அன்றே அணு ஆயுத அரசியல் பேசிய எம்.ஜி.ஆர்.!
அண்ணன் எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த "உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு நான் முதலில் எழுதிய பாட்டு...
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
-என்கிற பாடல்தான்.
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையையும், சுயமரியாதை யையும் வளர்க்கும் விதமாக தலைவருக்கே உரிய பாணியில் அமைந்த பாட்டு இது. இந்த பாட்டின் தொடக்கத்தில்... ’சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்சப்பப்பா’ என்கிற வரி வரும். இது ஏதோ மலாய் பாஷையோ... எதுவோ என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அது எந்த பாஷையுமில்லை... ஒருவித ஓசைக்காக... சந்தநடைக்காக எழுதப்பட்டது.
""குழந்தைகளுக்கு விஷயம் சொல்லும் பாட்டு என்பதால்... தொடக்கத்தில் ஏதாவது எழுதித்தாங்க வாத்தியாரய்யா...''’எனக் கேட்டார் ’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி.
குழந்தைகளை குஷிப்படுத்த... "கிச்சுக்கிச்சு கிச்சுக்கிச்சு'’என்போமே.... அந்தமாதிரி பொருளில் லாமல் எழுதப்பட்ட வரிதான் அது.
தலைவரின் கொள் கைகளில் மிக உயர்ந்த கொள் கையாக அவர் கருதிய உழைப்பின் மேன்மை என்பதை இந்தப் பாடலின் பல்லவியில் வைத்தேன். முதல் சரணத்தில்....
அன்பில் வாழும் இதயம் தன்னை, தெய்வம் கண்டால் வணங்கும், ஆசை இல்லா மனிதர் தம்மை, துன்பம் எங்கே நெருங்கும், பொன்னில் இன்பம் புகழில் இன்பம், என்றே நெஞ்சம் மயங்கும், பூவை போலச் சிரிக்கும் உன்னை, கண்டால் உண்மை விளங்கும்’
-என தூய அன்பின் மகத்துவத் தையும், இரண்டாவது சரணத்தில்....
’முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே, முள்ளுக்கு என்னபெருமை, சிப்பிக் குள்ளே பிறந்ததாலே, முத்துக்கு என்ன சிறுமை, எங்கே நன்மை இருந்த போதும், ஏற்றுக் கொள்ளும் உலகம், அங்கே வந்து தழுவிக் கொண்டு, போற்றும் நல்ல இதயம்’ -என திறமை எங்கிருப்பினும் போற்றப்படும் என்பதையும், மூன்றாவது சரணத்தில்....
வானில் நீந்தும் நிலவில் நாளை- பள்ளிக்கூடம் நடக்கும்- காற்றில் ஏறி பயணம் செல்ல- பாதை அங்கே இருக்கும்- எங்கும் வாழும் மழலைச் செல்வம்- ஒன்றாய் சேர்ந்து படிக்கும்- இல்லை ஜாதி மதமும் இல்லை -என்றே பாடிச் சிரிக்கும்’
-என விஞ்ஞானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் எழுதினேன்.
சிங்கப்பூரிலுள்ள பிரபல டைகர் பாம் கார்டனில் "சிரித்துவாழவேண்டும்' பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது. தலைவரைப் பார்க்க சிங்கப்பூர் தமிழர்கள் திரளாக வந்திருக்கிறார்கள். பாடல் வரிகளைக் கேட்ட சிங்கைத் தமிழர்கள்... ""பாடலில் ரொம்ப நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கீங்க... பாடலைக் கேட்கும் போதே... தன்னம் பிக்கை வருது...'' என தலைவரிடம் சொல்ல...
""இது நான் சொன்ன கருத்துக்கள் இல்ல... உங்க பாராட் டெல்லாம் எங்க புலவர் புலமைப் பித்தனுக்குத்தான் உரியது'' எனச் சொல்லி, அவர்களிடத்தில் என்னைப் பாராட்டியிருக்கிறார். அதுதான் மக்கள்திலகத்தின் மனசு.
"உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் அணு ஆயுத அரசியலைப் பேசினார் எம்.ஜி.ஆர். அதில் தமிழக அரசியல் பேசப்படவில்லை. படம் வெளியாவதற்கு சில மாதங்கள் முன்... தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப் பட்டார். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். திண்டுக்கல் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட் பாளராக மாயத்தேவரை எம்.ஜி.ஆர். அறிவித்த அதே நேரத்தில், புலவனின் வாக்காக... டைட்டில் பாடலுக்காக அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கணிப் பதுபோல எழுதினேன். ஏவி.எம். ஒலிப் பதிவுக் கூடத்தில் எம்.எஸ்.வி. இசையில், சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பதிவான அந்த பாடலை எடுத்துக்கொண்டு, தி.நகர் அலுவலகத்தில் தலைவரைச் சந்தித்தேன். பாடலைக் கேட்டார்.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்’
...இப்படியாக வெற்றிமுரசு கொட்டியது பல்லவி.
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்’’
...என எதிர்கால அரசியலைப் பேசியது முதல் சரணம்.
’ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும்
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்’’
... என விஞ்ஞானத்தை கையாளவேண்டிய முறையை, படத்தின் கதைக்கேற்ற பொருளைப் பேசியது இரண்டாவது சரணம்.
பாடலைக் கேட்டுவிட்டு என்னை ஏற இறங்கப்பார்த்தார் தலைவர். கதைத் தொடர்பும், அரசியல் களத் தொடர்பும் இந்தப் பாட்டுவரிகளில் இருந்ததால்... பாராட்டும் விதமாக என் கைகளைப் பிடித்து அழுத்தினார் புன்னகை பொங்க.
முன்னிலும் அதிகமாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்மீது அன்பு செலுத்தவும், நான் தொடர்ந்து அவரது படங்களில் பாடல் எழுதவும், கட்சியில் எனக்கு முக்கியத்துவம் தரவும் அந்தப் பாடல் காரணமாக அமைந்தது.
மக்கள்திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர்திலகம் சிவாஜியும் தொழில்முறை போட்டியாளர்களாக மற்றவர்களால் பார்க்கப்பட்டாலும், அவர்களின் ரசிகர்களுக்குள் மனமாச்சரியங்கள் இருந்தாலும்... இரண்டு திலகங்களுமே நடிப்பில் தங்களுக்கென தனித்தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர்கள். சினிமாவில் நடிப்பதற்கு முன்பிருந்தே, இருவரும் சகோதரரர்களாக பழகியவர்கள். அவ்வப்போது அரசியல் ரீதியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்... “அண்ணே’’ என சிவாஜியும், “தம்பி’என எம்.ஜி.ஆரும் தங்களின் இறுதிக்காலம்வரை பழகினார்கள்.
அண்ணன் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை' படத்திற்காக ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. இசையில், நான் எழுதிய...
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை. உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை’
-என்கிற பாடலை டி.எம்.எஸ்.ஸும், பி.சுசீலாவும் பாட ஏவி.எம்.ஸ்டுடியோ ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவானது.
ஏவி.எம். ஸ்டுடியோவில் அண்ணன் சிவாஜி கணேசன் நடித்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படப்பிடிப்பின் இடை வேளையில்.... ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்த சிவாஜி, அந்தப் பாடலைக் கேட்டார்.
""டேய்... விசுவா... நீயும் மலையாளி, அண்ணனும் மலையாளி... அதனால அவருக்கு மட்டும் நல்ல பாட்டா போட்டிருக்கியே... என்னென்ன செய்தாலும் புதுமை... எங்கெங்கு தொட்டாலும் இளமை...''’என எம்.எஸ்.வி.யை வம்பிழுத்தார்.
எம்.எஸ்.வி. விடுவாரா?... ""உங்களுக்கு ஒரு சுக்கும் தெரியாதுங்கிறது சரியா இருக்கு... பாட்டு எழுதினது வாத்தியாரய்யா... மெட்டுப் போட்டது மட்டும்தான் நான்'' என்றார்.
""பாட்டு ரொம்ப நல்லாருக்குடா விசுவா...'' எனச் சொன்னார் சிவாஜி.
என்னை அண்ணன் சிவாஜியிடம் அறிமுகம் செய்துவைத்தார் எம்.எஸ்.வி. இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் நான் சிவாஜி படங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு அமைந்தது.
"நீ என்னென்ன சொன்னாலும் கவிதை' பாடலின் முதல் சரணத்தில்...
சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து, என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து, முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து, முத்துச்சரமென குறுநகை புரிந்து... ...’’
-என எழுதினேன். இரண்டாவது சரணத்தில்....
’பொன்னில் அழகிய மனதினை வரைந்து, பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து, பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து, கங்கை நதியென உறவினில் கலந்து... ‘
-என எழுதினேன். மூன்றாவது சரணத்தில்....
வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து, வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து, உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து, இந்த உலகினை ஒருகணம் மறந்து...
-என எழுதினேன்.
தலைவருக்கு பாடல் எழுதும்போது.... பாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப... அதற்குத் தொடர்புடைய தலைவரின் கொள்கை, நடைமுறை, குணாதிசயங்களை பாட்டில் சேர்ப்பது எனது வழக்கம்.
எம்.ஜி.ஆர். அழகன். உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக... உடற்பயிற்சிகளின் மூலம்.. இளமையாக வைத்திருப்பார். அதனால்தான்.... கதாநாயகி, அவரைப் பார்த்து பாடும் பல்லவி வரிகளில் "நீ என்னென்ன செய்தாலும் புதுமை... உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை' என எழுதினேன்.
“பூ மழை தூவி.... வசந்தங்கள் வாழ்த்தியதைச்....
(சொல்கிறேன்)
போட்டோ- ஞானம்