எதிர்க்கட்சிக்கு எடுத்துக் கொடுத்தேன்!

புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை சட்டமன்ற மேல்-சபை உறுப்பினராக ஆக்கியதுடன் அல்லாமல்... மேல்-சபை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்க வைத்தார்.

நான் மேல் சபையை நடத்தியபோது எத்தனையோ சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தது.

gg

Advertisment

மேல்-சபையின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க.வின் சங்கரலிங்கம் பேசும்போது... பழைய உரைநடை இலக்கியத்திலிருந்து உதாரணம் சொல்ல வந்து... "அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது'’என முதல்வரியைச் சொல்லி... அடுத்த வரி மறந்துபோனதால் திகைப்பும், தடுமாற்றமுமாக பேச்சை நிறுத்த... உடனே நான் அவர் சொல்ல வந்த இலக்கிய உதாரணப் பகுதியைச் சொன்னேன். கட்சி பேதமின்றி எல்லோரும் ஆரவராமாய்க் கைதட்டினார்கள்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு இலக்கியமான இறையனார் களவியல் உரையில் உள்ளது அந்த உரைநடை.

அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது

Advertisment

செல்லப் பசி கடுகுதலும் அரசன் தம் சிட்டரை எல்லாம் கூவி

வம்மின் யாம் உங்களைப் புரந்தரகில்லேன். என் தேயம்

பெரிதும் வருந்துகின்றது நீயிர் போய் உமக்கு அறிந்தவாறு

புக்கு நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின்

என்றான். என அரசனைவிடுத்து எல்லோரும்

போயின பின்றை கணக்கின்றிப் பன்னீரியாண்டு

கழிந்தது

கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது’’

-இதுதான் எதிர்க்கட்சித் தலைவர் சொல்ல வந்த உதாரணம். இதற்கு அர்த்தம் என்னவென்றால்...

அந்தக் காலத்தில் பாண்டியநாடு 12 ஆண்டுகள் பஞ்சத்தில் அடிபட்டது. எல்லோரும் கோரப்பசியால் பீடித்தார்கள். மன்னன் தன் அலுவலர்கள் எல்லோ ரையும் அழைத்து... "நாடு பஞ்சத்தில் இருப்பதால் உங்களுக்கு உணவளிக்க முடியாது. நீங்கள் உங்கள் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் செல்லுங் கள். நாடு மீண்டும் சுபிட்சம் பெற்றதும் நீங்களெல்லாம் திரும்பிவரலாம்' எனச் சொன்னான். 12 ஆண்டுகளுக் குப்பின் மழை பொழிந்து மீண்டும் நாடு வளமாகியது.

அன்றைய எம்.ஜி.ஆர். அரசை குறைசொல்ல இந்த உதாரணத்தை பயன்படுத்த விரும்பினார் சங்கரலிங்கம். ஆனால் அவருக்கு மறந்துவிட்டது. அந்த இடத்தில் ஒரு இலக்கியவாதியாக நான் இருந்து அந்த உதாரணத்தை நான் சொன்னேன். நான் ஆளும்கட்சி சார்பானவன் என்கிறபோதும்... எதிர்க்கட்சித் தலைவர் மற்ற உறுப்பினர்களின் கேலிக்கு ஆளாகாமல் இருக்க நான் கைகொடுத்ததை கட்சி பேதமின்றி எல்லோரும் பாராட்டினார்கள்.

தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் அதிரடியானவர். அவர் மேல்-சபை உறுப்பினராக இருந்தார். சபையை நான் நடத்திக்கொண்டிருந்தபோது... அவருக்கு பேச வாய்ப்பளித்தேன். எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால்... நீண்டநேரம் பேசிக்கொண் டிருந்த ஆறுமுகத்தை அமரும்படிச் சொன்னேன். ஆனால் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நான் பலமுறை சொல்லியும் கேளாததால் உட்காரச் சொல்லி... உரத்த குரலில் சொன்னேன். இதனால் கோபமான ஆறுமுகம் என்னை மிகக்கோபமாக முறைத்துப் பார்த்தார். சபை முடிந்து வெளியே வந்ததும்... "ஆறுமுகம்.. இந்த முறைப்புக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்'’என நான் சொன்னேன்.

"அதெல்லாம் இல்ல புலவரே... அப்படியெல்லாம் இல்ல...'’என்றார் ஆறுமுகம்.

ஆனால்... "உங்களுக்கு தரப்பட்ட நேரம் முடிந்து விட்டது, அமருங்கள்'’என்று சொல்லாமலேயே குறித்த நேரத்தில் சொல்லவேண்டியதைச் சொல்லி... குறித்த நேரத்தில் அமர்ந்துவிடுகிற உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர், பட்டதாரிகள் பிரதிநிதியாக எம்.எல்.சி.ஆன... பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ராமசாமி முதலியாரின் மகன் ஏ.ஆர். தாமோதரன். அவர் ஆங்கிலத்தில்தான் சபையில் பேசுவார். எனது பேச்சையும், உறுப்பினர்கள் பேசும்போது அதற்குப் பொருத்தமாக நான் அடிக்கிற கமெண்ட்ஸ்களையும் ரசிப்பார். பெரும்பாலான உறுப் பினர்கள் எனது கமெண்ட் ஸுக்கு ரசிகர்கள்தான்.

ஒருநாள்... மேல்-சபை முடிந்து வெளியே வந்தபோது.... எனக்குப் பின்னாலிருந்து கலைஞர் குரல் கொடுத்தார். நான் அவரிடம் சென்றேன்.

என் கைகளைப் பற்றிக் கொண்ட கலைஞர்... பொதுவாக பேசிக்கொண்டிருந்தார். நான் ஈழத் தமிழர் துயரங்களை சபையில் பேசுகிறபோது, அதை அமைதியாக கூர்ந்து கேட்டிருக்கிறார் கலைஞர். நாங்கள் சில நிமிடங்கள் அங்கே நின்று பேசிக்கொண்டிருக்க... அங்கே வந்த புரட்சித் தலைவர், என்னைப் பார்த்து கண்ணடித்து சிரித்துவிட்டுப் போனார்.

மாவீரன் குட்டிமணி பற்றி ஆவேசமாக நான் பேசியதைச்...

(சொல்கிறேன்)

படம் உதவி: ஞானம்

____________________________

மேக ஊர்வலம்... மின்னல் தோரணம்...!

"ஈரமான ரோஜாவே' படத்திற்காக தம்பி இளையராஜா இசையில், கேயார் இயக்கத்தில் ஒரு அருமையான... காதலியின் உருவ அழகை காதலன் பாடுவ தாக ஒரு பாடலை எழுதியிருந் தேன். மனோவின் இனிமையான குரலில் ஒலித்த அந்தப் பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இப் போதும் என்னைப் பார்க்கிற சில ரசிகர்கள் "வாழைத்தண் டில் ராஜகோபுரம்?'’என்பது குறித்து வினவுவார்கள். சில விளக்கங்களை அவர்களாகவே தேடிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன். அவளைப் படைத்த பிரம்மனே அவள் அழகு கண்டு ஏங்குகிற அளவிற்கு அழகியாக இருந்ததாக காதலன் வடிவில் என் கற்பனையை விரித்திருந்தேன்.

இதோ... அந்தப் பாடல்...

mm

பல்லவி:

அதோ மேக ஊர்வலம்

அதோ மின்னல் தோரணம் அங்கே

இதோ காதல் ஊர்வலம்

இதோ காமன் உத்சவம் இங்கே

ஒரே நாள்

அழகிய முகம் பார்த்தேன்

இதோ நான்

உயிரினில் உன்னை சேர்த்தேன் வா

சரணம்-1:

உனது பாதம் அடடட இலவம் பஞ்சு

நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு

இரண்டு வாழைத்தண்டிலே ராஜகோபுரம்

நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்

தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே

ஆடை என்ன வேண்டுமா

நாணம் என்ன வா வா...

சரணம்-2:

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்

முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்

தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை

வந்து ஆடச் சொல்லுமே சிந்து மல்லிகை

உன்னை செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்

காதல் பிச்சை வாங்குவான்

இன்னும் என்ன சொல்ல...

(பாட்டுக்கச்சேரி தொடரும்)