சில மாதங்களாக அமுங்கிக்கிடந்த தினகரன் -திவாகரன் பஞ்சாயத்து மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது. திவாகரன் மகன் ஜெய்ஆனந்தும், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும் இதற்கு பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அரசியல் அதிகாரத்திற்காக தமது குடும்பத்தில் நடந்துவரும் முட்டல்-மோதல்களால் மனஉளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார் சிறையில் இருக்கும் சசிகலா!

diwakaran-dinakaran

இதுகுறித்து சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான தினகரன் ஆதரவாளர்களிடம் நாம் விசாரித்தபோது, ""மருமகன் தினகரன் ஆரம்பித்திருக்கும் அ.ம.மு. கழகத்தில் தன்னுடைய ஆதிக்கம் இருக்க வேண்டுமென விரும்பினார் மாமா திவாகரன். குறிப்பாக, முக்கிய முடிவுகள் எடுக்கும் விசயத்திலும், ஜெயலலிதா விட்டுப்போன கோடிகளை கையாளுவதிலும் சசிகலாவுக்கு காட்ஃபாதராக நாம் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்கு வசதியாக தனது மகன் ஜெய்ஆனந்த்துக்கு வெயிட்டான பதவி கேட்டபோது, தர மறுத்த தினகரன், "கட்சியில் சின்னம்மா பொதுச்செயலாளர்; நான் துணைப்பொதுச் செயலாளர். இதனைத்தாண்டி "குடும்ப உறவுகள் யாருக்கும் பொறுப்புகள் கொடுக்க வேண்டாம்' என சின்னம்மா எனக்கு உத்தரவிட்டிருப்பதால், குடும்ப உறவுகளைத் தள்ளிவைக்கவே நினைக்கிறேன்'' என கறாராகத் தெரிவித்துவிட்டார். திவாகரனால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.

தினகரன் கட்சிக்குப் போட்டியாக தனது மகன் நடத்தி வரும் போஸ் மக்கள் இயக்கத்தை வலிமையாக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தினார் திவாகரன். ஆனால், திவாகரன் எதிர்பார்த்த அளவுக்கு போஸ் மக்கள் இயக்கம் டேக் ஆஃப் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான், சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் மரணமடைய, அவரது உடல் அடக்கத்தில் கலந்துகொள்வதற்காக பரோலில் வந்த சசிகலாவிடம், திவாகரன்-தினகரன் பஞ்சாயத்தை உறவினர்கள் வெளிப்படுத்த இருவரையும் அழைத்துப் பேசினார் சசிகலா.

Advertisment

அப்போது, தினகரனுக்கு எதிராக திவாகரனும், திவாகரனுக்கு எதிராக தினகரனும் பல்வேறு விசயங்களைப் போட்டுடைத்தனர். ஆனால், தினகரனுக்கு ஆதரவாகவும் திவாகரனுக்கு எதிராகவும் நடந்துகொண்டார் சசிகலா. இதில், திவாகரனுக்கு கடுமையான கோபம். இதனால் விரக்தியடைந்த திவாகரன், முறிந்த பழைய உறவை ரகசியமாக மீண்டும் புதுப்பித்துக்கொண்டதும் அதற்காக அவர் செய்து வரும் காரியங்களும்தான் தற்போதைய மோதல்களுக்குப் பின்னணி'' என்கின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட உறவு குறித்து கேட்டபோது, ""எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், ஆட்சி அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பி சில பல காரியங்களைக் கையாண்டார் தினகரன். இதனை எடப்பாடி அனுமதிக்கவில்லை. தினகரனோடு முரண்பட்டார் எடப்பாடி. மோதல்கள் வலுத்தன. தினகரனை சமாளிக்க திவாகரனை தனக்கு ஆதரவாக மாற்ற எடப்பாடி முயற்சிக்க, அதற்காக தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட மணல் காண்ட்ராக்ட்டை தனது வசம் இருக்கும்படி எடப்பாடியிடம் டீலிங் பேசினார் திவாகரன். நேரடியாக ஒப்படைப்பது தனக்கு பாதகத்தை உருவாக்கும் என யோசித்த எடப்பாடி, அதனை திவாகரனிடம் வெளிப்படுத்தியதோடு, மணல் மூலம் கிடைக்கும் கனமான வருமானத்தில் கணிசமான அளவு மாதாமாதம் வந்து சேரும் என உறுதி தர, இருவருக்குமிடையே எழுதப்படாத ஒப்பந்தம் உருவானது.

sasi

Advertisment

அதன்படி, சசிகலா குடும்பத்தில் தனக்கு எதிரானவற்றை திவாகரன் மூலம் உடைத்தெறிந்தார் எடப்பாடி. இதனால், எடப்பாடியை ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தார் தினகரன். அதன்பிறகு, பா.ஜ.க. கொடுத்த அழுத்தத்தில் ஓ.பி.எஸ்.சை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டதாலும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது உள்ளிட்ட விவகாரத்திலும் எடப்பாடியோடு முரண்பட்டார் திவாகரன். அதற்கேற்ப திவாகரனை அழைத்து சசிகலா சில உத்தரவுகளைப்போட, எடப்பாடியுடனான உறவைத் துண்டித்துக்கொண்டார் திவாகரன். அதற்குக் காரணம், ஆட்சியைக் கவிழ்த்து புதிய ஆட்சியை உருவாக்குவதில் தனது கையே ஓங்கியிருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இதற்கு நேர்மாறாகவே நடந்தது. சசிகலா-தினகரனுக்காக எடப்பாடிக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் ஓரணியாகத் திரண்டவர்கள், திவாகரனுக்காக யாரும் வெளியே வரவில்லை. இதனையடுத்துத்தான் திவாகரனை முற்றிலும் புறக்கணிக்கும் முடிவை எடுத்தார் தினகரன்.

இதனையடுத்து, தினகரன் துவக்கிய புதிய கட்சியிலும் திவாகரனுக்கான முக்கியத்துவம் இல்லாமல் பார்த்துக்கொண்டார் தினகரன். இதெல்லாம் சேர்ந்துதான், தினகரனை ஒழிக்க வேண்டுமாயின் எடப்பாடியிடம் மீண்டும் கைகோர்ப்பதுதான் சரியானது என முடிவு செய்து துண்டித்த உறவை சில மாதங்களுக்கு முன்பு புதுப்பித்துக்கொண்டார் திவாகரன். தினகரனின் வளர்ச்சி தங்களுக்குக் கேடு என உணர்ந்துள்ள எடப்பாடியும் சசிகலா எதிர்ப்பாளர்களும் திவாகரனை வைத்துத்தான் தினகரனை ஒழிக்க முடியும் என திட்டமிட்டு திவாகரனை அரவணைத்தனர். இந்த நட்பும் உறவும் மிக ரகசியமாக தொடர்ந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கிலும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கிலும் எடப்பாடி தரப்புக்கு எதிராக தீர்ப்பு வரும்பட்சத்தில் அது ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைத்து, 18 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பிடியில் கொண்டுவருவதற்கான அசைன்மெண்ட்டை திவாகரனிடம் தந்திருக்கிறார் எடப்பாடி. அதற்கேற்ப, தினகரனுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ.க்களை உடைக்கும் முயற்சியில் திவாகரன் இறங்க, அதுதான் மோதலாக வெடித்துள்ளது. ஆக, தினகரனை ஒழிக்க திவாகரனுக்கு கொம்பு சீவி வருகிறது எடப்பாடி அரசு'' என பின்னணிகளை விவரிக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.

diwakaran-dinakaran2இப்படி இருதரப்புக்குமான உறவுகளில் மோதல்கள் வெளிப்படையாக தெரியவேண்டும் என்பதற்காகவே எடப்பாடி தரப்பினரின் ஆலோசனைப்படி, "மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தநிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்'’ என கோபமாக முகநூலில் பதிவிட்டிருந்தார் ஜெய்ஆனந்த். அதனைத் தொடர்ந்தும் சில பதிவுகளை அவர் போட... அதற்குப் பதிலடி தரும் வகையில் நீண்ட பதிவுகளை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் பதிவு செய்ய, எடப்பாடி எதிர்பார்த்தது போலவே மோதல்கள் பரபரப்பானது.

இதுகுறித்து வெற்றிவேலிடம் நாம் பேசியபோது, ""சசிகலாவின் பின்னால் 21 எம்.எல்.ஏ.க்களும் தொண்டர்களும் நிற்கிறோம். எங்கள் உணர்வுகளையும் தியாகத்தையும் தொடர்ந்து கொச்சைப்படுத்துகின்றனர் திவாகரனும் அவரது மகனும். எடப்பாடி ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் சசிகலா-தினகரன் பக்கம் வரத்தயாரானபோது, அவர்களை தடுத்து எடப்பாடியிடமே இருக்க வைத்தது இவர்கள்தான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் என் பின்னால்தான் இருக்கிறார்கள்; என்னால் மட்டுமே சசிகலாவை மீட்க முடியும் என சசிகலா ஆதரவாளர்களிடமே பிரித்தாளும் சூழ்ச்சியை எடப்பாடியின் சொல்கேட்டு இன்றைக்கு திவாகரன் கையாளுவது சரியல்ல. எடப்பாடியின் சூழ்ச்சிக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார் திவாகரன்'' என்கிறார் மிக அழுத்தமாக.

திவாகரனின் கருத்தறிய அவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருந்தது. அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலை செய்யவேண்டிய தினகரன், சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்பட துவங்கியிருக்கிறார். காரணம், மீண்டும் ஒருமுறை சிறைக்கு செல்லாமலிருப்பதற்காகத்தான்! தன்னுடைய சுயநலத்துக்காக தொண்டர்களை ஏமாற்றி வருகிறார் தினகரன். இதனைத் தொண்டர்களுக்குத் தெரியப்படுத்துவதால் தினகரனின் கட்சி கரைந்துகொண்டிருக்கிறது. அந்த விரக்தியில்தான் திவாகரன் மீது பழி சுமத்துகின்றனர். இதில் எங்கள் தரப்பின் மீது குற்றம்சாட்ட எதுவுமில்லை''’என்கிறார்கள். செவ்வாயன்று மாலையில் வெற்றிவேலின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டார் ஜெய்ஆனந்த்.

இந்த நிலையில், 23-ந் தேதி இரவு அ.ம.மு.க.வின் அனைத்து மா.செ.க்களையும் தொடர்புகொண்டு, ""கட்சிக்கும் திவாகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடத்திலும் அவரது குடும்பத்திலும் எந்த உறவையும் யாரும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது என்கிற விமர்சனம் வராமல் இருக்க நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதனால் திவாகரனுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது'' என எச்சரித்திருக்கிறார் தினகரன்.

சசிகலா குடும்பத்து அரசியல் நிலவரத்தைப் பார்த்து மர்மச் சிரிப்பு சிரிக்கிறார் எடப்பாடி. நமட்டுச் சிரிப்பு சத்தம் கேட்கிறது டெல்லியிலிருந்து.

-இரா.இளையசெல்வன்

--------------------------------------------------------------------

பிரிக்கும் சூழ்ச்சி

கடந்த இதழிலேயே சொன்ன நக்கீரன்!

mannakudi=fight

தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே மோதலை உண்டாக்க சசி உறவினர் ராவணனை இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ப்ளான் பண்ணியிருப்பதை கடந்த நக்கீரன் இதழில் "மன்னார்குடிக்கு ஏன் வந்தார் ராஜ்நாத்சிங் பி.ஏ.? -மரண சர்ச்சை!' என்ற செய்தியில் வெளியிட்டிருந்தோம். தினகரனை ஒதுக்கி திவாகரனை அரசியலில் முன்னிறுத்துவதில் ஆட்சேபணையில்லை என ஆளுந்தரப்பு மன்னார்குடிக்கு தூதுவிட்டிருந்தது. இந்த நிலையில்தான்... மன்னார்குடிக்கு வந்திருந்த மத்திய அமைச்சரின் பி.ஏ. கலைச்செல்வன், திவாகரன் மீதான வழக்கிற்கான சிறப்பு வழக்கறிஞர் சம்பத்குமாரிடம் பேசியபின், ஓட்டல் ரூமிலேயே திடீர் நெஞ்சுவலியால் இறந்துபோனார். மத்திய-மாநில ஆட்சிகளின் பார்வை திவாகரன் பக்கம் சாய்ந்த நிலையில், தினகரன் ஆதரவாளர் வீசியுள்ள வெடிகுண்டு முக்கியமானது என்கிறார்கள் சசிகலா குடும்பத்தினரின் அரசியலை அறிந்தவர்கள்.

-பகத்