சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் செந்தமிழருக்கு ஒரு நியாயமா?

வ்வொரு காலகட்டத்திலும் இந்தியப் பிரதமர்களாக இருந்தவர் கள் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்கு இன்னலையே ஏற்படுத்தியிருக்கிறார்கள் ஒப்பந்தங்கள் மூலமும், இலங்கை அரசுக்குச் செய்த உதவிகள் மூலமும். இதுபற்றியெல்லாம் ஏற்கனவே விரிவாக சொல்லியிருக்கிறேன்.

எளிமயானவரான... நல்லவரான... அறிவாளியான மன்மோகன் சிங்கும் தனது பிரதமர் பதவிக் காலத்தில்... ஈழத் தமிழர்கள் விஷயத்தில் நல்லது செய்துவிட்டாரா என்ன?

cc

Advertisment

இந்தியாவில் இதுவரை மூன்று காந்திகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மூன்று கொலைகளும் ஒன்றைவிட ஒன்று துயரமானது... நாட்டுக்கு பேரிழப் பானது ஆகும்.

முதலாவதாக கொல்லப் பட்ட காந்தி... அண்ணல் மகாத்மா காந்தி. இந்தியா சுதந்திரம் பெற்று ஆறு மாதங்கள் கூட அவர் சுதந்திரமாக வாழ இயல வில்லை. எந்த வெள்ளைக்காரனை எதிர்த்து போராடினாரோ... அந்த வெள்ளைக் காரன் ஆட்சியில் பாதுகாப்பாக இருந்த அந்த மாமனிதர் எந்த இந்தியர்களின் விடுதலைக்காக பாடுபட்டாரோ அந்த இந்தியர்களின் ஆட்சியில் கொல்லப்பட்டார். அதுவும் இந்துத்துவாவால் கொல்லப்பட்டார். இந்தியா வின் தந்தைக்கே சுதந்திர இந்தியாவில் கொஞ்சகாலம் வாழ இடமில்லாமல் போனது!

மகாத்மா உயிரோடு இருப்பது மதவெறியர்களுக்குப் பொறுக்கவில்லை. கோட்சே என்ற மதவெறியன் சுட்டுக் கொன்றான். ஆர்.எஸ்.எஸ் என்கிற வன்முறைப் பாசறையில் வளர்க்கப்பட்ட கோட்சே ‘இந்தியாவில் இந்துக்களைத் தவிர எவருக்கும் இடமில்லை. இந்தியாவை இந்து ராஷ்டிரம் ஆக்கவேண்டும்’ என்ற சாவர்க்கரின் தயாரிப்பு. அண்ணல் காந்தியைச் சுட்டுக் கொன்றதால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு இந்திய அரசு தடைவிதித்தது. ஆனாலும் மூன்றாண்டுகளில் அந்தத் தடை விடைபெற்றுக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் ஆட்சி அதி காரத்திற்கே வந்துவிட்டதே. ஆனால் இந்தியாவின் உதவியை எதிர்பார்த்த, இந்தியாவுக்கு எந்த வகையிலும் கெடுதல் செய்யாத, ஈழவிடுதலைக்கு பாடுபட்ட விடுதலைப் புலி கள் இயக்கம் தடை செய் யப்பட்டிருக்கிறது இவ்வளவு காலமாய்.

Advertisment

இரண்டாவதாக கொல்லப்பட்ட காந்தி... இந்திரா காந்தி. ஆசியாவின் ஜோதி பண்டித நேருவின் திருமகள். இந்திரா காந்தி என்பதற்கு அஞ்சாத தன்மை; ஆண்மையோடு நாடாண்ட பெண்மை என்றுதான் பொருள். நல்லதோ, கெட்டதோ நெருக்கடி நிலைப் பிரகடனம் கூட அவரது சரித்திரத்தின் மிக முக்கியமான அத்தியாயம்தான்! கொஞ்சம் தவறாக... கொஞ்சம் அத்து மீறியதாக... போய்விட்டது என்பதைத்தவிர அந்த கசப்பு மருந்து கட்டுப்பாடற்ற இந்தியாவுக்கு ஒருவகையில் தேவையானதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களை சிறைப் பிடித்ததுதான் இந்திராவுக்கு இழிவு தேடித் தந்தது! இந்திரா காந்தியின் அறிவும், ஆற்றலும் ஈடு இணையற்றவை. அவர் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்க வேண்டும். ஒருக்கால் அவர் இருந் திருந்தால்... உண்மையை உளப்பூர்வமாக உணர்ந்து... பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை விடுவித்தது போல... இலங்கையிலிருந்து தமிழீழ தேசம் மலர உதவி யிருப்பார்.

இது ஒருபுறமிருந்தாலும் பஞ்சாப்பை தனிநாடாக்க வேண்டும் என்று கிளம்பிய காலிஸ்தான் தீவிரவாதியான பிந்திரன் வாலேவுக்கு செவிலித்தாய் இந்திரா அம்மையார் தான். அவர்தான் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பிந்திரன் வாலேவை வளர்த்தெடுத்தார்... அரசியல் லாபங்களுக்காக. தன்னுடைய உலைக்களத்தில் தயாரிக்கப்பட்ட கத்தியும், அரிவாளும் தன்னைக் கொல்லப் பயன்படாது என எப்படி நம்புவது?

ஒரு கட்டத்தில் இந்திராவுக்கு எதிராக பிந்திரன் வாலே தயாரானார். பின்னர் என்ன நடந்தது? பொற் கோவிலுக்குள் புளூ ஸ்டார் ஆபரேஷன் நடத்தினார் இந்திரா. பொற் கோவில் வளாகம் ரத்தக் களறியானது. அதன் விளைவு? இந்திராவின் மெய்க்காவலன் பொய்க்காவலன் ஆனான். காவலுக்கு துப்பாக்கி பிடித்தவன் காலனாக மாறினான். நேருவின் செல்லமகள், செல்வமகள் நிலத்திலே துடிதுடித்து விழுந்தாள்!

mmm

அதன் விளைவாக எழுந்த ஆவேச அக்கினிக்கு ஆயிரக்கணக்கான அப்பாவிச் சீக்கியர்கள் இரையாகி வெந்துபோனார்கள் . ஒரு இந்திரா காந்தியைக் கொன்ற ஒரு சீக்கியருக்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்றது... அழித்தது அராஜகம், கோரமானது, கொடூரமானது. அதற்காக நான் இந்திராவின் உயிரை குறைத்து மதிப்பிட வில்லை.

மன்மோகன் சிங் பிரதமரானதும் இந்திரா கொலைக்குப் பழியாக சீக்கிய மக்கள் கொல்லப்பட்டதற்கு அந்தச் சமுதாய மக்களிடம்... அதாவது தனது சமுதாய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இந்திராவைக் கொன்ற எந்த இயக்கத்திற்கும் இந்தியாவில் தடை இல்லை. ஆனால் இந்தியாவின் உதவியை எதிர்பார்த்த, இந்தியாவுக்கு எந்த வகையிலும் கெடுதல் செய்யாத, ஈழவிடுதலைக்கு பாடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது இவ்வளவு காலமாய்.

மூன்றாவதாக கொல்லப்பட்ட காந்தி... ராஜீவ் காந்தி. ராஜீவ் கொலை மனதை பதைபதைக்க வைக்கிறது இப்போது எண்ணினாலும். கொலை... கொடியது. ராஜீவ் கொலை ஒரு வரலாற்றுப் பிழை, சரித்திரக் கறை. ஈழ மண்ணில் நடந்த கோரத்துக்கும், கொடுமைக்கும் வானம்தான் சாட்சி. வியட் நாமிற்குள் சென்ற அமெரிக்கப் படைக்கும், ஈழத்திற்குள் சென்ற இந்தியப் படைக்கும் எனக்குக் கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியவில்லை. ராஜீவ் கொல்லப் பட்டதற்காக... பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் உயிர் பலியிடப்பட்டது.

இந்திராவின் ஓர் உயிரைவிட சீக்கியர்களின் சில ஆயிரம் உயிர்கள் பெரிது என்பது புரிகிறபோது... ராஜீவின் ஓர் உயிர் பல்லாயிரம் தமிழர்களின் உயிர்களைவிட அதிகமானது என்கிற கணக்குத்தான் புரியவில்லை... எனக்கும் புரியவில்லை. சீக்கியர்களின் ஆதரவை இழந்துவிடக் கூடாது என மன்னிப்புக் கோரிய மன்மோகன் சிங், தமிழர்களின் ஆதரவும் தேவை என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவில்லை... கணக்கிலும் வைத்துக் கொள்லவில்லையே... என்ன காரணம்? சீக்கியருக்கு இருக்கும் மான-ரோசம் எங்கள் செந்தமிழருக்கு இல்லை என்று கருதிவிட்டார் மன்மோகன்.

இலங்கை சிங்களப் பேரினவாத அரசால் தொடர்ந்து கொலைக்கும், சித்ரவதைக்கும், கற்பழிப்புக்கும் ஆளாகி வதைபட்டுவந்த எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் அகதிகளாக- அனாதைகளாக வானம் அளந்த வையகம் எங்கும் புலம் பெயர்ந்து வாழ்வு தேடி அலைந்தார்கள். கண்ணீரைக் கண்ணிலும், கவலையை நெஞ்சிலும் சுமந்துகொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அடைக்கலம் தேடி ஆயிரக்கணக்கானவர்கள் வந்தார்கள் இங்கேயும். ஆண்ட பரம்பரை, அகதி முகாமிற்குள் அடைக்கலம் புகவேண்டி வந்தது. 1948-லிருந்து தொடர்ந்து துன்பப்பட்டு வந்த எங்கள் தமிழ்ச்சாதியை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை.

தமிழீழ விடுதலை பெறுவது ஒன்று மட்டுமே தீர்வு! சிங்கள இனத்தோடு, சிங்கள அரசின் கீழ் சமாதானமாக வாழ்வது சாத்தியமே இல்லை’ என்று ஆனபின்னாலும், அதற்கான நியாயங்களை இந்திய அரசு சிந்தனையில் கொள்ளவே இல்லை!

இந்தியாவிலேயே ஏகப்பட்ட ஏழைகள் இருக்கையில் ராஜ பக்சேவுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மன்மோகன் சிங் அள்ளிக் கொடுத்ததைச்....

(சொல்கிறேன்)