நடிகர் சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உயர்தர சைவ ஹோட்டல் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், தொடர்ச்சியாகப் பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். ஏற்கெனவே இது தொடர்பாக இருமுறை செய்திகள் வெளியிட்டுள்ளோம். இந்நிலையில், சூரியின் அம்மன் உணவகங்கள் அனைத்தையும் சீல் வைக்கும்படி புகார் மனு அளிக்கப்பட்டு பரபரப்பு கிளம்பியுள்ளது.
கடந்த டிசம்பர் 31-ல் பா.ஜ.க. வழக்கறிஞர் குமார், மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம், அம்மன் உணவகத்துக்கு எதிராகப் புகாரளித்திருக்கிறார். அவரிடம் விசாரித்தபோது, "பி.டி.ஆர். போட்டோ, ஸ்டாலின் போட்டோவை வைத்துக்கொண்டு தி.மு.க. ஆதரவு போர்வையில் சுகாதாரமற்ற உணவுகளை வழங்குகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சோதனை செய்து, விதிமுறை மீறல் இருக்கும்பட்சத்தில் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை'' என்றவரிடம், "தொடர்ச்சியாக அம்மன் உணவகம் குறிவைக்கப்படுவதன் பின்னணியில் உயர்தர சைவ உணவக உரிமையாளர்கள் சங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?'' என்றதற்கு, "அப்படியெல்லாம் இல்லை, எங்கு தப்பு நடந்தாலும் சமூக ஆர்வலராகப் புகாரளிப்போம்'' என்று முடித்துக்கொண்டார்.
இதுகுறித்து அம்மன் உணவக மேலாளர் சக்தி, "அம்மன் உணவகம் ஆரம்பித்ததிலிருந்தே ஏதாவது பிரச்சனையை கிளப்பிவருகிறார்கள். ஊமச்சிகுளம், கடச்சநேந்தலில் உள்ள கடைகளில் டீ, காபி, வடை தான் போடுகிறோம். 5 ரூபாய் வடைக்கு ஜி.எஸ்.டி. பில்லில் போடவில்லையென்று சமூக வலைத் தளத்தில் பரப்புகிறார்கள். உடனே ஜி.எஸ்.டி. அதிகாரிகள் ஆய்வு செய்கிறார் கள். நாங்கள் ஜி.எஸ்.டி.யை நேர்மையா கக் கட்டுகிறோம். அடுத்து புட் செல் காரர்கள் வந்து அடிக்கடி சோதனை செய்கிறார்கள். முதலில் அரசு மருத்துவ மனை உணவகத்தை சீல் வைக்கவேண்டு மென்றவர்கள், இப்போது மொத்த அம்மன் உணவகங்களையும் மூடி சீல் வைக்க வேண்டுமென்று புகாரளிப்பதிலிருந்தே எங்களுக்கு எதிராக லாபி நடப் பதைத் தெரிந்துகொள்கிறோம்'' என்றார். இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தில் முறையிட் டீர்களா எனக் கேட்டதற்கு, "நாங்களும் உறுப்பினர்கள் தான். இதுவரை சங்கத்திலிருந்து இதுகுறித்து கேட்கவே யில்லை. சங்கத்திலேயே எங்களுக்கெதி ரான லாபி நடக்கலாம்'' என்றார்.
தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் தென்மண்டல தலைவர் குமாரிடம் பேசினோம். "அம்மன் உணவக உரிமையாளர்கள் யாரும் சங்கத்தை அணுகவேயில்லை. அப்படியிருக்கும் போது நாங்கள் என்ன செய்வது?'' என்றவரிடம், "அம்மன் சைவ உணவகம் ஆரம்பித்து மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது பிடிக்காமல் அவர்களுக்கு எதிராக ஏதோ லாபி நடக்கிறது என்கிறார்களே?'' என்றதும், "அப்படியெல்லாம் இல்லை. பலரும் புதிது புதிதாக சைவ உணவகம் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லையே. வேறு ஏதாவது அரசியல் காரணம் இருக்கலாம். சங்கத்திடம் முறையிட்டால் கட்டாயம் சங்கம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும்'' என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும் வழக் கறிஞருமான ஸ்டாலின் நம்மிடம், "நடிகர் சூரி அம்மன் உணவகம் என்று அசைவ உனவகம் தொடங்கியிருந்தால் இந்த பிரச்சனையே வராது. அவர் உயர்தர சைவ உணவகம் வைத்ததுதான் வில்லங்கமே. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சைவ உணவகங்கள் பெரும்பா லும் ஒரே சமூகத்தினரிடமே உள்ளது. அவர்களை மீறி யார் சைவ உணவகம் தொடங்கினா லும் அதை நடத்த விடமாட்டார் கள். உதாரணத்திற்கு மதுரையை எடுத்துகொள்ளுங்கள். மீனாட்சி மிஷன் சேதுராமன், மீனாட்சி பவன் என்று ஆரம்பித்து மிகுந்த வரவேற்பைப் பெற்று அதன் கிளைகள் ஏராளமாக ஆரம்பிக் கப்பட்டன. அதற்கும் இதே ஜி.எஸ்.டி., உணவுப் பாதுகாப்பு என்று நெருக்கடிகள் கொடுத்த தால் தற்போது செயல்படவிட வில்லை. இப்படி ஒரு லாபியை தொடர்ச்சியாக செய்து யாரையும் இவர்களை மீறி தமிழ்நாட்டில் வளர விடுவதில்லை.
இப்போது சூரி ஒரு தமிழர். மதுரையை சேர்ந்தவர். கூடப் பிறந்த அண்ணன், தம்பிகளுக்காக, கிராமத்தில் சின்னச் சின்ன டீ கடை, சின்ன உணவகம் நடத்தியவர்களை ஒழுங்குபடுத்தி, முறையாக கேட்டரிங் படிக்க வைத்து அம்மன் உணவகத்தைத் தொடங்கினார். இங்கே மிகுந்த தரத்துடன் சுவையுடன் இருப்பதால் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் இவ்வளவு நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள். பா.ஜ.க.வை சேர்ந்த சீனிவாசனின் அழுத்தம்கூட இருப்ப தாகச் சொல்கிறார்கள். அரசு மருத்துவமனை யில் வைத்தபோது அங்கே ஏற்கெனவே இருந்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்களோ என்று சந்தேகம் வந்தது. ஆனால் எப்போது அரசியல் உள்ளே வந்ததோ அப்பவே உறுதி யாகிவிட்டது, இது சங்கம் செய்கிற வேலைதான் என்று. இப்போது தமிழகம் முழுவதும் அம்மன் உணவகத்தை நடத்தக்கூடாது, சீல் வைக்க வேண்டுமென்று சொல்வது, சூரிக்கு எதிரான லாபி நடப்பதையே காட்டுகிறது. சூரிக்கு குறி வைத்திருக்கிறார்கள்'' என்றார்.
எளிய மக்களுக்கான உணவகத்துக்கு எதிராகத்தான் எத்தனை சதிகள்!