திரிகளின் விமர்சனத்தைத் தகர்த்த இதயக்கனி! அண்ணன் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கிய பிறகு, “எங்கிருந்தோ வந்தவர், வெளிநாட்டுக்காரர், மலையாளி...’’ என எம்.ஜி.ஆரை எதிர்கட்சியினர் மேடைதோறும் விமர்சித்து வந்தனர். ‘தமிழக மக்கள்பற்றி அதிகம் சிந்திக்கிறவரை... குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழ் மண்ணில் வளர்ந்தவரை... தன் முதல்மொழி யாக தமிழ் கற்றவரை... இப்படி பேசுகிறார்களே...’என்கிற கோபம் எனக்கு. தமிழக மக்களிடமிருந்து "மலையாளி' என்று சொல்லி தலைவரை பிரித்துவிடமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்... தலைவருக்கும் தெரியும். இருப்பினும்... எதிர் தரப்பிற்கு பாட்டாலேயே பதில் சொல்ல நல்ல வாய்ப்பு அமைந்தது எனக்கு.

எங்கேயோ பிறந்த காவிரி நதி, தமிழகத்தின் பல பகுதிகளை... குறிப்பாக நெற்களஞ்சியமான தஞ்சையை செழிக்கவைப்பதை உதாரணமாகக் கொண்டேன். காவிரி உருவாகி, அதுநடைபோட்டு தஞ்சையை அடையும் பயணப்பாதையை ஆர்.எம்.வீரப்பனிடம் கேட்டேன். கர்நாடகத்தில் தொடங்கி தமிழகம் வருவதை விரிவாகச் சொன்னார். அப்போது... ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து வந்த "இதயக்கனி' படத்தில் அந்தப் பாடலை எழுதினேன்.

""தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்

கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி

Advertisment

தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி...

வண்ணம் பாடியொரு வளர்தென்றல் தாலாட்ட

கண்ணம்பாடி அணைகடந்து நலம்பாடி...

Advertisment

ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர

நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்...

வீடுதாண்டா கற்பு விளங்கும் தமிழ்மகள்போல்

ஆடுதாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து

அகண்ட காவிரியாய்ப் பின் தவழ்ந்து...

கரிகாலன் பேர் வாழும்

கல்லணையில் கொள்ளிடத்தில்

காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து

தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்

தனிக்கருணை காவிரிபோல்...''

-இப்படி காவிரியைப் பற்றிச் சொல்லி... அந்த நதியை மக்கள்திலகத்தின் குணநலத்தோடு ஒப்பிட்டு...

""செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி

கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்...

பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே

வள்ளலே எங்கள் வாழ்வே

இதயக்கனி... எங்கள் இதயக்கனி... இதயக்கனி...''

-என எழுதினேன்.

அண்ணாவின் இதயக்கனியான எம்.ஜி.ஆர், உழைக்கும் வர்க்கத்தின் இதயக்கனியாகவும் இருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்தேன். தனது எஸ்டேட் தொழிலாளர்கள் நடத்தும் விழாவில் கலந்துகொள்ள வரும் முதலாளியை, தொழிலாளர்கள் ஆடிப்பாடி வரவேற்பதுதான் இந்தப் பாடலுக்கான சூழல். ஒரு பல்லவி, இரண்டு.. மூன்று சரணங்கள் என்பது மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. நானோ... நதியைப் போல பிறருக்காக வாழும் தலைவரை சிறப்பிக்க... எதிராளிகளுக்கு பதிலடிதர... இந்த நீண்ட தொகையறாவை நானே தீர்மானித்து எழுதினேன். லிஸ்ட்டில் இல்லாத இந்த தொகையறா ஆர்.எம்.வீ.க்கு மிகவும் பிடித்துவிட்டதால்... பாடலில் சேர்க்கச் சொல்லிவிட்டார்.

இந்தப் பாடலில் பல்லவி இரண்டு விதமாக இருக்கும். முதலாளியை வாழ்த்தி தொழிலாளிகள் பாடுவது முதல் பல்லவி.

""நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த

நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க

நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே''

தொழிலாளர் வர்க்கத்தை வாழ்த்தி முதலாளி பாடுவது இன்னொரு பல்லவி.

""நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த

நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக''

-என எழுதினேன்.

mgr

""உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்

உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்

மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண

என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்

அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்''

-என அறிஞர் அண்ணாவை தலைவர் போற்றுவதை இந்தப் பாட்டிலும் வைத்தேன்.

""நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்

வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்

பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை

சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை''

-என இரண்டாவது சரணத்தையும்...

""காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்

காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது

பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே- உலகில்

பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே''

-என மூன்றாவது சரணத்தில் எழுதினேன்.

பஞ்ச பூதத்தில் நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய நான்கு பூதங்களும் பொதுவில் இருக்கிறது. ஐந்தாவது பூதமான நிலம் மனிதர் களின் சுயநலத்தில் சிக்கியுள்ளது. தோட்டம் உருவாக்கியவனுக்கு தோட்டம் சொந்தமாக இருக்கலாம். ஆனால் பூமி யாருக்கும் சொந்தம் கிடையாது. அதாவது... உருவாக்கிய எதுவும் தனியுடமையாக இருக்கலாம். ஆனால் உருவான எதுவும் தனியுடமை ஆகாது. பூமி தானாக உருவானது. அதை கூறுபோடும் உரிமை மனிதருக்கு இல்லை... என சிவப்புச் சிந்தாந்தம் கலந்து எழுதினேன்.

""நதியைப் போல நாமும் நடந்து பயன் தர

வேண்டும்

கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட

வேண்டும்

வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்

வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட

வேண்டும்''

என நான்காவது சரணத்தில் எழுதினேன்.

பாடலைக் கேட்ட மக்கள்திலகம்... தன்னுடன் இருந்தவர்களிடம்... ""அண்ணாவழியையும், பொதுவுடமையையும் இவ்வளவு அழுத்தமா, அதே சமயம்... ரொம்ப எளிமையா சொல்லீருக்கார். அவரோட அறிவை நான் ரொம்பவே பாராட்டு றேன்'' எனச் சொல்லி, என்னைப் பெருமைப் படுத்தினார்.

இந்தப் பாடல்... அ.தி.மு.க.வின் கொள்கைப் பாடலாகவே, பிரச்சாரப் பாடலாகவே, தொழிலாளர் தினவிழாவில் கொண்டாட்டப் பாடலாகவே அமைந்ததுவிட்டது. இன்றளவும்... 45 ஆண்டுகள் ஆகியும் தலைவனின் புகழ்பாடும் இந்த இதயக்கனி பாடலுக்கான மதிப்பு குறையாமலே இருக்கிறது.

"இதயக்கனி' படத்தில் இன்னொரு காதல் பாடலையும் எழுதினேன். மெல்லிசைக் கச்சேரி களில் இன்றும் தவறாமல் பாடப்படும் பாடலாக... அவ்வளவு அழகிய தாளகதியில் அமைந்தது அந்தப் பாடல்.

அந்தப் பாடலின் முதல்வரியை, ""சொர்க் கமே... உந்தன்பேர் பெண்மையோ'' என்றுதான் எழுதினேன். பிறகு... சொர்க்கத்தைவிட சுகமான வார்த்தையாக இருக்கட்டும் என்று... ""இன்பமே'' என மாற்றினேன். பொதுவாக நான் எழுதித் தரும் பாடலுக்கு மெட்டு அமைக்கப்படும். இது... எம்.எஸ்.வி. கொடுத்த மெட்டுக்கு எழுதிய பாட்டு. இளமைத் துள்ளலுக்கே உரிய வார்த்தைகளை இந்தப் பாட்டில் பிரயோகித்தேன். பாடல் காட்சியும் மிகச் சிறப்பாக... துள்ளலாகவே எடுக்கப்பட்டிருக்கும்.

""இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ / என் இதயக்கனி / நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி / என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி../

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ / உன் இதயக் கனி / நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி / உன் நெஞ்சில் ஆடும்பருவக் கொடி..’’ -என பல்லவியை எழுதினேன்.

""சர்க்கரைப் பந்தல் நான் / தேன்மழை சிந்த வா / சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே / தேனொடு பால் தரும் செவ்விளனீர் களை / ஓரிரு வாழைகள் தாங்கும் / தேவதை போல் எழில் மேவிட நீ வர / நாளும் என் மனம் ஏங்கும்''

-என முதல் சரணத்தையும்... உடற்சங்கமத்தை மேனிகள் போரிடுவதாக உருவகப்படுத்தி...

""பஞ்சணை வேண்டுமோ / நெஞ்சணை போதுமே / கைவிரல் ஓவியம் காண / காலையில் பூமுகம் நாண / பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் / போரிடும் மேனிகள் துள்ள / புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் / பேசும் மந்திரம் என்ன''

-என இரண்டாவது சரணத்தையும் எழுதினேன்.

""மல்லிகைத் தோட்டமோ / வெண்பனிக் கூட்டமோ / மாமலை மேல் விளையாடும் / மார்பினில் பூந்துகிலாடும் / மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் / மேகமும் வாழ்த்திசை பாடும் / மாளிகை வாசலில் ஆடிய தோரணம் / வான வீதியில் ஆடும்''

-என மூன்றாவது சரணத்தையும் எழுதினேன்.

தலைவரின் "சிரித்து வாழவேண்டும்' படத்தில் "ஒன்றே சொல்வான்' பாடலை வாழ் வியல் தத்துவம் பேசுவதாக எழுதிய நான், அதே படத்தில் இன்னொரு பாடலையும் அரசியல் விமர்சனங்களோடு எழுதினேன்.

""உலகமெனும் நாடக மேடையில்/ நானொரு நடிகன்/ உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் / உங்களில் ஒருவன் / ஆடுவது கடமையின் நினைவாக / பாடுவது இதயங்கள் தெளிவாக''

-என்பது அந்த பாட்டின் பல்லவி

""சிரிக்கச் சிரிக்க வந்து / நடிக்கும் கலையில் ஒரு / சிந்தனை வளர்கிறது / அதில் குறுக்கு வழியில் சென்று / பிழைப்பு நடத்துபவர் / நிம்மதி கெடுகின்றது/ தனக்குத் தனக்கு என்று/ நினைக்கும் மனது/ எந்த நாளிலும் உயராது / இனி எடுத்து மறைத்த பொருள்/ அனைத்தும் பொதுவில் வரும்/ நாள் வரும் தடையேது / சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே / நான் ஆடியும் பாடியும் நடிப்பது / என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம் / நலமாய் வாழ்ந்திட நினைப்பது /எண்ணியது விரைவினில் நிறைவேறும்/ இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்''

-என முதல் சரணம் எழுதினேன். நடுவில் தொகையறாபோல...

""மண்ணில் மறைவாக / என்ன விதை போட்டாலும் / போட்ட விதை என்னவென்று / மரம் வளர்ந்து காட்டாதோ / கண்ணை மறைத்தென்ன/ காரியத்தைச் செய்தாலும் / காலக் கணக்கனவன் / காட்டி வைக்க மாட்டானோ…...ஒ…...ஓ''

-என எழுதினேன். இரண்டாவது சரணத்தில்...

""நெருப்பை மடியில் கட்டி / உறங்க நினைத்துச் செல்லும் / நெஞ்சமும் இருக்கிறது / பெரும் கனத்தை மடியில் வைத்து / பயத்தை மனதில் வைத்து / கால்களும் நடக்கிறது / உலகம் விடிந்த பின்னும் / இருட்டில் இருந்து பிறர் / கண்களை மறைக்கிறது / அது மருந்தை நினைத்துக் கொண்டு / விஷத்தை அருந்தி விட்டு / வாழ்ந்திட நினைக்கிறது''’

-என எழுதினேன். அண்ணன் எம்.ஜி.ஆருக்கு இந்த பாடலும் மிகவும் பிடித்த பாடலாகும்.

மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்தபோது.. முக்கிய இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் எழுதிவைக்கப்பட்ட... எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் எழுதிய பாடலைச்...

(சொல்கிறேன்)

படம் உதவி- ஞானம்

___________

திருத்தம்!

நக்கீரன் ஆகஸ்ட் 01-04 தேதியிட்ட இதழில் "எஸ்.ஐ. தேர்வில் விதவிதமான கோல்மால்' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இயக்குநர் தமிழ்ச்செல்வன் படத்திற்குப் பதில் பேராசிரியர் இரா.மு.தமிழ்ச்செல்வன் படம் இடம்பெற்றுவிட்டது. இந்தத் தவறுக்காக பேராசிரியரிடமும் வாசகர் களிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகஸ்ட் 05-07 தேதியிட்ட இதழில் கைவிட்ட பேராசிரியர் என்ற செய்தியில் எஸ்.பி. அரவிந்த் என வெளியாகியிருக்கும் படம், அச்செய்தியில் தொடர்புடைய எஸ்.ஐ. சுதாகர் படம் ஆகும். பிழை பொறுத்தருள்க.

-(ஆ-ர்)