கலைஞரைப் பார்த்தேனா? எம்.ஜி.ஆரின் சந்தேகம்

காரை பழுதுநீக்கி எடுத்துவர என் உதவியாளர் சந்திரசேகரை அனுப்பியிருந்தேன். வழியில் முரசொலி ஆபீஸ் வாசலில் காரை நிறுத்திவிட்டு... ஆபீஸிக்குள் போனதால்... என் கார் முரசொலி அலுவலகத்தின் முன் நிற்பதை யாரோ பார்த்திருக்கிறார்கள். அண்ணன் எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிருக்கிறது. அவருக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி!

அன்றைய இரவு 11:45 மணி!

அந்நேரத்தில் போன் மணி ஒலிக்க... நானோ காற்றோட்டத்திற்காக மொட்டை மாடியில் கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால்... என் மகன் புகழேந்தி தொலைபேசியை எடுக்க... என் மகன் என்பதை புரிந்து கொண்ட புரட்சித்தலைவர், ""டேய் நான் மாமா பேசுறேன்... அப்பாவை பேசச் சொல்'' எனச் சொல்லியிருக்கிறார்.

Advertisment

b

என் மகன் மேலே ஓடி வந்து தன் தாயிடம் ""அம்மா தோட்டத்திலருந்து மாமா பேசுறார். அப்பாவோட பேசணுமாம்'' என்று சொல்ல, ""அப்பா அசந்து தூங்கிக்கிட்டிருக்கிறார். இப்போது எழுப்ப முடியாது; அவரைக் காலையில் பேசச் சொல்''’என்று சொல்லி விட்டார்.

திரும்ப என் மகன் போனை எடுத்து, ""மாமா அப்பா அசந்து தூங்கிக் கொண்டி ருக்கிறார் காலையில்...'' என்று இழுத்திருக்கிறான்.

Advertisment

""டேய் போ. நான் சொன்னதாக அம்மாவிடம் சொல்லி அப்பாவை எழுப்பிக் கொண்டு வந்து பேசச் சொல்'' என்று உரிமையோடு கடிந்திருக்கிறார்.

அவன் திரும்ப ஓடிவந்தான்; என் மனைவி என்னை எழுப்பி தோட்டத்தில் இருந்து அவர் பேசுகிறார். நீங்க என்னவென்று போய் கேளுங்க’என்றார்.

நான் தூக்கக் கலக்கத்தோடு கீழே இறங்கி வந்தேன், தொலைபேசியை எடுத்து... ""ஹலோ'' என்றேன்.

""நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்.''

""சொல்லுங்கண்ணே!''

""நீங்கள் கலைஞரைப் போய்ப் பார்த்தீங்களா?''

""என்ன இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்? நான் எதற்காக கலைஞரைப் பார்க்கவேண்டும்?''

""இல்லை பார்த்தீங்களா?''

""நான் அவரைப் பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அப்படி அவரைப் பார்த்து அவரோடு சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்தால் நேராக உங்களிடம் வந்து சொல்லிவிட்டே போவேன். சாம ஏமத்தில் ஒளிவு மறைவாக நான் சென்று பார்க்க மாட்டேன்.''

""எனக்கும் அது தெரியும்.''

""தெரிந்திருந்தும் பிறகு ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்?'' எனக் கேட்டேன்.

சிறு இடைவெளிக்குப் பின் “""விடுதலைப் புலிகளுக்கு என்னைவிடக் கலைஞர் உதவி செய்து விட்டாரா?'' எனக் கேட்டார்.

""அவர் உதவி செய்தார் என்று நான் எப்போது சொன்னேன்? அவரும் உதவ மாட்டார், நீங்களும் உதவ மாட்டீர்கள். இந்தத் தமிழ் நாட்டில் உள்ள எவரும் உதவ மாட் டார்கள். அதனால் நான் அவர்களிடம் (விடுதலை புலிகளிடம்) நீங்கள் உங்கள் காலில்தான் நிற்கவேண்டும்; இங்கே இருக்கும் யாரையும் நம்பி செயல்பட முடியாது’ என்று தான் சொல்லி இருக்கிறேன்.''

""ஏன் அப்படி நினைக்கிறீர்கள் நான் உதவி செய்ய மாட்டேனா?''

""இன்றுவரை; இந்த நிமிடம்வரை நீங்கள் எதுவும் செய்யவில்லை; நாளையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இல்லை.''

""இல்லை. நான் அவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன். ஜெயவர்த்தனே டெல்லிக்கு வருகிறார்!’’“வந்துவிட்டுச் செல்லட் டும்; நானே அவர்களை (விடுதலை புலிகளை) அழைத்து என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்கிறேன்.''

""நன்றி! மிக்க நன்றி!''

""அது மாத்திரம் அல்ல, நான் உங்களை அரசவை கவிஞராக நியமிப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.''

""நன்றி!''

""எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்னை நம்புங்கள்.''

""மிக்க நன்றி!''

இப்படி அந்த நள்ளிரவிலும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் புரட்சித்தலைவருக்கும் எனக்கும் இடையே கலந்துரையாடல் தொடர்ந்து நடந்தது.

நான் ஏறத்தாழ நான்கு மாதங்கள் அவரைப் பார்க்காமல் இருந்ததும், என் கார் இரவு பத்து மணி வாக்கில் முரசொலி அலுவலகம் பக்கம் நின்றதும், அவருக்கு வேறுவிதமான எண் ணத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

புரட்சித்தலைவர் ஏற்கனவே என்னை எம்.எல்.சி. (மேல் சபை உறுப்பினர்) ஆக நியமித்ததும், மேல் சபை துணைத் தலைவராக ஆக்கியதும் என் நினைவுகளில் ஓடியது.

சினிமாவில் புரட்சித்தலைவருக்கு பல கொள்கைப்பாடல்களை எழுதியிருந்தேன். அவரின் அரசியல் முடிவுகளிலும் முக்கியமாக உடனிருந்து செயல்பட்டேன். அண்ணா தி.மு.க.வை தொடங்கிய நேரத்தில் தலைவரின் தோளோடு தோள் நின்றேன். கட்சியின் முக்கிய பேச்சாளராக ஊர் ஊராகச் சென்று மேடை களில் பேசினேன். இப்படி கட்சிக்காகவும், தலைவர்மீது விசுவாசமாகவும் இருந்த என்னை கௌரவப்படுத்த விரும்பியவர்... நான் கேட்காம லேயே என்னை எம்.எல்.சி. வேட்பாளராக முடிவுசெய்து வைத்தார்.

புரட்சித்தலைவரின் உதவியாளர் அழைப்பின் பேரில் செக்கரட்ரியேட் சென்றேன். அப்போதுதான் என்னை எம்.எல்.சி. வேட் பாளராக தலைவர் தேர்ந் தெடுத்திருக்கிற விஷயத்தைச் சொன்னார். ஆளுயர ரோஜா மாலை வாங்கிக் கொண்டு, என் குடும்பத் தாருடன் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆருக்கு மாலையணிவித்து வாழ்த்துப் பெற்றேன்.

எம்.எல்.சி.யாக ஆக்கியதுடன் மேல்சபையின் துணைத்தலைவராகவும் என்னை தேர்ந்தெடுக்க வைத்தார் புரட்சித்தலைவர். இதற்காக மேல் சபையில் நான் அவருக்கு நன்றி தெரிவித்து பேசிய உரை உருக்கமாக அமைந்தது. ஆனால் அன்று புரட்சித் தலைவர் அவைக்கு வரவில்லை. ஆனால் என் பேச்சை மட்டும் தனது அறையிலிருந்து ஒலிபெருக்கி மூலம் கேட்டிருக்கிறார்.

""நான் அவையில் இருந்திருந்தால் புலவர் இப்படி மனம்விட்டு பேசியிருக்க மாட்டார். அதனால்தான் நான் அவைக்கு வரவில்லை'' எனச் சொல்லியிருக்கிறார்.

நான் மேல் சபை துணைத் தலைவராக இருந்தபோது ம.பொ.சி (ம.பொ.சிவஞானம்) அவர்கள் தலைவராக இருந்தார். உறுப்பினர்கள் பேசுவதற்கு மிக செலக்டிவ்வாகத்தான் நேரம் ஒதுக்குவார். சபையை நான் நடத்துகிற நாட்களில் தாராளமாக... கட்சி பேதமின்றி உறுப்பினர்களை பேச அனுமதிப்பேன். நேரமும் கூடுதலாகத் தரு வேன். அதனால் உறுப்பினர் கள் பெரும்பாலும் நான் சபையை நடத்தும்போது பேசுவதற்கே விரும்புவார்கள். வயது முதிர்வு காரணமாக ம.பொ.சி. களைப்புறுவார். “நீங்க போய் ஓய்வெடுத்துக் கங்க. நான் பார்த்துக்குறேன்...’’ என நானே சபையை நடத்து வேன். நான் மேல் சபையை நடத்தியபோது எத்தனையோ சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தது.

சபைக்குள்... என்னை அச்சுறுத்துவதுபோல தி.மு.க.வின் வீரபாண்டி ஆறுமுகம் முறைத்ததைச்...

(சொல்கிறேன்)

____________________

நீங்கள் கேட்டவை! நான் தந்தவை!

பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த "நீங்கள் கேட்டவை' படத்தில் ஒரு சுகமான டூயட் பாடலை எழுதியிருந்தேன்.

பல்லவி:

பெண்:

nn

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

என் தேகம் உன் தேசம்

எந்நாளும் சந்தோஷம் - என்

தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

சரணம்-1:

ஆண்:

மென் பஞ்சு மேகங்கள்

உன் பிஞ்சு பாதங்கள்

மண் தொட்டதால் இன்று

செவ்வானம் போல் ஆச்சு

விண் சொர்க்கமே பொய் பொய்

என் சொர்க்கம் நீ பெண்ணே

சூடிய பூச்சரம் வானவில் தானோ...

சரணம்-2:

பெண்:

ஆராதனை நேரம்

ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம்

அனல் ஆகுதே மோகம்

என் மேகமே வா வா

இதழ் நீரைத் தூவு

மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்

"தங்கமகன்' படத்தில் நான் எழுதிய "ராத்திரியில் பூத்திருக் கும்' பாடலில் வரும் "மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே' என்கிற உவமையை "சிவா' படத்தில் இடம் பெற்ற‘"இரு விழியின் வழியே' பாடலின் சரணத்தில் "தொட்டிலிடும் இரு தேமாங்கனி' என மீண்டும் பயன்படுத்தி னேன். அதுபோல "ஓ வசந்த ராஜா' பாடலில் குறிப்பிட்ட "வெண்பஞ்சு பாதங்களை' இன்னொரு பாடலில் "இலவம் பஞ்சு' என கையாண்டேன்.

(பாட்டுக் கச்சேரி தொடரும்)

__________________

திருத்தம்!

"நாயகன்' தொடர் அத்தியாயம் 32-ல் "அரசவைக் கவிஞர்' என்கிற அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள பதவியில் நான் இருந்ததால் நானும் மீனம்பாக்கம் சென்றேன்’ என்று பிரசுர மாகியிருந்தது. "அரசவைக் கவிஞர்' என்பதற்குப் பதில் "மேல் சபை துணைத்தலைவர்' என திருத்திக்கொள்ளவும்.