15-வது மகாராஷ்டிர சட்ட சபையின் உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவிருக் கிறது. நவம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145 தொகுதிகள் வெல்லும் கட்சி பெரும்பான்மை பெறும்.

2019 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் சிவசேனாவும் கூட்டணியமைத்துப் போட்டியிட் டன. மறுபுறம் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியமைத்தன.

2014-லிலும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணியமைத் துப் போட்டியிட்டிருந்தன. அதிலேயே சில கசப்பு அனுபவங்கள் சிவசேனாவுக்கு ஏற்பட்டிருந்தபோதும், அக்கட்சி கூட்டணியைத் தொடர்ந்திருந்தது.

Advertisment

mm

2019 தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. மெஜாரிட்டிக்கும் கூடுதலாக இடங்களை வென்றபோதும் சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்குமான கசப்பால் சிவசேனா அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்தது.

இதையடுத்து சிவசேனாவின் மீது கடுப்பிலிருந்த பா.ஜ.க., தக்க சமயத்துக்குக் காத்திருக்க, 2022-ல் சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே, பொருத்தமற்ற கூட்டணி என விமர்சித்து சிவசேனாவின் எம்.எல்.ஏ.க்களில் 2 பங்கு உறுப்பினர்களுடன் கட்சியைவிட்டு வெளியேறினார். அவர் பா.ஜ.க.வைத் தஞ்சமடைய, அவரது சேவைக்குப் பரிசாக, மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைத்தபோது முதல்வர் பதவி ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது.

Advertisment

இந்தச் சூழலில்தான் தேர்தல் நடக்கவிருக்கிறது. பா.ஜ.க.- ஷிண்டே சிவசேனா- அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஒருபக்கமும், மறுபக்கத்தில் காங்கிரஸ்- உத்தவ்தாக்கரே சிவசேனா- சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் மறுபக்கமும் மல்லுக்கட்டுகின்றன. காங்கிரஸ் கூட்டணிமகாவிகாஸ் அகாடியென்னும் பெயரிலும், பா.ஜ.க. கூட்டணி மகாராஷ்டிரா மகாயுதி என்னும் பெயரிலும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுவருகின்றன.

2024 மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் வென்று, தன்னைத் தகுதியுடையவராக நிரூபித்திருக் கும் நிலையில், சட்டமன்றத் தேர்தல் எனும் அக்கி னிப் பரிட்சை ஷிண்டேவுக்குக் காத்திருக்கிறது. இது ஷிண்டேவுக்கு மட்டுமல் லாமல், உத்தவ் தாக்கரேவுக்கு மான அக்னி பரிட்சையும்தான். ஏனெனில், சிவசேனா என்ற பெயருக்கு இருவரும் சொந்தம் கொண்டாடும் நிலையில் மகாராஷ்டிர மக்கள் இருவரில் யாரை சிவசேனாவாகக் கருதுகின்றனர் என்பது இந்தத் தேர்தலில் வெளிப்படும்.

இன்னொரு பக்கம், மகா ராஷ்டிர முதல்வரா யிருந்த தேவேந்திர பட்நா விஸ், 2019-லும் தான் முதல்வராவோமென நம்பியிருந்தார். தேர்தல் முடிவுகளும் அந்த நம்பிக் கையை உறுதிசெய்தது. ஆனால் சிவசேனா கூட்டணி மாறி காங்கிரஸ் பக்கம் போனதில் அந்தக் கனவு கலைந்துபோனது. சிவசேனா விலிருந்து ஷிண்டே பிரிந்துவந்தபோது அந்தக் கனவு முளைவிட்டாலும், பா.ஜ.க. தலைமை, ஷிண்டேவை முதல்வராக்கி, பட்நாவிஸை துணை முதல்வராக மட்டுமே நியமித்தது. இந்த நிலையில் இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் பட்சத்தில் மீண்டும் முதல்வராகலாம் என்ற கனவில் இருக்கிறார்.

ss

2014-ல் 122 இடங்களை யும், 2019-ல் 105 இடங்களையும் வென்ற பா.ஜ.க. இந்த முறையும் 100-க்கு அதிகமான இடங்களை வெல்லுமா என்பது சந்தேகம் தான். பா.ஜ.க. 152 இடங் களிலும், அஜித் பவாரின் என்.சி.பி. 51 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 80 இடங்களிலும், மிச்ச முள்ள இடங்களில் உதிரிக் கட்சிகளும் போட்டியிடு கின்றன.

மகாராஷ்டிராவின் மராட்டியர் வாக்குகளைப் போலவே தலித் வாக்குகள் கணிசமானவை. 14 சதவிகிதமுள்ள அவர்கள் வாக்கு யாருக்கு கணிசமாகக் கிடைக்கும் என்பதும் முக்கியமானது. தலித் ஆதரவுத் தலைவர்கள் பா.ஜ.க.வைவிட காங்கிரஸ் பக்கமே நெருங்கிநிற்கின்றனர். தவிரவும், மராத்தா இட ஒதுக்கீடு நிறை வேற்றப்படாத கோபம், ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிராக மகாராஷ்டிராவின் 51 சதவிகித மக்கள் கோபத்திலிருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 8,000 பேர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். நவம்பர் 4-ஆம் தேதி வரை வேட்புமனுவை வாபஸ் வாங்க அவகாசம் இருக் கிறது. அதன்பிறகே களத்தில் போட்டியிடுபவர் களின் உண்மையான எண்ணிக்கை துலக்கமாகும்.

ஒரு புதிய ட்ரெண்ட் இந்தத் தேர்தலில் உருவாகியிருக்கிறது. வழக்கமாக பா.ஜ.க. அதிருப்தியாளர்கள் காங்கிரஸ் பக்கமும், காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் பா.ஜ.க. பக்கமும் தாவுவார்கள். மாறாக, இம்முறை கூட்டணி யிலுள்ள பா.ஜ.க.விலிருந்து 5 பேர் சீட்டுக் கிடைக்காத அதிருப்தியில்- ஷிண்டே சிவசேனா கட்சிக்குத் தாவியிருப்பது பா.ஜ.க.வை அதிர வைத்துள்ளது. இது இப்படியென்றால், சஞ்சய் காகா பாட்டீல், நிஷிகாந்த் போசலே பாட்டீல் இருவரும் பா.ஜ.க.விலிருந்து அக்கூட்டணி யிலுள்ள அஜித் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியிருக்கிறார்கள்.

அதேபோல சரத் பவாருக்கும்- அஜித் பவாருக்குமான மோதலில் மக்கள் யார் பக்கம் என்பது தெளிவாகுமா என அரசியல்நோக்கர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அஜித் பவார், தேசியவாத காங்கிரஸின் கோட்டையான பாரமதி தொகுதியில் போட்டியிட, அஜித் பவாருக்கு எதிராக சரத் பவார், அஜித் சகோதரரான ஸ்ரீனிவாஸ் பவாரின் மகன் யுகேந்திர பவாரை நிறுத்தி செக் வைத்திருக்கிறார். தனது சொந்த சகோதரரின் மகனுடன் போட்டியிடும் இக்கட்டை ஏற்படுத்தியிருக்கும் சரத் பவாரை, குடும்பத்தில் பிளவு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியிருக்கிறார் அஜித் பவார்.

உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, ஒர்- தொகுதியில் எளிதாக வென்றுவிடக்கூடாது என்பதற்காக இத்தொகுதியில் மிலிந்த் தியோராவை நிறுத்தி போட்டியைக் கடுமையானதாக்கியிருக்கிறார் ஷிண்டே. போதாதற்கு உத்தவ் தாக்கரே என் றாலே ஆகாத ராஜ்தாக்கரே தனது நவநிர் மாண் சேனா சார்பாக தேஷ்பாண்டேவையும் நிறுத்தியிருக்கிறார். அதேசமயம், அஜித் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் நவாப் மாலிக்கை மன்குர்ட் சிவாஜி நகரில் நிறுத்தியிருக் கிறது. தாவூத் இப்ராகிமுக்கு நெருக்கமானவர், தீவிரவாதி என நவாப் மாலிக்கை துணைமுதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் முன்பு விமர்சித்திருந்தார். இப்போது பா.ஜ.க. கூட்டணியில் நிறுத்தப்பட்டிருப்பதால் நவாப் மாலிக்கை ஆதரிக்கமுடியாதென பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இருந்தும் அஜித் பவார், மாலிக்கை மாற்றும் முடிவில் இல்லை.

இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார் கள், ஒரு கூட்டணியில் யாருக்கு, எத்தனை தொகுதி என்பதில் இன்னும் குழப்பமே நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 103 இடங்களிலும் உத்தவ் தாக்கரே சிவசேனா 96 இடங்களிலும், சரத்பவார் தேசியவாத காங் கிரஸ் 87 இடங்களிலும் போட்டியிடுகின்றன. சமாஜ்வாடி கட்சிக்கு 5 இடங்களும் இடது சாரிக் கூட்டணிக்கு 2 இடமும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அதேசமயம், காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியே, மகாராஷ்டிர காங்கிரஸின் வேட்பாளர் தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், பல பொருத்தமற்ற வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டதாகக் கூறியிருந்தது பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

சமீபத்தில் ராணுவத்துக்கு விமானங்கள் தயாரிக்கும் டாடா ஏர்பஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு குஜராத்தில் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டாடா ஏர்பஸ் மகாராஷ்டிராவில் அமைவதைத்தான் சமீபத்தில் மறைந்த அதன் தலைவர் ரத்தன் டாடா விரும்பியிருந்தார். ஃபாக்ஸ்கான் செமி கண்டக்டர் ஆலை யும் முதலில் மகா ராஷ்டிராவில்தான் அமையவிருந்தது. மோடியின் குஜ ராத்தை முன்னே றிய மாநில மாகக் காட்ட, நிறுவனத்துடன் பேரங்கள் பேசப்பட்டு அது குஜராத்துக்கு கொண்டுபோகப்பட்டது. கம்பெனி, வேலைவாய்ப்புகள் இரண்டும் பறிக்கப்பட்டு மகாராஷ்டிராவுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகப் பேசியிருக்கிறார். பவாரின் இந்தப் பேச்சு தேவேந்திர பட்னாஸை உறுத்த, "பவார், இந்த வயதில் இவ்வளவு பொய்கள் பேசக்கூடாது'' என விமர்சித் திருக்கிறார்.

"இந்தத் தேர்தல் மகாராஷ்டிராவை நேசிப்பவர்களுக்கும், அதற்கு துரோகம் இழைப்பவர்களுக்கும் இடையிலான தேர்தல்'' என்கிறார் ஆதித்ய தாக்கரே. பதிலுக்கு காங்கிரஸ் கூட்டணியை ஓட்டு ஜிகாத் கும்பல் என விமர்சித்துள்ளது பா.ஜ.க. கூட்டணி.

பா.ஜ.க. எம்.பி. நாராயண ரானேயின் இரு மகன்களுக்கும் பா.ஜ.க. கூட்டணியில் சீட் பெற்றுள்ளது, விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மகாராஷ்டிர டி.ஜி.பி.யை மாற்றாதது, பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பதையும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி விமர்சித்து வருகின்றது.

தவிர, முஸ்லிம்கள் பெரும்பான்மை யுள்ள பகுதிகளில் அசாதுதீன் உவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 14 வேட்பாளர்களை அறிவித்துள்ளது

இந்தத் தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியோடு, வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் பா.ஜ.க.வுக்கு எதிராகப் போட்டியிடுவதால் பா.ஜ.க. தன்னை நிலை நிறுத்த கடும்போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனை எதிர்கொள்ள தேர்தலுக்கு முன்பாக மகாராஷ்டிராவுக்கு 7,600 கோடியில் பிரதமர் மோடி நலத்திட்டத்தை அறிவித்தபின்புதான் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

வேட்புமனு தாக் கல் முடிந்த நிலையில் பிரச்சாரத்தில் சூடு ஏறிவருகிறது.