முதல்வரின் கோபம்!

ஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொடக்கவிழாவின்போது நடந்த கவியரங்கத்தில் நான் பாடிய கவிதை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை தாக்குவதாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் சிலர் சொல்லியதால்... விழா முடிந்து சென்னை திரும்பிய அன்று காலையில் என் வீட்டுக்கு போன் செய்த எம்.ஜி.ஆர். "இனிமேல் என் முகத்தில் நீங்கள் விழிக்காதீர்கள்'’என்று சொல்லிவிட்டுத் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.

mgr

ஏறத்தாழ இரண்டு மாதங்கள் அவரைச் சந்திக்கவே இல்லை. ஆனால் நான் அவரைப் பார்த்து தீரவேண்டிய நெருக்கடி வந்தது. ஃபிஜித் தீவில் அதன் தலைநகர் சுவாவில் காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடந்தது. அந்த ஆண்டு நான்தான் தமிழ்நாட்டு அரசின் சார்பில் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடாகியிருந்தது. நான் வெளிநாடு போகும்போது முறையாக அவரைச் சந்தித்து மாலைபோட்டு மரியாதை தெரிவித்து விட்டு விடைபெற வேண்டும். எனக்குள்ளே உறுத்தல் ஒருபுறம் இருந் தாலும், மாலை 4 மணி அளவில் மாலையும் கையுமாக என் மனைவி, மக்கள், நண்பர்கள் பலரோடு இராமாபுரம் தோட்டத்துக்கு எம்.ஜி. ஆரைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னைச் சந்திக்க மறுத்துவிட்டார். நான் வெளிநாடு புறப்பட்டுப் போய்விட்டேன். போகிற வழியில், ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன்.

Advertisment

""நீ மனச்சாட்சியே இல்லாதவன். நான் வெளிநாடு புறப்பட்டு வரும்போது உன்னைப் பார்த்து மாலை அணிவித்து மரியாதை தெரி வித்துவிட்டு வர விரும்பினேன்; ஆனால் என்னை அனாதையைப் போல நீ அனுப்பி வைத்தாய்''’என்று அங்கிருந்தபடியே கடுமையான வார்த்தைகளால் அவரைத் திட்டி ஒரு கடிதம் எழுதி அனுபினேன். அந்தக் கடிதத்தை மிகநெருங்கிய ஒருவரிடம் காட்டி... "புலவருக்கு என்மீது எத்தனை கோபம் பாருங்கள், எப்படித் திட்டி எழுதியிருக்கிறார்' என்று சொல்லிவிட்டுச் சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஒன்றரை மாதங்கள் கழித்து நான் சென்னை வந்து சேர்ந்தேன். ஏதோ ஒரு நாட்டு அதிபர் (எந்த நாடு என்று நினைவில்லை) சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். மரபுப்படி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கச் செல்ல வேண்டும். "அரசவைக் கவிஞர்' என்கிற அமைச்சரவை அந்தஸ் தில் உள்ள பதவியில் நான் இருந்ததால் நானும் மீனம்பாக் கம் சென்றேன். வந்திறங்கிய அந்த அதிபருக்கு வரிசையாக நிற்கும் எங்களை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார்.

நான் வரிசையில் நிற்பதை எதிர்பார்க்கவில்லை; காரணம் நான் திரும்பி வந்த செய்தி அவருக்கு தெரிந்திருக்கவில்லை. என் பக்கம் வந்த படியே கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு என்னை முறைப்படி அறிமுகப்படுத்தி வைத்தார். வரவேற்பு முடிந்து நான் என் காரில் ஏறச் சென்றேன். என் பக்கத்தில் வந்து என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய், தன் காருக்குள் இருக்கவைத்தார். நான் எதுவும் பேச வில்லை!

Advertisment

""ஆமாம்... எப்போது வந்தீர்கள்?!''’என்றார்.

""நாலைந்து நாளாயிற்று''’’

""நீங்கள் வந்ததே எனக்கு தெரியாதே...''’’

""நீங்கள் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது''’என்றேன்.

சிரித்தார்.

""இன்னும் என் மீது புலவருக்கு கோபம் தணியவில்லை'' என்று காரில் உடன் பயணம் செய்த இரண்டு அமைச்சர்களிடம் சொல்லி மீண்டும் சிரித்தார்.

இராமாபுரம் தோட்டம் சென்றடைந்தோம். சூடாக வறுக்கப்பட்ட மீன் ஒரு தட்டு நிறைய வந்தது. ""என்ன பேசாமலே இருக்கிறீர்கள்; சாப் பிடுங்கள்'' என்றார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டோம். பிறகு... ""ஆமாம்! தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவில் நீங்கள் என்ன கவிதை சொன்னீர்கள்.. சொல்லுங்க?'' எனக் கேட்டார் எம்.ஜி.ஆர்.

நான் சொன்னேன்.

பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சரைப் பார்த்துவிட்டு, என்னையும் பார்த்து, ""ஆமாம்... இதிலே என்ன தப்பு இருக்கிறது?''’என்று பொதுவாகக் கேட்டார்.

""நீங்கள்தான் சொல்ல வேண்டும்''’என்றேன். என் மீது புகார் சொன்னவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவருக்கு சாடையாகக் கேட்கும் கேள்வியாக இப்படிக் கேட்டார் எம்.ஜி.ஆர். நான் புரிந்து கொண்டேன். பிறகு வழக்கம்போல் தொடர்ந்து சந்தித்து வந்தேன்.

mgr

அண்ணன் எம்.ஜி.ஆர்., தமிழராகப் பிறக்கவில்லைதான். ஆனால் அவர் அளவுக்குத் தமிழர்கள்மீது, குறிப்பாக ஈழத்தமிழர்கள்மீது அக்கறை கொண்டிருந்த ஒரு தமிழனையும் என்னால் தமிழ்நாட்டில் இன்றுவரை காண இயலவில்லை. நான் தொடர்ந்து தமிழீழ பிரச்சனை குறித்து ஊர் ஊராக. கல்லூரி கல்லூரியாகப் போய் பேசி எழுச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். அவை ஆட்சியிலே அமைச்சர் அந்தஸ்துள்ள ஒரு பொறுப்பில் இருந்துகொண்டு நான் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தது முதலமைச்சரான அவருக்குப் பல நேரங்களில் பலவிதங்களில், இடையூறாக, ஏன்...? சோதனையாகக் கூட இருந்தது.

எப்படியோ 1983-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31-ஆம் நாளோடு என் பதவிக்காலம் முடிந்து போனது. அவர் பதவியை நீட்டிக்க வில்லை; நீட்டிக்க இயலவில்லை. நான் பதவியில் இல்லாமல் போனது அவரைக் கொஞ்சம் சுதந்திரமாக மூச்சு விட்டுக்கொள்ள வைத்தது. 1984 ஏப்ரல் மாதம் வரை அவரை பார்க்கச் சென்றால் ஒருக்கால் பதவி கேட்கச் செல்வதாக நினைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

பழையபடி முழு நேரமும் "நமக்குத் தொழில் கவிதை'’என்று திரைப்பட பாட்டெழுதும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். எனக்கும் அது நிம்மதியாக இருந்தது. அப்போது என்னிடம் ஒரத்தநாடு சந்திரசேகர் என்பவர் உதவியாளராக இருந்தார். என் காரில் சிறிது பழுது ஏற்பட்டிருந்தது. அந்த காரை கோடம் பாக்கம் மேம்பாலத்திற்கு கீழே உள்ள ஒரு மெக்கானிக்கிடம் விட்டிருந்தேன். ஒரு நாள் இரவு அந்தக்காரை எடுத்துவர என் உதவியாளர் சென்றார். காரை எடுத்து வந்தவர், வரும் வழி யில் "முரசொலி' அலுவலகத்திற்கு முன் காரை நிறுத்திவிட்டு, அவருடைய நண்பரான "குங்குமம்' பத்திரிகையில் பணியாற்றிக்கொண் டிருந்த பாவைச்சந்திரனை பார்க்க உள்ளே போய்விட்டார். என் கார் "முரசொலி' அலுவலகத்தின்முன் நிற்பதை யாரோ பார்த்திருக்கிறார்கள். அண்ணன் எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிருக்கிறது. அவருக்குத் தாங்கமுடியாத அதிர்ச்சி! அன்றைய இரவு 11:45 மணி. அந்நேரத்தில் போன்மணி ஒலிக்க... நானோ காற்றோட்டத்திற்காக மொட்டை மாடியில் கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்ததால், என் மகன் புகழேந்தி தொலைபேசியை எடுக்க... என் மகன் என்பதை புரிந்துகொண்ட புரட்சித்தலைவர் ""டேய் நான் மாமா பேசுறேன்... அப்பாவை பேசச் சொல்''’எனச் சொல்லியிருக்கிறார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள அண்ணன் எம்.ஜி.ஆர். மறுத்ததைச்..

(சொல்கிறேன்)

படம் உதவி: ஞானம்

_______________

மம்மூட்டிக்கு பிடித்த கவிஞர்!

dd

அண்ணன் கோவை செழியன் தயாரிப்பில், கே.பாலசந்தர் இயக்கத்தில், மம்முட்டி நடித்த படம் "அழகன்'.’இந்தப் படத்தில் இசையமைப்பாளர் மரகதமணியின் சுகமான மெட்டுக்களுக்கு எல்லாப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பை பாலசந்தர் எனக்குக் கொடுத்தார்.

"துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி' என்கிற பாடலை எழுதியிருந்தேன். "மழையும் நீயே/ வெயிலும் நீயே'’என்கிற பாடலையும் எழுதினேன். "நெஞ்சமடி நெஞ்சம்'’என்கிற பாடலில் “"மறப்பதற் கென்றே மனதினில் தோன்றும்/ நினைவே காதலடி/ சலனம் சபலம் மயக்கம் குழப்பம்/ இணைந் தால் காதலடி/ எழுத்தே இல்லா கவிதை இது/ படித்தால் எங்கே புரிகிறது...'’என சரணத்தில் எழுதியிருந்தேன்.

இப்போதும் ரசிகர்களின் விருப்பப் பாடலாக இருக்கும்.... "சங்கீத ஸ்வரங்கள்/ஏழே கணக்கா/ இன்னும் இருக்கா/ என்னவோ மயக்கம்/ என் வீட்டில் இரவு/ அங்கே இரவா/ இல்லை பகலா/ எனக்கும் மயக்கம்'’என்கிற பாடலையும் எழுதி யிருந்தேன். "தத்தித்தோம் வித்தைகள் கற்றிட/ தத்தைகள் சொன்னது தத்தித்தோம்/ தித்தித்தோம் தத்தைகள் சொன்னது/ முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்'…என்கிற பாடலையும் எழுதியிருந்தேன்.

ஒருசமயம்... கோவை வந்திருந்த மம்முட்டியிடம் தமிழில் உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்? என நிருபர்கள் கேட்டபோது... "புலவர் புலமைப்பித்தன்'’எனச் சொன்னார் மம்முட்டி.

"காதலில் சுகம் கிடைக்கும். ஆனால் அந்த சுகத்தையே இப்போது மறந்து விட்டு... தமிழுக்கு சேவை செய்வோம்...' எனச் சொல்லி, பொது நலத்துடன் வாழச்சொல்லி இதில் ஒரு பாடலை எழுதினேன். கே.பாலசந்தர், மம்முட்டி உட்பட எல்லோருக்குமே பிடித்த பாட்டு இது....

பல்லவி:

"சாதிமல்லிப் பூச்சரமே/ சங்கத்தமிழ் பாச்சரமே/ ஆசையின்னா ஆசையடி/ அவ்வளவு ஆசையடி/ என்னென்ன முன்னே வந்து/ நீ கொஞ்சம் கேட்டுக்கோ/ காதலில் உண்டாகும் சுகம்/ இப்போது மறப்போம்/ கன்னித்தமிழ் தொண்டாற்று/ அதை முன்னேற்று பின்பு/ கட்டிலில் தாலாட்டு...'

சரணம்-1:

"எனது வீடு எனது வாழ்வு/ என்று வாழ்வது வாழ்க்கையா/ இருக்கும் நாலு சுவருக்குள்ளே/ வாழ நீ ஒரு கைதியா/ தேசம் வேறல்ல தாயும் வேறல்ல/ ஒன்றுதான்/ தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும்/ ஒன்றுதான்/ கடுகு போல் உன் மனம்/ இருக்கக்கூடாது/ கடலைப் போல் விரிந்ததாய்/ இருக்கட்டும் / உன்னை போல் எல்லோருமென எண்ணோணும்/ அதில் இன்பத்தைத் தேடோணும்'

சரணம்-2:

"உலகமெல்லாம் உண்ணும்போது/ நாமும் சாப்பிட எண்ணுவோம்/ உலகமெல்லாம் சிரிக்கும்போது/ நாமும் புன்னகை சிந்துவோம்/ யாதும் ஊரென யாரு சொன்னது/ சொல்லடி/ பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது/ கண்மணி/ படிக்கத்தான் பாடலா/ நெனச்சுப் பாத்தோமா/ படிச்சத நெனச்சு நாம் நடக்கதான்/ கேட்டுக்கோ ராசாத்தி/ தமிழ் நாடாச்சு/ இந்த நாட்டுக்கு நாமாச்சு...'

"கோழி கூவும் நேரம் ஆச்சு

தள்ளிப் போ மாமா

கூத்து பாத்த சேதியெல்லாம்

சொல்லிப் போ மாமா'’’

என்கிற பாடலில்... தமிழக மீனவர்கள் சந்தித்த பெருந்துயரை...

"காதலி சொன்னது வேதம் என்று

புயல்வரும் வேளையில் அவன் போனான்

இந்திய எல்லையைத் தாண்டும்போது

பாவிகள் சுட்டதில் பலியானான்'……’’

-என எழுதினேன்.

(பாட்டுக் கச்சேரி தொடரும்)