""4 ஆண்டுகளாகியும் பணி உயர்வு இல்லை. 20 ஆண்டுகளானாலும் பதவி உயர்வு இல்லாமல் ஓய்வு பெறும் அவலத்தில் உள்ளோம்'' என்ற இடைநிலை ஆசிரியர்கள் தங்களை பட்டதாரி ஆசிரியர்களாக்க கோருவதை நக்கீரன் இணையதளத்தில் கடந்த நவம்பரில் வெளியிட்ட பின், பணி உயர்வுபெற வேண்டிய ஆசிரியர்களின் பட்டியலைக் கேட்டிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.
""இடைநிலை ஆசிரியர்களை ஏன் பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்'' என்று நாம் மேலும் விசாரித்தபோது, …""தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையில் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்த இடை நிலை ஆசிரியர்கள் ஏறக்குறைய 4,500 ரூபாய் அடிப்படை சம்பளம் என நிரந்தமாக பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.
அரசின் கொள்கை முடிவின்படி (அரசாணை 100/27-06-2003) 6 முதல் 8 வகுப்புகளுக்கு பி.எஸ்.சி., பி.எட். பட்டப் படிப்பு முடித்த இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2004 அ.தி.மு.க. ஆட்சியில் 4,000 ரூபாய் என்ற ஒப்பந்த ஊதியத்தில் நியமிக்கப் பட்டார்கள். ஆனால், கல்வித் தகுதியில் இரு ஆசிரியர்களுமே சம அளவில்தான் இருந்தார் கள். இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிறகு, தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்களைப் போலவே 2006 முதல் பட்டதாரி ஆசிரியர்களாக நிரந்தரம் செய்யப்பட்டார்கள். அதுபோலவே, 57,179 பணியிடங்களில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட்டார்கள். அதில், இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 40,000 பேர் அடங்குவர்.
தமிழக அரசின் கல்விக் கொள்கையின் படி 50% சதவீதம் பதவி உயர்வின் அடிப்படையில் நியமனம் செய்திருந்தால் 25,000 இடைநிலை ஆசிரியர்களில், அரசுப் பள்ளியில் 7000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளியில் 13,000 பேருமாக கிட்டத்தட்ட 20,000 இடைநிலை ஆசிரியர்கள் இளநிலை பட்டதாரி ஆசிரியர்களைப் போலவே பதவி உயர்வு பெற்றிருப்பார்கள். மீதமுள்ள, 5,000 இடைநிலை ஆசிரியர்களும் 2006-க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றிருப்பார்கள். அதனை நிராகரித்து எங்களது வாழ்க்கை யையே சூன்யமாக்கிவிட்டார்கள்'' என்கிறார் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் அ.சங்கர்.
அவர் நம்மிடம், ""பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடம் இல்லை' என்று சொல்லி, ஆண்டு தோறும் வழங்கி வந்த பதவி உயர்வு கலந்தாய்வும் கடந்த 4 ஆண்டுகாலமாக நடத்தவில்லை. பணியிடமே இல்லாதபோது பட்டதாரி ஆசிரியர்களுக்கான டி.இ.டி. தேர்வு நடத்துவது ஏன்? தேர்ச்சிபெற்று பணிக்காக காத்திருக்கிறவர்களுக்கு மட்டும் எப்படி பணி வழங்குவார்கள்?
தொடக்கக் கல்வித்துறையில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராகவும் பி.எட் படித்தால் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியராகவும் பிறகு ஓய்வு பெறும்போது வட்டார கல்வி வளர்ச்சி அலுவலராக (பி.இ.ஓ)வும் பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் இறுதிவரை 20 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக மட்டுமே இருந்து ஓய்வுபெறும் அவலநிலை தொடர்கிறது.
இதனைத் தவிர்த்து, அரசாணைகள்படி இளநிலை ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியராக உட்படுத்தியது போலவும், மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் களாக உட்படுத்தப்பட்டது போலவும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் வழங்கப்பட்டது போலவும், உயர்நீதிமன்ற ஆணை 2007-இன் படியும் மேற்கண்ட உதாரணங்களின் அடிப் படையிலும் 20,000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரி யர்களாக உட்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், 2006 முதல் பள்ளிக் கல்வித்துறைக்குப் பொறுப்பு வகித்த அமைச்சர்களுக்கும் நேரில் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
6, 7, 8 வகுப்புகள் கற்பிக்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு விதமான சம்பளமும் அதே பணியை செய்யக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருவிதமான சம்பளமும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுபோல, அரசு பணியாளர் சீர்திருத்த விதிகளின்படி அரசுப்பணிகளில் மூன்று பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பது விதி. அதுவும்கூட தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுகிறது'' என்கிறார் வேதனையோடு.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனை தொடர்புகொண்டு கேட்டபோது, ""இந்த கோரிக்கையை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்'' என்று முடித்துக்கொண்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதியரசர்கள் நல்லதோர் தீர்ப்பு வழங்குவார்கள் என்று 20,000 இடைநிலை ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
-மனோசௌந்தர்