"அ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் யார்?' என வெளிப்படையாகவே மோதிக்கொள்ளும் நிலையில், தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரை மாவட்டத்தை அமைக்க வேண்டும் என்று மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார், தமிழக வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார்.

mdu

"இது தேர்தல் நேரத்து அரசியல்...'’எனச் சொல்லும் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ""மதுரை மாநகரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் வரவேற்பதில் எனக்கு தயக்கமே கிடையாது. ஆனால், முழுமையாக ஒன்பதரை ஆண்டுகள் ஆட்சியில் இருப்பவர்கள், மதுரைக்கு எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு, ஆட்சி முடியப்போகிற நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதை சந்தேகக் கண் கொண்டே பார்க்க வேண்டியதிருக்கிறது'' என்றார்.

தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரை உருவாவதில் உள்ள சாதக பாதகங்களை, ‘அரசிய லுக்கு அப்பால்’ பார்ப்போம்!

Advertisment

மிகப்பெரிய கிராமம்’ என்றே சொல்லப்படும் பழமை வாய்ந்த மதுரை, சென்னைக்கு அடுத்து, இரண்டாவது பெரிய நகரமாகத் திகழ்கிறது. காஸ்ட் ஆப் லிவிங்’என்று பார்த்தால், "வெரி வெரி ச்சீப்...'’என்று அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு, ஏழை, எளிய மக்கள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளது. அதே நேரத்தில், ஒரு மாற்றமும் இல்லாமல், காலம் காலமாக இப்படியே இருந்துவிடக் கூடாது என்ற ஆதங்கமும் வெளிப்படுகிறது.

மக்கள் உரிமை பாதுகாப்புமைய ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன்,“""இது காலத்தின் கட்டாயம் என்றாலும், பாரம்பரிய நகரம் கார்ப்பரேட் நகரமாக மாறும்போது சந்திக்கும் சில நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில்கொள்ள வேண்டும்'' என்றார்.

uu

Advertisment

நாம் தமிழர் வழக்கறிஞர் வெற்றிகுமரன், ""பரந்து விரிந்து கிடக்கும் தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதே நல்லது. தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்காக சென்னையில் குடியேறி, அங்கே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்கள். அதன் பலனை, இந்தக் கொரோனா காலத்தில் சென்னை மக்கள் அனுபவிக்கின்றனர். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான உரிமை, சமமான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. வடக்கே வளர்ச்சி; தெற்கே தொய்வு என்பதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.

பட்டாசு ஆலை அதிபரான ஏ.பி.செல்வராஜன், ""கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்ல வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 16 மணி நேரம் ஆகும். அதுவே, இரண்டாவது தலைநகராக மதுரை அமைந்துவிட்டால், மூன்று மணி நேர பயணமாகச் சுருங்கிவிடும். தென்மாவட்டங்களின் தேவைகள் அனைத்தையும் படிப்படியாகக் கொண்டுவந்துவிட முடியும். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி பெறும்'' என்றார்.

செவிலியரான லட்சுமி, ""எதற்கெடுத்தாலும் சென்னை செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, வீண் அலைச்சல், நேரம் மற்றும் பண விரயத்தை தடுக்க முடியும். நல்ல திட்டமென்றாலும், கூடவே விமர்சனமும் சேர்ந்து வரும். நேர்மையாகச் சொல்வதென்றால், மதுரையும் ஒருmdu தலைநகரமாவதால், பாதகத்தைக் காட்டிலும் சாதகங்களே அதிகம்'' என்றார்.

தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு பழைய செல்வாக்கு இல்லை. தற்போதைய நிலவரப்படி, வரும் தேர்தலில், தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்றே, சர்வே முடிவுகள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். விவகாரம் வேறு, அதிமுகவுக்கு பெரும் குடைச்சலாக இருக்கிறது. இதையெல்லாம் சமாளிப்பதற்காகவே, நாடகத்தனமாக, இரண்டாவது தலைநகரத் தீர்மானத்தை வெற்று அறிவிப்பாக, ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ளார்.’ எனச் சர்ச்சையாகிவரும் நிலையில், "இதிலும் அரசியலா?' என்று கேட்டோம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம்.

""அப்படியெல்லாம் எதுவுமில்லை. தென்மாவட்ட மக்கள் பட்டுவரும் அவஸ்தை, இங்கே பிறந்தவர்களுக்குத்தான் தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் 8 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவது போலத் தான், தலைமைச் செயலகத்தின் பணிகளும் பரவலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மதுரையிலும் தலைநகர நிர்வாகம் அமைய வேண்டுமென்றால், குறைந்தது பத்தாயிரம் ஏக்கர் நிலம் வேண்டும். மதுரை புறநகரில் அதற்கான நிலத்தை தேர்வு செய்ய முடியும். தென் மாவட்டத்தில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத் திலேயே, தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்'' என்றார்.

தி.மு.க. வட்டாரத்திலும், மொத்த தமிழகத்திற்கும் ஸ்டாலின் மட்டுமே முதல்வராக இருந்தால் சரிப்படாது. இரண்டு தலைநகரங்கள் என்றால், இரண்டு தலைமை உருவாக்கப்பட வேண்டும் எனக் குட்டையைக் குழப்புபவர்கள் இருக்கின்றனர் என்கிறார்கள்.

இரண்டாவது தலைநகரம் என்ற மக்களின் எதிர்பார்ப்பில், அரசியல் துளியும் கலந்துவிடக் கூடாது. ஏனென்றால், கண்ணகி நீதி கேட்டதும், சட்டையைத் துறந்து விட்டு, மகாத்மா வேட்டி, துண்டுக்கு மாறியதும், இதே மதுரை மண்ணில் தான்!

-ராம்கி & அண்ணல்