இதயம் திறந்தால் வம்புகள் தீரும்!
அடிஅடிதோறும் ஐசீர் ஆயின்
முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையா
கடையொரு சீரும் விளாங்காய் ஆவீர்
நேர்பதினாறே நிறைபதினேழு
என்று ஓதினர்
கலித்துறை ஓரடிக்கெழுத்தே
-இது கலித்துறை இலக்கணத்திற்கான விதிமுறை என ‘யாப்பெருங்கலக் காரிகை’ நூல் சொல்கிறது.
கலித்துறை என்பது ஒருவகை யாப்பிலக்கணம். அதில் கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்பது பொருள்.
செய்யுளில் ஒரு அடி நேரசையில் தொடங்கினால், அந்த அடியில் புள்ளிவைத்த ஒற்று எழுத்துக்களை விட்டுவிட்டு, உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை எண்ணிப்பார்த்தால் 16 எழுத்துக்கள் இருக்கவேண்டும். அச்செய்யுளில் ஒரு அடி நிரையசையில் தொடங்கினால் ஒற்று எழுத்துக்களை நீக்கிவிட்டு எண்ணினால் 17 எழுத்துக்கள் இருக்கும். இதன்படி பாடப்படும் நான்கு அடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும். ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும். பொதுவாக "ஏ' என்னும் எழுத்தில் பாடல் முடிவது வழக்கம்.
உதாரணத்திற்கு...
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் சுகமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே’’
-என்ற இந்த பட்டினத்தாரின் பாடலைச் சொல்லலாம்.
ஒருமுறை இளையராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது...’""நான் கட்டளைக் கலித்துறை யாப்பில் ஒரு செய்யுள் சொல்றேன். ஏதாவது ஒரு வார்த்தை எடுத்துக்குடுங்க'' என்றேன். ராஜாவும் ஒரு வார்த்தை சொன்னார். அதைவைத்து ஒரு செய்யுளை நான் பாடப்பாட.... ராஜா அதை எழுதினார்.
""எழுத்த எண்ணிப்பாருங்க, சரியா இருக்கும்'' என்றேன்.
அவரும் எண்ணிப்பார்த்துவிட்டு ""சரியா இருக்குண்ணே'' என வியந்தார்.
முத்துராமன், ஸ்ரீவித்யா உள் ளிட்டவர்கள் நடிப்பில், ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில், வி.குமார் இசையில், ஆர்.எம் .வீரப்பன் திரைக்கதையில் வந்த படம் ‘நல்ல பெண்மணி’.
இதில் பாடல்கள் எழுதினேன். அதில் நான் மிகவும் லயிப்போடு எழுதிய தம்பதிகளின் உள்ள உணர்வாக அமைந்த பாடல் ஒன்று.
பல்லவி:
ஆண்: இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண்: மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண்: மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண்: என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்;
சரணம்-1:
ஆண்: நீயே என் செல்வரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டினம்
பெண்: தாங்காது கண்ணா என்
தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள் உன்
துணை தேடும் மீனினம்
ஆண்: குறுநகை முத்தினம்
கொடி இடை இது நூலினம்;
பெண்: கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தனம்
ஆண்: தென்பாங்கு பாடும் உன்
செவ்வாயோ தேனினம்
தேன் உண்ண வந்தேன்
பொன் வண்டோடு ஓரினம்
பெண்:விழி நிறம் அஞ்சனம்
சிவந்தது ஒரு நூதனம்.
ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் மகனும், ‘ஆனந்தவிகடன்’ ஆசிரியராக இருந்தவருமான எஸ்.பால சுப்பிரமணியன், எஸ்.எஸ்.பாலன் இயக்கிய படம் "எல்லோரும் நல்லவரே' முத்துராமன், மஞ்சுளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வி.குமார் இசையில் இந்தப் படத்தில் ஒரு அருமையான பாடலை நான் எழுதினேன். சொத்துப் பிரச்சினையோ... எதுவோ...’ கோர்ட்ல கேஸ் போடுவேன்’ என சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் இதயத்தைத் திறந்து பேசிக்கொண் டால் வம்பு வழக்குகள் உடனே தீர்ந்து போகும். இதை இந்தப் பாடல் வலியுறுத்து கிறது. எக்காலத்திற்கும் பொருத்தமான பாடல் இது. இதோ...
பல்லவி:
பகை கொண்ட உள்ளம் / துயரத்தின் இல்லம் / தீராத கோபம் யாருக்கு லாபம்
சரணம் 1:
வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக / கூரையை எரிப்பாரோ / வேதனை தன்னை விலை தந்து யாரும் / வாங்கிட நினைப்பாரோ / இதயத்தை திறந்து நியாயத்தை பேசு / வழக்குகள் முடிவாகும் / இருக்கின்ற பகையை வளர்த்திடத்தானே / வாதங்கள் துணையாகும்
சரணம் 2:
வற்றிய குளத்தை பறவைகள் தேடி / வருவது கிடையாது / வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது / உறவுகள் கிடையாது / பாலை வனத்தில் விதைப்பதனாலே / பயிர் ஒன்றும் விளையாது / பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் / யாருக்கும் உதவாது
பாடகர் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படம் ‘சாமந்திப்பூ’. சிவக்குமார், ஷோபா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இதுதான் ஷோபாவின் கடைசிப்படம் என்று நினைக்கிறேன். என்ன ஒரு அருமையான நடிகை ஷோபா. அதிலும் இந்தப் படத்தில் மிகப்பிரமாதமாக நடித்திருப்பார். கதைப்படி சிவக்குமார் பாடும் பாடலாக நான் எழுதிய பாடல் ஒன்று எனக்கே மிகவும் பிடித்த பாடலாக அமைந்தது. அந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் மிக அருமையாக பாடியிருப்பார். இதோ... அந்தப் பாடல்...
பல்லவி:
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா? / நீ அந்த வானம் நானிந்த பூமி / ஒன்றென்று யார் சொல்லுவார் / என்னை நானே... ஏ... ஏ / கேட்கின்ற கேள்வி இது - நானே / கேட்கின்ற கேள்வி இது
சரணம்-1
சாமந்திப்பூவோ எட்டாத தூரம் / ஊமத்தம்பூவோ என் வீட்டின் ஓரம் / இதில் வாசம் இல்லை / என்நெஞ்சில் பாசம் இல்லை / அது பக்கம் இல்லை / நான் சூட யோகம் இல்லை / இது மேடை இன்றி ஆடும் நாடகம் / வானத்து மீனை வலைபோடச் சொன்னால் / நானெங்கு போவதம்மா?
சரணம்-2
வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும் / நாம் வாழும் நாட்டில் ஏனிந்த காதல் / இது சேரிக்காற்று / ஊருக்கு ஆகாதம்மா / இது ஏரித்தண்ணீர் / முத்துக்கள் இங்கேதம்மா / கடல் மீனும் வானில் நீந்துமா / நீ கொண்ட காதல் நேரல்ல கானல் / தாகத்தை தீர்ப்பதுண்டோ?
திரைத்துறையில் பாடலாசியராக மட்டும் இருந்த என்னை வசனகர்த்தாவாகவும் ஆக்கிய படம் ‘ராஜராஜேஸ்வரி’. முத்துராமன், ஸ்ரீகாந்த், சுஜாதா உள்ளிட்டோர் நடித்த படம். அதன்பின் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி "சொர்க்கத்தின் திறப்புவிழா' படத்தை எடுத்தேன். நான் என் வாழ்க்கையில் மறக்க நினைக்கிற அனுபவம்... இந்தப் படத்தைத் தயாரித்ததுதான்.
சிலுக்குவைப் பாட்டில் எழுதியதைச்....
(சொல்கிறேன்)
படம் உதவி- ஞானம்