மான்கறி சர்ச்சை வீடியோவினால் கோவிலின் புனிதமும், புகழும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாதுகாப்பு கருதி மான்களும், மயில்களும் வண்டலூர் பூங்காவிற்கு மாற்றப்பட இருப்பதால் பக்தர்கள் கவலையில் ஆழ்ந்திருகிறார்கள்.

tt

விருத்தாசலம் நகரை ஒட்டியுள்ள மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோயில். இந்த கோயில்‘பிராது சீட்டு’ கட்டுவதில் பிரசித்தி பெற்றது. கோவில் வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட மான்கள் மற்றும் மயில்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனாலேயே இக்கோவில் மான்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் உட்பட தமிழ்நாடு மட்டுமல்லாது பெங்களூர் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பிராது சீட்டு கட்ட வருவது வழக்கம்.

Advertisment

அண்மையில், கோவில் வளாகத்தில் ஊழியர்கள் சிலர், மது, மாமிசம் சாப்பிடுவது, இயற்கை உபாதைகள் கழிப்பது மாதிரியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவில் ஒரு ஊழியர், மற்றொரு ஊழியரிடம், ""மான் கறி சாப்பிடுங்கள்'' என சிரித்துக் கொண்டே கூறும் காட்சிகளும் இருந்ததால் பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்த வீடியோ குறித்து அறிந்த விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், கடலூர் உதவி ஆணையர் ஜெ.பரணிதரன் மூலம் விசாரணை நடத்தி, வீடியோவில் இருந்த கோவில் புலவர் மற்றும் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தியாக.நீதிராஜன், ""இதுபோன்ற தகாத செயல்களை தவிர்க்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறையிடம் பலமுறை புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்'' என்றார் ஆவேசத்துடன்.

Advertisment

tt

இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெ.பரணீதரனிடம் நாம் இந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு, “ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ""விசாரணையில் குற்றம் உறுதியானால் அதற்கான நடவடிக்கை இருக்கும்'' என்று உறுதி அளித்தார்.

வனத்துறை விசாரணையில், கோவிலில் இருந்த மான்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும், கோவிலில் பராமரிக்கப்படும் 2 மயில்கள், 15 மான்களை பாதுகாப்பு கருதி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்ற இருக்கிறது வனத்துறை.

ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்துவிட்டு மான், மயில்களை கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பாக, முறையாக பராமரிக்க வேண்டும் என்றே பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

-சுந்தரபாண்டியன்