அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்து, சுமார் ஐம்பது கோடிகளைச் சுருட்டிய கும்பலில், நோடல் நிறுவனத்தின் பொறுப்பாளர் சுரேஷ்பால் உட்பட 16 பேரை இதுவரை கைது செய்திருக்கிறது போலீஸ். இவர்களில் ஆறுபேரை குண்டாஸில் அடைத்திருக்கிறார்கள்.
இம்மோசடியில் முதலாவது, இரண்டாவது குற்றவாளிகளான மின்துறை அலுவலர் சென்னை -முகப்பேர் சுப்பிரமணியனையும் லால்குடி ராஜேஷையும் போலீசால் பிடிக்க முடியாமல் போனது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 செப்டம்பரில் தேர்வு நடத்தியது.
ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். முடிவுகள் நவம்பர் ஏழாம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வானவர்களின் மதிப்பெண்களை கிராஸ்செக் செய்த உறுப்பினர் செயலர் உமாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மிகக்குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்த 196 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு, அவர்கள் "பாஸ்' செய்யப்பட்டிருந்தனர்.
மோசடியை உறுதிப்படுத்திக்கொண்ட செயலர் உறுப்பினர் உமா அங்கே யாரிடமும் வெளிப்படுத்தாமல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
196 பேரிடமும் விசாரணை நடத்திய போலீஸார், ஒவ்வொருவரும் தலா 20 லட்சத்தில் இருந்து முப்பது லட்சம்வரை லஞ்சம் கொடுத்து சாதனை செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டனர்.
முதலில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த மின்துறை அதிகாரி சுப்பிரமணியனை பின்தொடர்ந்து, இவருடைய ஓட்டுநர் முகப்பேர் கணேசனை பிடித்தனர்.
""ஆமாம் சார்... சுப்பிரமணியம் சாரும் நோடல் சுரேஷ்பால் சாரும்தான் மார்க்கை மாற்றினார்கள். ஆனால் தேர்வு வாரியம் கம்ப்யூட்டரில் மாற்றாமல் விட்டுவிட்டார்கள்'' என்றிருக்கிறார் ஓட்டுநர். ஆனால் ஓட்டுநர் மாட்டிக்கொண்டதும் சுப்பிரமணியன் தலைமறைவானார்.
இந்த சுப்பிரமணியன்தான் தமிழகம் முழுக்க புரோக்கர்களை நியமித்து பண வேட்டையாடியவர். முகப்பேர் சுப்பிரமணியத்திற்கு பார்ட்னராக இருந்தவர் லால்குடி நன்னிமங்களம் ராஜேஷ். இந்த ராஜேஷின் அண்ணன் மாமனார், பாடநூல் தேர்வுக்குழு உறுப்பினராக இருக்கிறார். இந்த ராஜேஷ்தான் புரோக்கர்கள், பார்ட்னர்கள் எல்லாருக்கும் தனது பெயரில் "சிம்' கார்டு வாங்கிக் கொடுத்து கலெக்ஷன் ஆபரேஷனை கரெக்ட்டாக செய்திருக்கிறார்.
சுப்பிரமணியும் ராஜேஷும் எஸ்கேப் ஆனபோது நோடல் சுரேஷ்பால் போலீசிடம் மாட்டிக்கொண்டார். நோடல் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். இந்தியா முழுமைக்கும் மாநிலத் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் மதிப்பெண்களை ஸ்கேன் செய்து தேர்வு ஆணையத்திடம் திரும்ப ஒப்படைக்கும் வேலையைச் செய்கிறது நோடல். இந்த நோடலின் சென்னை பொறுப்பாளர்தான் இந்த சுரேஷ்பால். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கே தெரியாமல் மதிப்பெண்களை மாற்றுவதற்கு இவர்தான் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார்.
சுரேஷ்பால், தலைமையாசிரியர் நத்தம் சின்னசாமி, ஓட்டுநர் கணேசன், சுரேஷ்பாலின் ஓட்டுநர் ஷேக்தாவூத், ரகுபதி, விநாயகமூர்த்தி, குணசேகரன், பிரம்மநாயகம் உட்பட இதுவரை 16 பேரை கைது செய்திருக்கிறது போலீஸ்.
ஐம்பது கோடி பணத்தோடும், 196 பேரின் ஒரிஜினல் சான்றிதழ்களோடும் ஊர் சுற்றிக்கொண்டிருந்தனர் சுப்பிரமணியனும் லால்குடி ராஜேசும்.
லால்குடி ராஜேஷ், லால்குடி பகுதியில் லேடர் கோச்சிங் சென்டர், ஜல்லிக்கட்டு உணவகம் ஆகியவற்றை நடத்துகிறார்.
முகப்பேர் எலெக்ட்ரிக் சுப்பிரமணியனுக்கு கல்வி அமைச்சரின் உதவியாளரும், மின்சார அமைச்சரின் உதவியாளரும் மிகுந்த நெருக்கமாம்.
ஆளுங்கட்சிக்கு நெருக்கமான திருச்சியில் உள்ள சாதிக்கட்சித் தலைவர் ஒருவரின் தயவில் சுப்பிரமணியன் தங்கியிருப்பதாகச் சொல்லிவந்த நிலையில்...
லால்குடியில் உள்ள ராஜேஷின் வீட்டிற்குச் சென்றோம். ராஜேஷின் அண்ணி சொன்னார். ""ராஜேஷும் அவர் மனைவியும் வெளியூர் போயிருக்காங்க. எந்த ஊர்னு தெரியாது. அவங்க செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருச்சு. 20 நாள்ல வந்திருவாங்க'' என்றார்.
நான்கு மாதங்களாகத் தலைமறைவாகச் சுற்றிக்கொண்டிருந்த மோசடியின் முக்கிய குற்றவாளிகளான முகப்பேர் சுப்பிரமணியனுக்கும் லால்குடி ராஜேசுக்கும் 18-05-18 அன்று ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த வழக்கில் இதுவரை கைதாகியிருக்கும் 16 பேரில் ஒருவருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. மாறாக 6 பேருக்கு குண்டாஸ்.
கொடுத்த பணத்தையும் சான்றிதழ்களையும் பெற முடியாமல் தேர்வு எழுதியவர்கள் தத்தளிக்கிறார்கள்.
மோசடிப் பேர்வழிகளோ, பரிசுத்தமானவர்களாகக் காட்டுவதற்காக அரசியல்வாதிகளின் நிழல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
தேர்வாணையம் தலைகுனிந்து நிற்கிறது.
-ஜெ.டி.ஆர்.