முனிவரின் காதல்!

"திருப்பம்' படத்தில் அண்ணன் சிவாஜிக்கும், பிரபுவுக்கும் பாட்டெழுதும் வாய்ப்பு அமைந்தது. இதில்... அழகான காதல் கலவியை கொண்டாடும் ஆசையை யும், புத்தாண்டு மகிழ்வையும் கலந்து வெளிப்படுத்துவதாக ஒரு பாடல் சூழல். அதற்காக நான் எழுதிய அந்தப் பாடல்.... பிரபு- அம்பிகா இடையேயான டூயட் பாடல்...

பல்லவி:

தங்க மகள் துள்ளி வந்தாள் / முத்து நகை அள்ளித் தந்தாள் / வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது / எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது / புத்தாண்டு வாழ்த்துகள் / எல்லோரும் பாடுங்கள்

Advertisment

சரணம்-1:

மெய்வண்ணம் கைவண்ணம் தேடும் -உடல் / மேலுக் கும் கீழுக்கும் ஆடும் / என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும் - சுகம் / என்னென்று பெண் ணின்று பாடும் / சித்தரித்த பெண்ணழகு / செண்டு கட்டும் முன்னழகு / சிக்கவைக்கும் கண்ணழகும் / பொல்லாதது..

சரணம்-2:

Advertisment

கார்கூந்தல் மாணிக்கப்பந்தல்- இது / கண்ணல்ல எண்ணத்தின் வாசல் / உன் தேகம் என் காதல் நாவல் - பக்கம் / ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல் / அச்சடித்த புத்தகத்தை / அட்டைப்பட சித்திரத்தை / இச்சைப்படி தொட்டுப்படி / இன்றாவது....

"திருப்பம்'’படத்தில் சிவாஜி- சுஜாதாவுக்காக எழுதிய பாடல்....

என்னை மறந்து பாடுவேன் / உனை நினைந்து வாழுவேன் / உனது நிழல் தேடுவேன் / எதிலும் உனைக் காணுவேன்’’-என்கிற பல்லவி கொண்டது.

ண்ணன் சிவாஜிக்கு என்னை மிகவும் பிடிக்கும். நடிகர்- புலவர் என்கிற சினிமா தொழில்முறை உறவு கடந்து... அண்ணன் -தம்பி உறவு அது. ஓய்வில் இருக் கும் போது... என்னை ""வீட்டுக்கு வாங்க தம்பியாபிள்ள'' என அழைப்பார். நானும் சென்று அவருடன் உரையாடிக்கொண்டிருப்பேன். நான் போயிருக்கும் நேரங்களில் யாராவது பிரபலங்கள் வந்தால்... என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பார். ஒருமுறை அரசியல்பிரமுகரான மரகதம் சந்திரசேகர் வந்திருந்தபோது... அவரிடம்... “""இது தம்பியாபிள்ள... சினிமாவுல பாட்டெழுதுற வரு... புலமைப்பித்தன் பேரு...'' என அறிமுகப் படுத்தினார்.

""புலவர் பிரபலமானவராச்சே... அவரோடா பாட்டுக்கள் சிலது கேட்டிருக்கேன்'' என அந்தம்மா சொன்னார்கள்.

அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஓட்டை, நீதி தண்டிக்கப்படுவது போன்ற சந்தர்ப்பவாதச் சூழலுக்காக "எழுதாத சட்டங்கள்' படத்தில் சிவாஜிக்காக எழுதிய பாடல் இதோ...

பல்லவி:

எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன / இறைவன் கோர்ட்டிலே / மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் / தருமம் கூண்டிலே / சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான் / வாதம் செய்யுவான் / நியாயம் சொல்லுவான்

சரணம்:-1

செய்யாத குற்றம் என்றாலும் சட்டம் தண்டிக்க அஞ்சாதது / பொய்யான காட்சி கண்கண்ட சாட்சி / ஆராய்ந்து பார்க்காதது கண்ணீரா தீயானது / தாய்ப்பாலா நோயானது / சொல் சொல் சொல் / சாத்தானின் வேதம் இது / சதிகாரர் வாதம் இது ஏன் ஏன் ஏன் / அநியாயம் சபையேறும் ஒரு நாளில் / வெளியேறும் அட போ போ

சரணம்-2:

பாசங்கள் எல்லாம் பாவங்களா சட்டத்தின் சாபங்களா / நீதிக்கு என்றும் கண் இல்லையா / நியாயங்கள் இங்கில்லையா / தந்தை பிள்ளை போரிலே / தாயின் கண்கள் நீரிலே / உள்ளம் ஒன்றே உள்ளது / யாருக்கு என்றே சொல்வது / தாயாகி வந்து நோயாகி நின்று / கண்ணீரில் சேயாகிறாள்

கலைஞானம் தயாரித்த "ராஜரிஷி' படத்திலும் பாடல் புனைந் தேன். புராணப் படமான இதில் பிரபு- நளினி இடையேயான ஒரு காதல் பாடல் ஒன்றை எழுதினேன். இலக்கியத்தரம் தூக்கலாக அமைந்த அந்தப் பாடலில்... மானுக்குள் பெண் தொலைந்ததாக அவனும், அவனுக்குள் அவள் தொலைந்ததாக அவளும் தொலைந்ததாக ஆனந்தப்படுவதாக எழுதினேன். காற்றுக்கே மூச்சு வாங்கும் படியாக இறுக அணைத்ததாக கற்பனையை படரவிட்டேன். அந்தப் பாடலை வாசித்துப் பாருங்கள்...

uu

பல்லவி:

ஆண்: மான் கண்டேன் மான் கண்டேன்

மானேதான் நான் கண்டேன்

நான் பெண்ணைக் காணேன்

பெண்: நான் கண்டேன் நான் கண்டேன்

நான் உன்னைத்தான் கண்டேன்

நான் என்னைக் காணேன்

ஆண்: புள்ளி மானா மானிட மானே

பெண் : வள்ளி மானாய் வந்தவள் நானே

சரணம்-1:

ஆண்: ஆடை கட்டும் ரோஜாவே

கண்ணில் அம்பு வீசாதே

கூந்தல் என்ன நாக சர்ப்பமோ ஓ…

பெண் : என்னை ஆளும் ராஜாவே

உன்னில் என்னை மூடாதே

அங்கம் உந்தன் தங்க

வாகனம் ம்…

ஆண் : கூந்தலில் நீ பாய்

விரி

பெண் : கூடலில் நீ

ஆதரி

ஆண் :காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம்

காமத்துப் பால் உண்ண ஏங்கும்

பெண் :கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க

காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்

ஆண் : ஆ……ஆ……ஆ…

பெண் : ஆ…..ஆ…..ஆ…

சரணம்-2:

ஆண் : தேனில் ஊறும் தீவுக்குள்

நாகலிங்க பூவுக்குள்

மோக வண்டு பாட வந்தது

பெண் : தான தந்த சந்தத்தில்

காதல் தந்த சொந்தத்தில்

போகம் என்னும் ராகம் வந்தது

ஆண் :பூமியில் ஓர் வானவில்

பெண் :ஆடிடும் உன் தோள்களில்

ஆண் : வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை

பெண் என்று நான் இன்று பார்த்தேன்

பெண் :கந்தர்வ லோகத்தை நாம் காணும்

நாள் எந்த நாள் என்று பார்த்தேன்

-இப்படியாக எழுதினேன் அந்தப் பாடலை.

"ராஜரிஷி'’ படத்தில் முனிவரின் (விசுவா மித்திரர்) சிவாஜியின் தவத்தைக் கலைக்க (மேனகை) லட்சுமி பாடி மயக்குவதான காதல் பாடல் ஒன்றையும் எழுதினேன்.

மா + துறவு = மாதுறவு

மாது + உறவு = மாதுறவு... என்கிற இருபொருள் விளங்க எழுதினேன்.

பல்லவி:

மாதவம் ஏன் மாதவனே

மாதுறவை நீ அறிந்தாய்

மாதுறவை ஏன் மறந்தாய்

தவமும் தனமும் சுகமும் என்வசம்...

சரணம்-1:

செவ்விதழாம் இது தேன்கனி கோவை

தேவா உன் கானமுதம்

சேயிலை நூலிடை மின்னல் தோரணம்

காமனின் கோயிலில் நானே கோபுரம்

தேனூறும் ஆகாயகங்கை

சலசல சலவென வருகிறதே வழிகிறதே

நதியினில் நீராடு

சரணம்-2:

தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி

நான் அங்கே தங்கநிலா

ஞானியின் ஐம்புலன் என்னில்

சங்கமம்

யாகமும் யோகமும் என்ன நாடகம்

பிரம்மாவின் கைவண்ணம் நானே

இளமையில் ஒருமையில்

தனிமையிலே தவிக்கிறதே

ஒருமுறை பாராயோ

சரணம்-3

அந்தி மாகலையில் இன்ப

மேகலைகள்

அசையும் அசைவிலே இசையிலே

இடை

ஒடிய ஒடிய நடைகள் பயிலும் இனி

இதுதானே

விழியிலே மரகதம் இதழில்

சோமபானம்

நித்தம் பரிமாற வரவா தலைவா

இளைய தேகம் இரவு நேரம்

விரக தாபம் எரியுதே

முகிலிலான குழலும் உந்தன் உறவு

தேடி அலையுதே

தவமது கலைவது தெரிகிறது

அருள் கொடு மாதேவா

அருகினில் வா தேவா

80-களில் அண்ணன் சிவாஜி நிறைய படங்களில் நடித்தார். அதில் பெரும் பாலான படங்களில் நான் பாடல்களை எழுதியிருக்கிறேன். ‘வாழ்க்கை, ‘பந்தம், சாதனை, மருமகள், குடும்பம் ஒரு கோவில், விஸ்வரூபம்’என அந்தப் பட்டியல் நீளமானது. உதாரணத்திற்கு சில சிவாஜி படப் பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொண் டேன்.

புலமைப்பித்தன் பாடல் களில் இலக்கியத்தரம் உசத்தியாக இருக்கும்...’ என திரையுலகில் பொதுவாகச் சொல்வார்கள். “எல்லாச் சரணங்களுமே சிறப்பாக இருக்கிறது... எதை விடுவது? எதை தவிர்ப்பது? எனக்கு குழப்பமே வருகிறது...’’ என கே.பாலசந்தர் அடிக்கடி என்னிடம் சொல்வார்.

இலக்கியத் தரத்துடன் நான் எழுதிய... இன்னும் பல பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னால்... நாட்டுப் புற வாழ்வியல் இலக்கியத்தை பிரதிபலிக்கும் பல பாடல்களை மிகவும் மனத்திருப்தியோடு எழுதியுள்ளேன். அந்தப் பாடல்களை... அந்த கிராமத்து இலக்கிய கீதங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

தமிழில் ’பிறிது மொழிதல் அணி’ என்கிற ஒரு இலக்கணவிதி இருக்கிறது. அந்த இலக்கணப்படி... சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல் சொல்ல வேண்டும். இப்படியொரு சூழலுக்கு பாட்டெழுதும் சந்தர்ப் பம் வந்தது. வெள்ளந்தியான மனிதனின் மனமொழியில்... பிறிது மொழிதல் இலக்கணப்படி நான் எழுதிய பாட்டு... நாற்பதாண்டு களைக் கடந்தபின்பும்... இப்போது நீங்கள் கேட்டாலும் உங்களின் மனங்களில் இனம்புரியா ஒரு சோகத்தை உண்டாக்கும். அந்த வெள்ளந்தி மனிதனுக்காக உங்கள் இதயம் "இச்'சுக்கொட்டாமல் இருக்காது. ஆமாம்... அவன் தொலைத்த... உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சகிளியையும், இன்னும்... பட்டுவண்ண ரோசா வையும் பற்றிச்...

(சொல்கிறேன்)

படம் உதவி: ஞானம்