ஜக்கியின் ஈஷா யோக மையம் கடந்த சிவராத்திரியின்போது, பக்தர்களின் கையில், "கோயில் அடிமை நிறுத்து'’ என குழப்பமான வாசகம் அடங்கிய அட்டையைக் கொடுத்து, இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை விடுவித்து இந்துக்களிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தது. இப்போதும் இந்து கோயில்கள் இந்துமத அதிகாரிகள், இந்து அறங்காவலர்கள் நிர் வாகத்திலேதான் உள்ளது.
இதற்கு எதிராக ஜக்கி பேசும்போது, முள்ளை முள்ளால்தானே எடுக்கவேண்டும். அதற்கு எதிர்வினை யாக, "தெய்வத் தமிழ்ப் பேரவை', ஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை, தமிழக அரசின் உடைமையாக்கக் கோரி ஒரு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.
"ஜக்கியின் ஈஷா யோகா மையத்தை ஏன் அரசுடைமையாக்க வேண்டும்? அதற்கு தெய்வத் தமிழ்ப் பேரவை சொல்லும் காரணங்கள் என்ன?'
"தெய்வத் தமிழ்ப் பேரவை' ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நம்மிடம் பேசும்போது...
""கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையும், அவ்வளாகத்தில் உள்ள இதர வழிபாட்டு அமைப்புகளும் ஆன்மிகத்தில் தமிழர் மரபுக்குரிய சிவநெறி -திருமால்நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றன. ஜக்கி வாசுதேவ் சட்டவிரோதமாக நமது மலைகளை ஆக்கிரமித்துவிட்டார் என்ற புகார்களும் இருக்கின்றன.
ஈஷா மைய வளாகத்தில் நிறுவப்பட்டு வழிபாடு நடக்கும் தியான லிங்கம் கோயில் மற்றும் ஆதியோகி என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை ஆகியவை இந்து மற்றும் சைவ நெறிகளுக்கும், ஆகம விதி களுக்கும் புறம்பான வகையில் அமைந்திருக்கின்றன.
இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (Report of the Comptroller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017 (Government of TamilNadu, Report No. 7 of the year 2017) Page 32, Para 2.8.5.1, http://2.8.5.1/), ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இனி வரும் புதிய அரசுகளாவது நடவடிக்கை எடுத்து நிலமீட்பு செய்யவேண்டும்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படு வதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017-லேயே அறிவிப்பாணை அளித்திருக்கிறது. இதற்கும் நடவடிக்கை இல்லை. காரணம் நடுவண் அரசு.
தமிழ்நாடு அரசு, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை ஒட்டியுள்ள 109 ஏக்கர் பரப்பளவில் சட்ட விரோதக் கட்டுமானங்கள் இருப்பதாகவும், அவற்றை இடித்துவிட்டு, அந்த நிலங்களை உரிய மலைவாழ் பழங்குடி மக்களிடம் திரும்ப அளித்துவிட வேண்டும் எனவும் ஆணையிட்டது. அவற்றை ஜக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம் சற்றும் மதிக்கவில்லை என்பதை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது. இவை தவிர, ஈஷா அறக்கட்டளை நிறு வனர் ஜக்கி வாசுதேவ், “காவிரி கூக்குரல்’’(Cauvery Calling) என்ற பெயரால் நிதி திரட்டியதில் மோசடி நடந்திருப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது (Writ Petition No 43414/2019, tel:434142019 (GM-PIL)..
இவ்வாறு பலவாறான சமய நெறிமீறல்களும், சட்டமீறல்களும் நடத்திவரும் ஈஷா மையம் அறக் கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று, இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதி 3-ன் கீழ் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும்.
மேலும், ஜக்கி வாசுதேவும் வேறு சில ஆதிக்க சக்திகளும் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக்கொள்ளும் உள்நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்குமுன் கோயில் நிர்வாகங்களிடம் அனுமதி பெறாமல், அத்துமீறி (Trespass)) திருக்கோயில்களின் சன்னிதானங்களுக்கு முன்பாக ஆண்கள் -பெண்களை ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்துள் ளார் ஜக்கி வாசுதேவ். இது சட்டவிரோதச் செயல்.
ஜக்கி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்''’என்றார்.
மேலும் தமிழகக் கோயில் ஏன் இந்து சமய அறநிலையத் துறையின்கீழே தொடரவேண்டுமென் பதையும் அவர் விவரித்தார்.
""நூறாண்டுகளாக இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்து மதத்தின் தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் அதன் பன்மைத்தன்மை ஆகும். பல்வேறு தெய்வங்கள், பல்வேறு புனித நூல்கள் கொண்ட நம்முடைய மதத்தின் நிர்வாகத்தை ஏதோவொரு தனியார் குழுவிடம் ஒப்படைக்க முடியாது. திருக்கோயில்கள் பெரும்பாலும் பழங்காலத்தில் அரசர்களால் எழுப்பப்பட்டவை. எனவே, இக்கோயில்களை நிர்வாகம் செய்ய தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித்துறை மிக மிகத் தேவை.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அறநிலையத் துறையையே கலைத்துவிட வேண்டும் என்பது வர்ணாசிரம ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும். எனவே, தமிழ்நாட்டு இந்து மக்கள் அனைவரும் இச்சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஜக்கி வாசுதேவ் முன்மொழிந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி வழிமொழிந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையைக் கலைக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்''’என வலியுறுத்தினார்.
அத்துடன், "தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் அன்றாட பூசைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்' என்பதற்கும் அழுத்தம் தந்தார்.
""தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் விதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அன்றாடப் பூசைகளும், வழிபாடுகளும் தமிழ்வழியில் நடைபெறவேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தாலும், அதற்குரிய மந்திர நூல்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தாலும், பெரும்பாலான கோயில்களில் அன்றாட பூசைகள் தமிழ் வழியில் நடத்தப்படுவதில்லை. இந்த விதிமீறல் தொடரக் கூடாது எனத் தமிழ்நாடு அரசைத் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. சமஸ்கிருதத்தில் பூசை நடத்த வேண்டுமெனக் கோருவோரைத் தவிர, இயல்பாக நடக்கும் அனைத்துப் பூசை மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ்த் திருமுறைகளையும், மந்திரங்களையும் மட்டுமே பயன்படுத்துவதை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நடைமுறை வழக்கமாக்கிட உறுதி செய்ய வேண்டும் எனத் தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது’’
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், ஆன்மிகர்கள் -அடியார்கள் -தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்புடன் -தஞ்சையில் வரும் 08.05.2021 -சனிக்கிழமை நாளன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை -கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி, ஒருநாள் வேண்டுகோள் உண்ணாப் போராட்டம் நடைபெறும்''’என்றார்.
"தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்த நீங்கள் ஆன்மிகம் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் ஜக்கி வாசுதேவை எதிர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறதே?' எனக் கேள்வியெழுப்பியபோது...
""தமிழ்த் தேசியத்தில் இதுவும் ஒன்றுதான். தமிழர்களின் உரிமை கள், உணர்வுகள், உடமைகளுக்கு எதிராக யார் வந்தாலும் எதிர்த்துநின்று போராடி வெற்றி பெறுவோம். தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தவேண்டும் என்று போராடி, சட்டப் போராட்டம் நடத்தி, நீதிமன்ற தீர்ப்பு வாங்கி தமிழில் குடமுழுக்கு நடத்த வைத்தோம். சமீபத்தில் விராலிமலை சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கையும் தமிழில் நடத்த வைத்தோம். இது எங்கள் உரிமை. எங்களைத் தூற்றுவார் தூற்றட்டும், உரிமையை வென்றெடுப்போம்.
தமிழ்நாட்டில் அமையப் போகும் புதிய அரசு, ஜக்கி போன்றவர்களுக்கும், நடுவண் அரசுக்கும் அடிமைப்பட்டு அடங்கிவிடாமல் நிலமீட்பு செய்ய வேண்டும்''’’ என்றார்.
இக்கருத்துக்களை வலியுறுத்தி ஏப்ரல் 13, 2021 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகை யாளர் சங்கத்தில் செயற்குழுக் கூட்டமும், பின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சித்தர் மூங்கிலடியார், குச்சனூர் கிழார், சத்தியபாமா, வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், மோகனசுந்தரம் சுவாமிகள், இறைநெறி இமயவன், கலையரசி நடராசன், வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், ஆசீவக சுடரொளி, பொன்னுச் சாமி அடிகளார், கி.வெங்கட்ராமன், அரங்கநாதன், முனைவர் வே.சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பல ஆன்மிகவாதிகள், தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
ஈஷாவை அரசுடைமையாக்க தமிழக பக்தர்களின் குரல் வலிமை பெறுகிறது.
-இரா.பகத்சிங்
படம் : ஸ்டாலின்