக்குத்தான் அதிகாரம் அதிகமா?
குடிமக்களுக்கு இருக்கும் ஒரே அதிகாரம் வாக்களிப்பதுதான். சின்ன அதிகாரம்தான். ஆனால் யானையை அடக்கும் அங்குசம் போன்றது அந்த அதிகாரம். ஒட்டுமொத்த குடிமக்களும் கட்டற்ற அதிகாரத்துக்குச் சொந்தமான அரசியல்வாதிகளுக்கு எதிராக ஓட்டளிக்கும் போது... கட்டுப்படாத மத யானைகளைப்போல் பிளிறும் அரசியல்வாதிகள்கூட அடங்கி அடுத்தமுறை கட்டுக்குள் வந்துவிடுகிறார்கள்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"என் இதயத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் இருக்கிறது. அதை யாராலும் அகற்ற முடியாது' என்று ஓ.பி.எஸ். பேசியிருக்கிறாரே...
ஓ.பி.எஸ். இதயத்தில் அ.தி.மு.க. கொடி ஏற்றுவதையும், இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொள்வதையும் எடப்பாடி ஆட்சேபிக்கப் போவதில்லை. காரிலோ, சட்டைப் பையிலோ வைத்திருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. எடப்பாடியின் அஸ்திரங்கள் ஓ.பி.எஸ்.ஸை அடுத்தடுத்து பலமாகத் தாக்கிவரும் நிலையில், ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு எதிராக எந்த அஸ்திரத்தை எடுக்கிறாரென பார்க்கலாம்.
சி. செல்லையா, நுங்கம்பாக்கம்
"ஓ...! இப்படியும் பண்ணலாமோ?' என உங்களை வியக்கவைத்த நிகழ்வு எது?
இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் ஒருதலைப் பட்சமாக இஸ்ரேல், பாலஸ்தீனர்களை நசுக்கி எறிந்துகொண்டிருக்கிறது. காசா பகுதி மருத்துவமனைகளைக்கூட இயங்கவிடாமல் முடக்கிவருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில் ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் சாலி ரூனி, ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறார். தனது புதிய நாவல் ஒன்றை இஸ்ரேலிய பதிப்பகத்துக்குக் கொடுக்கமறுக்கிறார். சாலியின் முந்தைய நாவல்களை இந்த இஸ்ரேலிய பதிப்பகம்தான் பதிப்பித்து வந்தது. இதில் அவருக்கு நட்டம்தான். இருக்கட்டுமே… நீதியா, நட்டமா என்பதில் நீதியின் பக்கம் சாய்ந்தார் சாலி ரூனி. அவரைப் பார்த்து மேலும் பல எழுத்தாளர்கள் "இஸ்ரேலைப் புறக்கணிப்போம், விலகியிருப்போம், தடை விதிப்போம்' இயக்கத்தில் பங்குபெற்று வருகிறார்கள். இதுவரை 7 எழுத்தாளர்கள் இஸ்ரேல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எழுத்தாளர்களால் இஸ்ரேலை எதுவும் செய்துவிட முடியாதுதான். ஆனால் வரலாற்றில் இஸ்ரேலின் அநீதியைப் பதிவு செய்ய முடியும்தானே!
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்
பலபேர் முன்னால் திட்டிவிட்டு தனியாகக் கூப்பிட்டு அறிவுறுத்துபவர், பலபேர் முன்னால் புகழ்ந்துவிட்டு தனியே அழைத்துத் திட்டுபவர் -யார் உங்கள் சாய்ஸ்?
தனியே திட்டி, பலர் முன்னால் புகழ்பவர் தான் பெரும்பாலானவர்களின் சாய்ஸாக இருக்கும். ஆனால் முதலாளியையோ, நிர்வாகி யையோ, சூப்பர்வைஸரையோ தேர்வுசெய் யும் நிலையிலா பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்?
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
"திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது..' என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு?
பெரும்பாலான அம்மாக்கள், மகனின் சொத் தில் பங்கை எதிர்பார்ப்பதில்லை. அவனிடமிருந்து அன்பையும் ஆதரவையுமே எதிர்பார்க்கிறார்கள். திருமணமான மகன் இறந்து போகும்போது, இன் னொரு குடும்பம் இருக் கிறது. அங்கே மனைவி, பிள்ளைகள் என இன் னொரு தலைமுறை உருவாகிவிடுகிறது. எனவே தீர்ப்பு அப்படி வந்திருக்கலாம். அதே சட்டம்தானே பெற் றோர்களைக் கைவிடும் பிள் ளைகளுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை என வும் வகுத்து வைத்திருக் கிறது.