டெல்லி தந்த நெருக்கடி! தோளில் சாய்ந்த எம்.ஜி.ஆர்.!
இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 29-ஆம் நாள் கையெழுத்தாகி... ஆகஸ்ட் திங்கள் 2-ஆம் நாள் அந்த ஒப்பந்தத்திற்கான பாராட்டு விழா சென்னையில் ஏற்பாடானது. இந்த ஒப்பந்தத்தை முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. அதனால் அந்த விழாவில் கலந்துக்கொள்ளக் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர். நினைத்தார். அதற்கேற்ப அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். விழாவில் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொள்ள ஏற்பாடானது. விளம்பரச் சுவரொட்டிகளும் தயாராக இருந்தன.
தலைவர் எம்.ஜி.ஆர். சூலை 31-ஆம் நாள் மாலை... அமெரிக்கா செல்வதற்காக ராமாவரம் தோட்டத்திலிருந்து விமானநிலையத்திற்கு காரில் கிளம்பினார். தாமஸ் மவுண்ட் மைதா னத்தின் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது...
"முதலமைச்சர் இப்போது அமெரிக்கா செல்லக்கூடாது. சென்னையில் ஆகஸ்ட் இரண்டாம் நாள் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்...' என்கிற டெல்லியின் உத்தரவு எட்டியது. இதனால் தோட்டத்துக்குத் திரும்பினார் தலைவர்.
டெல்லியின் நெருக்கடியால் வேண்டா வெறுப்பாக அந்த விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டார். தன் எண்ணத்துக்கு மாறாக டெல்லி இடுகின்ற கட்டளையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் எம்.ஜி.ஆர். இருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் உடல்நிலை மிக மோசமான நிலைக்கு வந்திருந்ததுதான் காரணம். மிகுந்த மனச் சோர்வுடனும், தாங்கொண்ணா வேதனையுடனும்தான் விழாவில் கலந்துகொண்டார்.
ஆகஸ்ட்டு 5-ஆம் தேதி... அமெரிக்கா செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். காலை 8 மணியிலிருந்தே... அமைச்சர்கள், முக்கியமான நண்பர்கள் என்று பலரும் தோட்டத் தில் தலைவரைக் காண காத்திருந்தார்கள். முந்தினநாள்.... கலைவாணர் அரங்கத்தில் அவரைப் பார்த்து பேசியபோதே... “நாளைக் காலை என் குடும்பத்தோடு வந்து உங்களைப் பார்த்து வழியனுப்ப வருகிறேன்’’ என்று சொல்லியிருந் தேன்.
அதன்படி... காலை 9 மணிக்கு என்மனைவி தமிழரசி, என் உறவுக்கார அம்மா ஒருவர் ஆகியோருடன் தோட்டத்திற்குச் சென்றேன். அவரைக் காண வந்தவர்களால் தோட்டம் நிரம்பி வழிந்தது.
தன் உதவியாளர் சம்பத்திடம் இண்டர்காமில் தொடர்பு கொண்டு... "யார், யார் வந்திருக்கிறார்கள்' என விசாரித்து... மந்திரிகள், முக்கிய தொழிலதி பர்கள் ஆகியோரையெல்லாம் விட்டுவிட்டு எங்களை மாடிக்கு வரச்சொன்னார். தம்பி மாணிக்கம் வந்து எங்களை லிஃப்ட் வழியாக அழைத்துப் போனான்.
தொளதொளவென்றிருந்த ஒரு சட்டையும், லுங்கியும் அணிந்துகொண்டு... எவரோ ஒருவரைப்போல கட்டிலில் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்து நான் கலங்கிப் போனேன்.
மாமன்னரைப்போல அத்தனை கம்பீரமாக... அத்தனை அழகாக... நித்தம் நித்தம் நான் பார்த்த அந்த மனிதர்... பார்க்கப் பார்க்கச் சலிக்காத வசீகரம்கொண்ட எம்.ஜி.ஆர். என்கிற நாயகன் அப்போது இருந்த கோலத்தைப் பார்த்து நான் கலங்கிப்போனேன்.
அங்கிருந்த சோபாவில் என் மனைவியும், உறவினர் பெண்மணியும் அமர்ந்தனர். நான் ஒரு இருக்கையில் அமரப்போனேன். உடனே தலைவர் என் கைகளைப் பற்றி இழுத்து, கட்டிலில் தன் அருகே அமரச் செய்தார். என் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டார். அவரின் கைகள் நீலம் பூத்து வீங்கியிருந்தன. என் கண்கள் கலங்கின. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன நினைத்தாரோ... “""நான் அமெரிக்கா போயிட்டு வந்து உங்களை பார்க்கிறேன். உங்களுக்கு ஏதாவது செய்யணும்''’என்றார்.
உடலாலும், மனதாலும் நெருக்கடியில் இருக்கிற நேரத்திலும், மற்றவர்களின் நலனைச் சிந்தித்தது அவரின் உயர்ந்த உள்ளம்.
""என்னைப்பற்றி நீங்க எதற்காகண்ணே கவலைப்படுறீங்க? அனாதையா வந்த நான், உங்களால் ஆளாக்கப்பட்டு, இன்று நல்ல நிலையில்தானே இருக்கேன். எனக்கு நீங்க ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்ங்கண்ணே...''’’ என்றேன்.
"என்ன?'’என வியப்பு விலகாமல் என்னைப் பார்த்தார்.
""நீங்க தைரியமா, நம்பிக்கையோட அமெரிக்கா போய்ட்டு திரும்பி வாங்க. இந்த ஒரு உதவி மட்டும் எனக்குப் போதும்''’என்றேன்.
நான் சொன்னதைக் கேட்டதும் ஒரு குழந்தையைப்போல கண்ணீர்விட்டு அழுதார்.
நான் என் கைக்குட்டையால் அவரது கண்ணீரைத் துடைத்தபடியே... “""ஊரோட... உலகத்தோட கண்ணீரை எல்லாம் துடைச்ச உங்கள் கண்கள்லருந்து இப்படி கண்ணீர் வரலாமா?''’எனக் கேட்டு... அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாக என் தோளோடு அவரை சாய்த்துக்கொண்டேன்.
"உங்கள் எம்.ஜி.ஆர். எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்'’என ஜெயவர்த்தனே சொன்னதை.... அண்ணன் எம்.ஜி.ஆருக்கு ராஜீவ்காந்தி கொடுத்த நெருக்கடியைச்....
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்
_____________
விக்கலுக்கு தண்ணீர்! சிக்கலுக்கு..?
"ஆஸ்கர் மூவிஸ்' எம்.பாஸ்கர் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் "தீர்ப்புக்கள் திருத்தப் படலாம்'. சிவகுமார், அம்பிகா, குழந்தை நட்சத்திரம் மீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சூழ்நிலையால் கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். மகளுக்கு கதை சொல்லி தூங்க வைக்க... தன் இல்லறக் கதையையே பாட லாக கணவன் பாடுவதான பாட்டுச் சூழலுக்கு நான் ஒரு பாடலை எழுதினேன். ஜெயச்சந்திரன் குரலில், சங்கர்-கணேஷ் இசையில் வந்த அந்தப் பாடல் சோகத்தால் அழுத்தப்பட்ட நெஞ்சங் களுக்கு... சோகத்தின் சுமையை இறக்கிவைத்த உணர்வைத் தரும். வாய்ப்புக் கிடைத்தால் கேளுங் கள்... இப்போது படியுங்கள் அந்தப் பாடலை...
பல்லவி:
ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ?
சரணம் 1:
நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்?
மருந்து நோயாகலாமா?
மனதை நீ வாட்டலாமா?
விழிகள் பார்ப்பதென்ன மெய்தானா?
விளக்கில் என்ன இருளா?
இங்கு கிழக்கில் அஸ்தமனமா?
கண்கள் சொல்லும் சாட்சி ஒன்று
நெஞ்சம் சொல்லும் சாட்சி ஒன்று
எந்தப்பக்கம் உண்மை என்று
தீர்ப்பு சொல்லம்மா...
சரணம்: 2
நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்
மலரில் மாலைகட்டி நான் தந்தேன்
சிலுவை எதற்கு சுமந்தாய்?
என் மனதில் ஆணி அறைந்தாய்!
விக்கலுக்கு தண்ணி உண்டு
சிக்கலுக்கு என்ன உண்டு?
சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு
பக்கம் செல்வதோ...
(பாட்டுக் கச்சேரி தொடரும்)