மருந்தாக மாறிய பாட்டு!
"நாயகன்' திரைப்படத் திற்கு நான் பாட்டெழுத வேண்டும் என்பது இளைய ராஜாவின் விருப்பமாகவும், டைரக்டர் மணிரத்னத்தின் விருப்பமாகவும் இருந்தது. பாடல் எழுதுவதற்கான சிட்டிங், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் அலுவலகத்தில் நடந்தது.
முக்தா சீனிவாசன் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டவர் என்றாலும் தீவிர திராவிடச் சிந்தனைகொண்ட என்மீது மிகுந்த அன்பு காட்டினார். தயாரிப்பாளர், பல வெற்றிப்படங்களைத் தந்த டைரக்டர் என்கிறபோதும், அதையெல்லாம் தள்ளிவைத்து விட்டு, அலுவலக வாசலுக்கு வந்து என்னை வரவேற்று அழைத்துச் சென்றார்.
மணிரத்னம் என்னிடம் ஸீன் பை ஸீனாக முழு திரைக் கதையையும் சொன்னார். "நாயகன்' படம் மிக முக்கிய மான படமாக அமையும் என்றும், மணிரத்னம் பேசப்படும் இயக்குநராக மிளிர்வார் என்றும் அவர் கதையைச் சொன்ன விதத்திலேயே என்னால் உணர முடிந்தது.
(நாயகன்’ படத்தை தியேட்டரில் பார்த்தபோது எனக்கு மிக வியப்பாக இருந்தது. என்னிடம் எப்படி ஒவ்வொரு காட்சியையும் சொன்னாரோ... அதை அப்படியே வார்த்தை தவறாமல் திரையில் வடிவ மாக்கியிருந்தார்
சிலர் கதையை பிரமாதமாகச் சொல்லுவார்கள். ஆனால் காட்சிப்படுத்துவதில் சொதப்புவார்கள். சிலர் கதை சொல்ல திணறுவார்கள். ஆனால் காட்சிப்படுத்துதலில் அசத்திவிடுவார்கள். சிலர் மட்டுமே சொன்னபடி எடுப்பவர்கள். அதில் முக்கியமானவர் மணிரத்னம்)
"நாயகன்' படத்தின் கதை காட்சி வாயிலாக மணிரத்னமும், இசை வாயிலாக இளையராஜாவும் சொல்ல... அதில் ஒரு பாடல் தவிர எல்லாப் பாடல்களையும் நான் எழுதினேன். (நிலா அது வானத்து மேலே பாடலை இளையராஜா எழுதினார்.)
"ஆனந்த விகடன்' பத்திரிகையிலிருந்து என்னைப் பேட்டி காணவந்த ஒரு இளம்பெண், வந்ததுமே என் கால்களைத்தொட்டு வணங்கினார். நான் அதை தவிர்க்க முயற்சித்தபோது.... ""என் அப்பாவுக்கு ரத்தக்கொதிப்பு நோய் தீவிரமாக இருந்தது. "தென்பாண்டி சீமையிலே' பாடலைக் கேட்டதும் பிரஷர் குறைந்து, நார்மலாகிவிடும். இதை நாங்கள் பலமுறை பரிசோதித்து பார்த்திருக்கிறோம். மருந்தாக அமைந்தது அந்தப் பாட்டுத்தான்'' என்று சொன்னார்.
படத்தின் பிரதான பாடலாக... தீம் மியூஸிக்காக அமைந்தது அந்த தாலாட்டு. அது வெறும் தாலாட்டுதானா? மனக்காயங்களை மருந்து போட்டு ஆற்றும் பாட்டு. அந்தச் சிறு பாடல் இதோ...
தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
பாதிக்கப்பட்ட ஏழைமக்கள் தங்களுக்கான பாதுகாவலனை அடையாளம் கண்டுகொண்டு... ஆனந்தக்கூத்தாடி மகிழும் சூழலில் அமைந்த சூழலுக்கு, இளையராஜாவின் திருவிழா இசைக்கு நான் எழுதிய பாடல்...
பல்லவி:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் / திருநாளாம் / எங்களுக்கும் காலம் வந்ததெனப் பாடும் / பெருநாளாம் / ஹேய் இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம் / எங்கள் தெருவெங்கும் தேரோடும் / தேரோடும் திருநாளாகும் / நாள்தோறும் இங்கு ஊர்கோலம்
சரணம்-1:
நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது / நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது / மாடங்கள் கலைகூடங்கள் / யார் செய்தார் அதை நாம் செய்தோம் / நாடாளும் ஒரு ராஜாங்கம் / யார் தந்தார் அதை நாம் தந்தோம் / தேசம் என்னும் சோலையில் / வேர்கள் நாங்களே / தியாகம் என்னும் ஜோதியில் / தீபம் நாங்களே / தாம்தனத்தோம் தீம்தனத்தோம் / ராகம் பாடுவோம்
சரணம்-2:
பால் குடங்கள் தேன்குடங்கள் / நூறு வந்தது / கை வணங்கும் தெய்வம் ஒன்று / நேரில் வந்தது / பூவாரம் இனி சூட்டுங்கள் / கற்பூரம் இனி ஏற்றுங்கள் / ஊரெல்லாம் களி ஆட்டங்கள் / என்னென்ன இனி காட்டுங்கள் / வீடுதோறும் மங்களம் / இன்று வந்தது / காணும் போது நெஞ்சினில் / இன்பம் வந்தது / தாம்தனத்தோம் / தீம்தனத்தோம் / ராகம் பாடுவோம்
எல்லா சிறப்பம்சங்களும், அதற்கான கலைஞர்களும் இணைந்த படம் "நாயகன்' என்றுதான் சொல்லவேண்டும். அண்ணன் சிவாஜிக்குப் பிறகு, நடிப்பில் சிறந்த நடிகராக கமல்தான் என்பது இந்தப் படம் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. இளம் வயது தோற்றமாகட்டும், முதுமை தோற்றமாகட்டும் இரண்டிலுமே உணர்ந்து நடித்திருப்பார் கமல். அதிலும் முதுமையான தோற்றத்தில் ஒரு காலை நீட்டி, ஒரு காலை ஊன்றி உட்கார்ந்திருப்பதெல்லாம் கதாபாத்திரமாக கமல் மாறிவிட்டதையே காட்டும். க்ளைமாக்ஸ்... கமலின் நடிப்பு உச்சம் தொட்டிருக்கும்.
பொதுவாக நான் எழுதும் காதல் பாடல்களில் காதற்சுவை தூக்கலாக இருக்கும். இருபொருள் விளங்க... மறைபொருளாக காமத்தை... கேட்பவர் ரசிக்கும்படியாக கையாளுவேன். காரணம்... கவிஞர்கள் என்றாலே எளிதில் காதல் வயப்படுவது இயல்பு. அறம், பொருள் பாடிய வள்ளுவனின் ஆற்றல் காமத்துப் பாலில் மிக அதிகமாக வெளிப்பட்டிருக்கும்.
"நாயகன்' படத்திலும் ஒரு காதல் பாடலுக்கான மெட்டைச் சொன்ன இளைய ராஜா... ""அண்ணே... இந்த மெட்டு ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலின் பேஸ்''’ என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னபோதே... இந்தப் பாடலில் உடலின் அழகை வர்ணிக்கக்கூடாது’ என முடிவெடுத்துவிட்டுத்தான் எழுதினேன். அதனால்தான் இந்தப் பாடலில் உருவக் கவர்ச்சி சொல்லவில்லை. இதோ... பாடல்...
பல்லவி:
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
சரணம்-1:
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்...
சரணம்-2:
பூவை சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்
கடற்கரைக் காற்றே...
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம்
தொடரட்டுமே...
பாலியல் தொழிலாளி கள் பாடுவதாக அமைந்த பாடலில்கூட ‘வந்தது எல்லாம் போவதுதானே, சந்திரன்கூட தேய்வதுதானே’ என நிலையாமை குறித்து தத்துவார்த்தமாக எழுதினேன். இந்த வரிகளைக் குறிப்பிட்டு, ரசித்த கமல்... ""எல்லாப் பாடல்களுமே சிறப்பாக வந்திருக்கிறது ஐயா'' என என்னைப் பாராட்டினார்.
பல்லவி:
நான் சிரித்தால் தீபாவளி ஹேய்...
நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளிப் பருகும் கம்பரசம் நான்
சரணம்-1:
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை / இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை / வந்தது எல்லாம் போவது தானே / சந்திரன் கூட தேய்வது தானே / காயம் என்றால் தேகம் தானே / உண்மை இங்கே கண்டேன் நானே / காலம் நேரம் போகும் வா...
சரணம்-2:
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது / அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது / யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் / யார் இசைத்தாலும் இன்னிசை பாடும் / மீட்டும் கையில் நானோர் வீணை / வானில் வைரம் மின்னும் வேளை / காலம் நேரம் போகும் வா
அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சாராய சாம்ராஜ்யத்தை பாட்டில் எழுதியதைச்...
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்