தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுடன் தேர்தலை சந்திக்கிறது மேற்கு வங்கம். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கோலோச்சிய கம்யூனிஸ்ட் கட்சி, 2011 தேர்தலில் வெறும் 40 இடங்களையே பிடித்தது. மெல்ல மெல்ல தன் சக்தியைத் திரட்டிக் கொண்டு, தவறுகளை சரிப்படுத்திக் கொண்டு 2016 தேர்தலில் எழுந்துவருமென அதன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில் 2016 தேர்தல் இன்னும் மோசமான சறுக்கலாக அமைந்து 26 இடங்களையே பிடித்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு துரதிர்ஷ்டம் தொடரவே செய்தது. மாநிலம்தோறும் தனது பிடியை விஸ்தரித்துக் கொண்டு வந்த பா.ஜ.க., மேற்குவங்கத்தில் நுழைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அதிருப்தியாளர்களைத் தன் பக்கம் திருப்புவதில் கணிசமான வெற்றிபெற்றது. முற்போக்கு கோஷங்களையும், பகுத்தறிவுப் பாதையையும் தாகூர் காலம்தொட்டே பேசிவந்த மக்களை, பங்களாதேஷிலிருந்து ஊடுருவும் முஸ்லிம்கள் தங்கள் தகுதிக்கு அதிகமான உரிமைகளைப் பெறுவதாக பிரிவினை பேசி இந்துத்துவத்தின் பக்கம் திருப்பியது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றிபெற, பா.ஜ.க. 18 தொகுதிகளை வென்றிருக்கிறது. சரிக்குச் சமமாக பா.ஜ.க நெருங்கிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ காங்கிரஸுக்கும் கீழே போய் ஒரு இடத்தைக்கூட பிடிக்கமுடியாத நிலையை எட்டியிருக்கிறது. தவிரவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை கூட்டணிக்கு வலிந்து அழைக்கும் நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் இடதுசாரிகள்.
இது ஒருபுறமிருக்க, பா.ஜ.க. அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு திட்டத்துக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும், மம்தாவை வென்றே தீரவேண்டிய உத்வேகத்துடன் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. முழுமூச்சான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பா.ஜ.க. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்தது முதலே, இரு கட்சிகளுக்கும் இறுக்கமான நிலையே காணப்படுகிறது. சமீபத்தில் மேற்குவங்கத்துக்கு வருகைதந்த பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் கார் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து திரிணமுல் கட்சியையும் அதன் தொண்டர்களையும் பா.ஜ.க. விமர்சிக்க, பேரணிக்கு கூட்டம் கூடாததை மறைக்க பா.ஜ.க. செய்த செட்டப் சம்பவம் என குறைகூறுகிறது திரிணமுல்.
ஜே.பி. நட்டாவின் கார்மீது கல்வீச்சு சம்பவத்தைப் பற்றி விசாரிக்க, உள்துறையிடமிருந்து மேற்குவங்க தலைமைச் செயலாளருக்கும் டி.ஜி.பி.க்கும் சம்மன் அனுப்பப்பட, வேறு காரணங்களைக் குறிப்பிட்டு அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்ப மறுத்து விட்டார் மம்தா.
அதேபோல ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு திரும்ப அழைக்க, அவர்களுக்கு என்.ஓ.சி. சான்றிதழ் அளிக்காமல், மறுத்துவிட்டார் மம்தா. மேலும், மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதாக குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத் தேர்தலில் வென்றது முதலே, திரிணமுல் காங்கிரஸ் வி.ஐ.பி.க்களுக்கு குறிவைத்த பா.ஜ.க., பல்வேறு வி.ஐ.பி. பிரமுகர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தையை நடத்திவந்தது. அதில் சாதகமான பதில் வந்த காரணத்தால் பல முறை மேற்குவங்கத்தைச் சேர்ந்த பா.ஜ. பிரமுகர்கள் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் தேர்தல் நெருக்கத்தில் பா.ஜ.க.வுக்கு தாவுவர் என திரும்பத் திரும்ப பேசிவந்தனர்.
சமீபத்தில் மிட்னாப்பூரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில், அமித்ஷா முன்பாக கைகளில் காவிக்கொடியை ஏந்தியபடி போக்குவரத்து துறை அமைச்சரும் திரிணமுல்லின் முக்கியப் புள்ளிகளில் ஒருவருமான சுவேந்து அதிகாரி, ஆறு திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் இரு கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களையும். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வையும் திரிணமுல் காங்கிரஸின் முக்கியப் பொறுப்பி லுள்ள கிட்டத்தட்ட 30 உறுப்பினர்களையும் சேர்த் துக்கொண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தது மம்தாவை அதிரவைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
"மேலும் தேர்தல் நெருங்கும்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் யாரும் இருக்கமாட்டார்கள் எனவும் மம்தா தனியே நிற்கும்படி நேரும்' என அமித்ஷா கூறியிருப்பது மம்தாவின் கோபத்தை அதிகரித்துள்ளது. பதிலடி யாக பா.ஜக எம்.பி.யின் மனைவி சுஜாதா மண்டல் கானை, திரிணமுல் காங்கிரசுக்கு இழுத்துள்ளார். மேற்குவங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வேலைகளை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், "தேர்தலில் இரட்டை இலக்கத்தைத் தாண்டி பா.ஜ.க. ஜெயித்தால் எனது ட்விட்டர் கணக்கை மூடிவிடுகிறேன்' என சவால்விட்டிருக்கிறார்.
அதே நேரத்தில், டிச. 22 அன்று மம்தா கூட்டிய கேபினட் கூட்டத்தில் 4 அமைச்சர்கள் பங்கேற்காமல் தவிர்த்தது கூடுதல் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. சவால்களையும் முஷ்டி உயர்த்தல்களையும் ஓரம் தள்ளிவிட்டுப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வாஜ்பாயி காலத்தில், மேற்கு வங்கத்தில் நுழைய முயன்று முடியாமல்போன கனவு, இன்று ஓரளவு சாத்தியமாகியிருக்கிறது.
ஆத்திரங்களை ஓரம் கட்டிவைத்துவிட்டு சமயோசிதத்துடன் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கம்யூனிஸ்ட்டுகளைப் போலவே உரிய விலையை மம்தா கொடுக்க வேண்டியது வரும்.
பா.ஜ.க. வளைத்தது எம்.எல்.ஏ.க்களை மட்டுமா…. மக்களையுமா என்பது தேர்தல் முடிவில்தான் வெளிப்படும்.
-க.சுப்பிரமணியன்