புலிகளின் பிரதிநிதியாக நான்!

ந்தியப் படையை ஈழத்திலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டதோடு விடுதலைப் புலிகள், ராஜீவ்காந்தியுடன் பகை பாராட்ட வேண்டிய அவசியம் அற்றுப்போனது! தங்களின் உயிருக்கும் மேலாகத் தங்கள் கொள்கையை- லட்சியத்தை நேசிக்கின்ற அவர்கள், ராஜீவ்காந்தியை கொலை செய்தால் என்ன நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்கத் தெரியாத பாமரர்களா புலிகள்? தம் லட்சியத்திற்கு ஒரு சிறு பின்னடைவும் ஏற்படுகின்ற எந்தச் செயலையும் அவர்கள் செய்யமாட்டார்கள்... கனவிலும் கூட!

pulamaipithan

Advertisment

ஆனால்... கூண்டிலே நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய குற்றவாளிகள்- கொலைகாரர்கள் உத்தமர்கள்போல உலா வந்துகொண்டிருக்க... கொலைப்பழியைச் சுமந்து நிற்கிறார்கள் விடுதலைப் புலிகள்.

ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராக வந்தால், அதனால் எந்தக் கேடும் தங்களுக்கு இனி வராது என்பது புலிகளுக்குத் தெரியும். ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராவதை விரும்பாத யாரேனும் விடுதலைப் புலிகளைத் தூண்டிவிட்டு இந்த காரியத்தைச் செய்திருக்கக் கூடுமா என்றால்... புலிகள் எக்காரணம் கொண்டும், யாருக்கும் விலை போகிறவர்களில்லை. அப்படிக் கூலிப்படையாக இருப்பவர்கள் அங்கே இல்லவே இல்லையா?

ப்ளேட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்... அதுமட்டுமல்ல... இந்தியப் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தபோதே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தன.

Advertisment

ராஜீவ்காந்திகூட ஈழ மண்ணில் நடக்கின்ற போரை நிறுத்திக்கொள்ள வேண்டும்,. விடுதலைப் புலிகளோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு அப்போது வந்துவிட்டாரே...!

1990-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்...

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்... நம்பிக்கைக்குரியவர் யார்?’’ என்று ப.சிதம்பரத்திடம் கேட்டாராம்.

நான் மேல்-சபை துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், மூத்த அரசியல்வாதியாக இருப்பதையும் குறிப்பிட்டு... ’’புலவர் புலமைப்பித்தன்... “ என என் பெயரைச் சொல்லியிருக்கிறார்.

"அப்படியானால் அவர் விடுதலைப் புலிகள் சார்பில் சமரச பேச்சுவார்த்தைக்கு வர இயலுமா?' என ராஜீவ் கேட்டாராம்.

உடனடியாக சத்தியமூர்த்தி பவனைத் தொடர்பு கொண்டு எனது அருமை நண்பர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தியிடம் விவரத்தைச் சொல்லியிருக்கிறார் ப.சிதம்பரம்.

pulamaipithan

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநரும், காங்கிரஸ் பிரமுகருமான முக்தா சீனிவாசனைத் தொடர்புகொண்ட விநாயகமூர்த்தி, "நீங்களும், புலவரும் நண்பர்கள்தானே... விடுதலைப் புலிகள் சார்பில் சமரச பேச்சுவார்த்தையில் புலவரால் கலந்துகொள்ள முடியுமா? என்று கேளுங்கள்' எனச் சொல்ல...

முக்தா சீனிவாசனின் அலுவலக நிர்வாகி வாசு என்னைச் சந்தித்து, "முக்தா சார் உங்களை பார்க்க விரும்புகிறார்- நீங்கள் வர இயலுமா?' என்று கேட்டார்.

நான் உடனே கிளம்பினேன். என்னைப் பார்த்ததும் மிகுந்த அன்போடு என்னை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார் முக்தா.

""பெருந்தலைவர் காமராசர் இருந்திருந்தால் அவர் என்ன கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்போமோ, அப்படி ஒரு கடமையை நீங்கள் செய்ய வேண்டும்.''

""காமராஜர் பெருந்தலைவர். நான் ஒரு சிறிய... எளிய தொண்டன். அவரோடு என்னை ஒப்பிட்டு அவரது பெருமையைக் குறைத்துவிடாதீர்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்.''

""ராஜீவ்காந்தி அவர்கள், விடுதலைப் புலிகளுடன் சமரசமாகப் போக விரும்புகிறார். சமாதானம் செய்துகொள்ள எண்ணுகிறார். விடுதலைப் புலிகள் சார்பில் நீங்கள் பேச இயலுமா?''

""எனக்கு இரண்டு மணி நேரம் அவகாசம் தாருங்கள்; நான் முடிவைச் சொல்கிறேன்.''

""நாளைக்குக்கூட நீங்கள் சொல்லலாம்'' என்றார்.

முக்தாவிடம் விடைபெற்றுக் கொண்டு நான் நேராக திருவான் மியூர் சென்றேன். திருவான்மியூரில் தான் தம்பி கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். துக்கையாண்டி ஐ.பி.எஸ். அவர்களின் கண்காணிப்பில் இருந்தார் கிட்டு.

என்னைப் பார்த்ததுமே, "நீங்கள் மேலே போகலாம்' என்றார் துக்கையாண்டி.

"வாங்கண்ணே...'’என வரவேற்று கிட்டு என்னை அமரவைத்தார்.

"ராஜீவ்காந்தி அவர்கள் நம்மோடு சமரசம் செய்துகொள்ள விரும்புகிறார். போர் நிறுத்தம் செய்துகொள்ளக் கருதுகிறார். நம் இயக்கத்தின் சார்பில் டெல்லி சென்று பேச இயலுமா? என என்னைக் கேட்கிறார்கள். நான் என்ன சொல்வது?' எனக் கேட்டேன்.

"கொஞ்சம் பொறுங்கள் அண்ணே...'’எனச் சொல்லிவிட்டு, தம்பி பிரபாகரனைத் தொடர்புகொண்டு சேதியைச் சொன்னார் கிட்டு.

"அண்ணனைப் பேச அழைத்தால், அவர் தாராளமாக நம் சார்பில் பேசலாம்' என கிட்டுவிடம் தெரிவித்த தம்பி, சில கோரிக்கைகளையும் சொல்லியிருக்கிறார்.

அவற்றைக் குறித்துக்கொண்டு வந்த கிட்டு, "அண்ணே நீங்கள் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளலாம். இந்தக் குறிப்புகள் அடிப்படையில் நீங்கள் பேசுங்கள்' என்றார்.

ஒரு பத்துக் கோரிக்கைகள் இருக்கும் என ஞாபகம். அவற்றில் மிக முக்கியமான மூன்று கோரிக்கைகள் என் நினைவில் நிற்கின்றன.

1. தமிழ் ஈழப் பகுதியில் இருக்கும் 200 சிங்கள ராணுவ முகாம்களை விலக்கிக் கொள்ள வேண்டும்.

2. வடக்கையும், கிழக்கையும் இணைத்து, ‘தமிழர்கள் தாயகம்’ என்று அறிவிக்க வேண்டும்.

3. மறுவாழ்வுப் பணிக்காக நூறு கோடி ரூபாய் தரவேண்டும்.

-என்பதுதான் அந்த முக்கிய கோரிக்கைகள்.

பிரணாப் முகர்ஜி அவர்கள் மறுத்த ஒரு உண்மையைச்...

(சொல்கிறேன்)

__________________

இலங்கை வானொலியின் காதல் கீதம்!

முத்துராமன், சரோஜாதேவி, லட்சுமி உள்ளிட்டோர் நடித்த படம் ‘உயிர்’. இசை- ஸ்ரீதர், டைரக்டர்- சோமசுந்தர். இந்தப் படத்தில் டி.எம். சௌந்திரராஜன் - பி.சுசீலா ஜோடிக் குரலில் ஒரு டூயட் பாடலை எழுதினேன். இலங்கை வானொலியில் ஒரு காலத்தில் தவறாமல் ஒலித்தது இந்த காதல் பாட்டு.

dddsd

பல்லவி:

தண்ணீரில் ஏதடி நெருப்பு - இதை

தாங்காமல் ஏனிந்த வெறுப்பு

பெண்ணாக நான் கொண்ட பிறப்பு - அந்த

பெண்மைக்கு நான் தந்த மதிப்பு

சரணம்-1

தங்கமகள் மேனி தண்ணீரில் தோணி

இன்று கொஞ்சம் ஆடட்டுமே

பட்டுடலை தேட தொட்டு விளையாட

பாடல் ஒன்று பாடட்டுமே

நீர் கலந்த நீராய் நான் கலந்த பின்னால்

இங்கு வந்து ஆடட்டுமா

நீயிருந்து தனியே காணவந்த அழகை

ஊரறிய பாடட்டுமா

சரணம்-2

வாசமுள்ள தென்றல் வீசி வரும்போது

சொந்தம் என்ன கேட்கின்றது

வண்ண மயில் தோகை தன்னை விரித்தாட

எந்த இடம் பார்க்கின்றது

உன்னை மணம் கொண்ட

தென்றல் எனும் பாவைக்கு

உள்ளம் ஒன்று இருக்கின்றது

வண்ணமயில் போல கன்னி இங்கு ஆட

நாலு குணம் தடுக்கின்றது

(பாட்டுக்கச்சேரி தொடரும்)