""ஹலோ தலைவரே, “நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா திடீர் அதிரடி கிளப்பிட்டாரே?''
""அவர் அதிரடி கிளப்பலை... ரொம்ப நியாயமா குரல் கொடுத்திருக்காருப்பா...''’
""ஒத்துக்குறேங்க தலைவரே... ஆரம்பத்தில் அவரது அகரம் பவுண்டேஷன் நீட் தேர்வு நல்லதுன்னு நினைத்து, ஆதரவா புத்தகம் கூட வெளியிட்டது. ஆனா, அனிதாவில் தொடங்கி ஜோதிதுர்கா வரை பல உயிர்கள் பறிபோனதைப் பார்த்துட்டுத்தான் நீட் தேர்வு அநியாயங்களைப் பட்டியலிட்டு அறிக்கை கொடுத்தாரு. இது மனுநீதித் தேர்வுன்னு கடுமையாக விமர்சனம் செய்ததோடு, நீதிமன்றங்களே கொரோனா காலத்தில் நேரடி விசாரணை நடத்தாத நிலையில், மாணவர்களை நேரடியாக தேர்வு எழுத வைக்கலாமான்னு அவர் கேட்டிருந்ததும் பத்திக்கிடிச்சி. இதுகுறித்து சூர்யாமீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளணும்னு ஒரு நீதிபதி, உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் எழுத, ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் அது அவசியமில்லைன்னும் மக்களின் உணர்வு அடிப்படையில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருக்கிறார்னும் கடிதம் எழுதினாங்க.''
""சூர்யா அரசியலுக்கு வரப்போறாருன்னும் பேச்சு கிளம்புதே?''
""பா.ஜ.க தரப்பில், சூர்யாவை தி.மு.க. தரப்பிலிருந்து தூண்டி விடுறாங்கன்னும், அதனாலதான் சூர்யா கருத்துக்கு உதயநிதி ஆதரவு ட்வீட் போட்டிருக்காருன்னும் சொல்லி சூர்யாவை ரவுண்டு கட்டினாங்க. இன்னொரு சைடில், ஆரம்பத்திலிருந்தே நீட்டுக்கு எதிரா போராட்டங்கள்- கருத்தரங்குகள் நடத்தி வருவது தி.மு.க.தான்னும், அப்ப நீட்டை ஆதரிச்ச சூர்யா, இப்ப எதிர்ப்புக் குரல் கொடுப்பதன் பின்னணியில், தி.மு.க.வுக்கு கிடைத்துவரும் ஆதரவை சிதைப்பதற்கான கொங்கு லாபியின் திட்டம்னு வரிந்துகட்ட, சூர்யா வைத்த நெருபபு பொறி பறக்க ஆரம்பிச்சிடிச்சி.’’நீட்டுக்கு எதிராக தமிழகமே கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், நீட்டுக்கும் நீட் மரணங்களுக்கும் காரணம் தி.மு.க.வும் காங்கிரஸும்தான்னு கடந்த 15-ந் தேதி முதல்வர் எடப்பாடி சட்டமன்றத்தில் ஆவேசமான குரலில் குற்றச்சாட்டை வச்சிருக்கார்.''
""ஆமாம்பா, நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், கலைஞர் இருந்தவரை அதை தமிழகத்துக்குள் அனுமதிக்காததைச் சுட்டிக் காட்டிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் நீட் இங்கே நுழைஞ்சிருக்குன்னு தெளிவாகவே சொல்லியிருக்கார். அதை மறைத்து அப்பட்டமான பொய்யைச் சொன்ன எடப்பாடி, நீட் தொடர்பாகக் காட்டிய ஆவேசத்துக்குப் பின்னால் வேற ஏதாவது காரணம் இருக்குதா?''
""உண்மைதாங்க தலைவரே, 14-ந் தேதி முதல்முறையா, நேரடியா, எடப்பாடியின் லைனுக்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்ல என்ன நடக்குது? என்ன ஆட்சி பண்றீங்க? ஊழலுக்கு ஒரு அளவில்லையா? தினமும் ஒரு ஊழலா? திருந்தவே மாட்டீங்களான்னு சொல்லி, அவரை அதிரவச்சிருக்கார். அடுத்த நிமிடமே எடப்பாடியிடம் காட்டமான குரலில் பேசிய பிரதமர் அலுவலக அதிகாரிகள், மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டம், கழிவறைத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம்ன்னு எல்லா நிதியிலும் கைவச்சி, அளவில்லாமல் ஊழல் செய்துக்கிட்டிருக்கீங்க. அது தொடர்பான எல்லா டீட்டெய்லும் எங்கக்கிட்ட இருக்குன்னு சொல்லியிருக்காங்க.''
""இதுக்கு எடப்பாடி என்ன விளக்கம் கொடுத்தார்?''
""ஏறத்தாழ அரைமணி நேரத்துக்கும் மேலா, தன்னிலை விளக்கம் கொடுத்திருக்காரு. வேளாண்மைத் துறைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட சில அதிகாரிகள் மூலம் எடப்பாடி கொடுத்த விளக்கங்களும் அவர்களிடம் எடுபடலை. நீட் தேர்வு போராட்டங்களை அ.தி.மு.க. அடக்காமல், நீட்டுக்கு எதிரா இருப்பதுபோல காட்டிக்கொள்வதையும் டெல்லி கண்டிச்சிருக்கு. ஊழல்களுக்காக விரைவில் சி.பி.ஐ. நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்ன்னு சொல்லியிருக்கு. பதறிப்போன எடப்பாடியின், டெல்லியை குளிரவைக்கும் ரியாக்ஷன்தான் சட்ட சபையில் எதிர்க்கட்சிகள்மீது நீட் பழியைத் தூக்கிப் போட்டது.''
""சி.பி.ஐ. தரப்பும், எடப்பாடியை வியர்க்க வச்சிடுச்சாமே?''
""உண்மைதாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையில் ஏகப்பட்ட ஊழல்கள் நடப்பது குறித்து நமது நக்கீரனிலேயே ஆதாரங்களோடு கட்டுரைகள் வெளிவந்திருக்கு. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரை போன புகார்களும் டெல்லியிடம் இருக்குது. அதோடு, நெடுஞ்சாலைத் துறையின் சென்னை வட்டார சூப்பிரண்டண்ட் என்ஜினியர் சீனிவாச ராகவனுக்கும் துறையின் மேலிடத்துக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நடந்த உரையாடல்களை எல்லாம் சி.பி.ஐ. தரப்பு சீக்ரெட்டாக ரெக்கார்ட் செய்திருக்கிறதாம். இந்த ஆடியோ ஆதாரம் அ.தி.மு.க அரசுக்கு கடும் நெருக்கடியா இருக்கும்னு மாநில உளவுத்துறை எடப்பாடியிடம் சொல்லியிருக்கு. தனது சி.பி.ஐ. சோர்ஸ் மூலமும் உறுதிப்படுத்திக்கொண்ட எடப்பாடி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சீனிவாச ராகவனையும், அவருக்குக் கீழ் இருக்கும் கோட்டப் பொறியாளர் பெரியசாமியையும் லாங் லீவில் வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாராம்.''’’
""அ.தி.மு.க. நிர்வாக பங்கீட்டில் மோதல் அதிகமாகுதே?''
""ஆமாங்க தலைவரே, அதிமு.க.வைப் பொருத்தவரை ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு ஒன்றியம்னு கட்சிக் கிளையைப் பிரிச்சி, அதில் புதிய நிர்வாகிகளை உட்காரவைக்கும் முயற்சிகள் நடக்குது. ஆனால், கட்சி நிர்வாகிகள் பலருக்கும் இதில் உடன்பாடு இல்லை. இது தொடர்பான மோதல்கள் அடிதடியாகவும் அரங்கேறிக்கிட்டு இருக்கு. திருச்சியில் மா.செ.பரஞ்ஜோதி மீது அமைச்சர்கள் முன்னிலையிலேயே நாற்காலி வீசப்பட்டிருக்கு. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடியிடமே, நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிச்சதால்தான் உங்கள் பதவி தப்பித்தது. அதனால் எங்கள் ஆட்களுக்கு கட்சிப் பதவிகளைக் கொடுங்கள்னு நிர்பந்தம் கொடுத்திருக்காங்க. இதனால் எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே பதவியைக் கொடுங்கள்னு சொல்லிவிட்டாராம் எடப்பாடி.''
""ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டும் எடப்பாடி- ஓ.பி.எஸ்.சுக்கு இடையில் உரசல் நடந்திருக்கே?''
""உண்மைதாங்க தலைவரே, சுதந்திரப் போராட்ட வீரரும், வன்னியர் சமூக முன்னோடிகளில் ஒருவருமான ராமசாமி படையாச்சியாரின் 103 ஆவது பிறந்நாள், 16 ஆம் தேதியன்னைக்கு அரசு விழாவா கொண்டாடப்பட்டது. ஆனாலும் கொரோனா காலத்தையொட்டி முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சும் இதில் கலந்துகொள்ள வேண்டாம்ன்னு முதல்நாளே முடிவெடுக்கப்பட்டிருக்கு. அரசு சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு சில அமைச்சர்கள் மட்டும் சென்று, சென்னை கிண்டி ஹால்டா பகுதியில் இருக்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யலாம்னு திட்டமிடப்பட்டது. தி.முக. தலைவர் ஸ்டாலினோ, வன்னிய சமூகத்தினரின் மனதைக் குளிரவைக்க, படையாச்சியார் சிலைக்கு நேரிலேயே சென்று மரியாதை செய்ய முடிவெடுத்தார்.''’
""ஓ...''
""இந்தத் தகவல் துணை முதல்வர் ஓ.பி.எஸ். கவனத்துக்கு உளவுத்துறை மூலம் போனது. உடனே அவர், எடப்பாடிக்கே தெரிவிக்காமல், தன் இல்லத்திலேயே படையாச்சியார் படத்துக்கு அஞ்சலி செய்வது போல் படம் எடுத்து, அதை டுவிட்டரில் வெளியிட்டு ஸ்கோர் பண்ண நினைத்தார். இது எடப்பாடி கவனத்துக்குப் போக, ஸ்டாலின் அரசியல் பண்ணத்தான் செய்வாரு. ஆனா, ஓ.பி.எஸ். ஒரே கட்சியில் இப்படி அரசியல் செய்யலாமான்னு சக அமைச்சர்களிடம் எரிச்சலாகக் கேட்டிருக்கார். அப்புறம், அவர் தன் வீட்டிலேயே ராமசாமி படையாச்சியார் படத்தை வைத்து மாலை அணிவித்து, அதை ட்விட்டரில் பதிவு செய்துட்டாரு. கொரோனாவால் வெளியில் தலையையே காட்டாமல் இருக்கும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், படையாச்சியாருக்கு மரியாதை செலுத்தத் தங்கள் கட்சிப் பிரமுகரான தீரனை அனுப்பிவைத்து விட்டார்.''
""பா.ம.க.வில் காணொலி கலந்துரையாடல்கள் விறுவிறுன்னு நடக்குதே?''
""பரபரப்பாகவும் இருக்கு துங்க தலைவரே, அண்மையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகி களின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை, கட்சியின் தலைவரான ஜி.கே.மணி காணொலி வாயிலா நடத்தினார். இதில் கலந்துகொண்ட மாஜி மந்திரி ஏ.கே.மூர்த்தி, எடுத்த எடுப்பிலேயே... ஒவ்வொரு தேர்தலிலும் நமது வாக்கு வங்கி ரொம்பவே சரிஞ்சிக்கிட்டு இருக்கு. அதுக்குக் காரணம், நம் மாவட்ட நிர்வாகிகளோடு கூட தைலாபுரம் தொடர்பே இல்லாமல் இருக்கு. சீனியர்களை யாரும் மதிப்பதில்லை. இந்த மூன்று மாவட்டங்களுக்கும் கட்சி வரலாறு பற்றித் தெரியாதவர்களையே நியமிக்கிறார்கள். இப்படி இருந்தால் தேர்தலில் நம் இலக்கை எப்படி அடைவது என்ற ரீதியில் தாக்க, அவரது பேச்சின் அதிர்வுகள் தைலாபுரத்தையே குலுங்க வச்சிருக்குதாம்.''
""சசிகலா ரிலீஸ் என்ன நிலவரம்?''
""நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்கு படிச்சிருப்பீங்க. டெல்லியோடு சமரசமாகப் போகாததால், சசிகலாத் தரப்பின் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வரு மான வரித்துறையால் முடக்கப்பட்டிருக்கு. சசி தரப்புக்கு இது கொசுறிலும் கொசுறுதானாம். நக்கீரன் ஏற்கனவே அவர் பிப்ரவரி அல்லது ஜனவரி கடைசியில் ரிலீசாகலாம்னு சொல்லியிருந்தபடி, எல்லா ஏற்பாடுகளும் நடக்குது. அ.திமு.க.வில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். தரப்புகளில் இருந்தும், அவருக்கு இணக்கமான வரவேற்புச் செய்திகள் போனதோடு, ஏன் ஜனவரி வரை காத்திருக்கனும்? இப்பவே வெளியில்வர முயசிக்கலாமேன்னும் கேட்கப் பட்டிருக்குதாம். அபராதத் தொகையை வெகு விரைவில் செலுத்தி விடுதலை பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறதாம்.''
""தி.மு.க. ஏரியா தகவல்கள்?''
""7 மாதத்தில் ஆட்சியைப் பிடிக்கணும்னு ஸ்டாலின் சொல்றாரு. அதற்கேற்ப கட்சியையும் கூட்டணியையும் சேர்த்து இழுக்கணும். பல பேருக்கு ரொம்ப காலமா உறுப்பினர் அட்டை கிடைக்காம இருந்த நிலையில், இப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கச் சொல்லி உடனடியா வழங்குவது கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுத்திருக்குது. பெரியார் பிறந்தாள், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. உருவான நாள் இந்த மூன்றையும் முப்பெரும் விழாவாகக் கொண்டாடறது, கலைஞர் தொடங்கி வைத்த வழக்கம். ஸ்டாலின் தலைவரான பிறகும் தொடர்ந்தது. இந்தமுறை கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால் சென்னை கலைஞர் அரங்கிலேயே சமூக இடைவெளியோடு நடத்தப் பட்டிருக்கு. தலைமைக் கழக நிர்வாகிகளும் சென்னை மாவட்டக் கழகப் பிரமுகர்களும் இதில் நேரில் கலந்துகொள்ள, மற்றவர்கள் காணொலியில் இணைந்திருந்து விழாவைக் கண்டுகளிச்சாங்க. இந்த ஆண்டும் கட்சியின் சீனியர்களாக மா.மீனாட்சிசுந்தரம், உபயதுல்லா உள்ளிட்டவர்களுக்கு, தலைவர்களின் பெயர் களால் ஆன விருதுகள் வழங்கப்பட்டிருக்கு.
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஐந்து பேருக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு கொடுப்பதற்கான கோப்பைத் தமிழக அரசு தயார் செய்திருந்தது. தற்போது இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்திருக்கிறதாம்.''