கே.ஆனந்த், சங்கரன்கோவில்
"எவரெஸ்டுக்கான பயணமும், முதல் காலடி வைப்பிலிருந்தே தொடர்கிறது' என்பதன் பொருள் என்ன?
இமயமலைக்குக் கிளம்பினாலும், டீக்கடைக்குப் போனாலும் அதற்கு முதல் காலடி வைப்பு ஒன்றுதான். ஊர் சுற்றுபவன் சில நூறு காலடிகளுடன் நின்றுவிடுவான். பயணம் செல்பவன் சில ஆயிரம் காலடிகள் எடுத்துவைப்பான். தன் குறிக்கோளில் விடாப்பிடியாக இருப்பவன் லட்சம் அடிகளையும் எடுத்துவைத்து எவரெஸ் டைச் சென்றடைவான். மாபெரும் வெற்றிகள் அனைத்துமே சலியாத ஊக்கத்துடன் நிகழ்த்தப்படுபவை. இங்கே எல்லோருமே லட்சம் காலடிகளை எடுத்துவைத்திருப்போம். ஒரே திசையிலும், ஒரே குறிக்கோளு டனும் செய்யாததால் நாம் சாதாரணர்களாக இருக்கிறோம். அப்படிச் செய்தவர்கள் சாதனையாளர்களாக ஜொலிக்கிறார்கள்... வித்தியாசம் அதுதான்!
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
2029-லும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கூறுகிறாரே அமித்ஷா....?
நீங்கள் ல பிராண்டின் ஊட்டச் சத்து பானம் பற்றி கேட்டால், அதன் நிர்வாக இயக்குநர் என்ன சொல்வார்? உலகத்திலிருக்கும் அத்தனை ஊட்டச்சத்து பானத்தைவிடவும் எங்கள் ஊட்டச்சத்து பானமே சிறந்தது. அதனால்தான் அது விற்பனையில் முதலில் இருக்கிறது. அடுத்த வருடமும் நாங்களே விற்பனையில் முதலிடத்தில் தொடர் வோம் என்பார். அமித்ஷா மட்டுமென்ன "எங்கள் கட்சி மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டது. அடுத்த வருடம் காங்கிரஸ் வருவதற்கு பிரமாதமான வாய்ப்பிருக்கிறது' என்றா சொல்வார்?!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்திருப்பது பற்றி?
கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக ஆட்சியில் தொடர்கிறார் ஷேக் ஹசீனா. கடந்த பத்தாண்டுகளில் வெற்றிகரமாக எதிர்க்கட்சி களை ஒடுக்கியிருக்கிறார். அதனால் தன்னை மீறி எதுவுமில்லை என்ற மமதை வளர்ந்திருக்கும். இட ஒதுக்கீடு திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்தபோதே சுதாரித்துக்கொண்டு ஹசீனா பின்வாங்கியிருக்கவேண்டும். அகந்தை அதற்கு இடம் கொடுத்திருக்காது. இப்போது பெரிய நாடுகளில் தஞ்சம் தேடி ஓடுகிறார். இன்னொரு தியரி, ஒவ்வொரு பெரிய நாடும் தன்னருகே யுள்ள குட்டி நாடுகளில் அரசியல் கிளர்ச்சியை உருவாக்க முடியுமா என சோதித்துப் பார்க்கும். அதில் வெற்றி கிடைத்தால் தன்னம்பிக்கையாக உணரும். வங்கதேசத்தின் அரசியல் சூழலை கணக்கில்கொண்டு சீனா, பாகிஸ்தான் சதியால் உருவான அரசியல் கிளர்ச்சி என்றும், இல்லையில்லை இந்தியாவின் கைவண்ணம் இதிலிருக்கிறது என்றும் குரல்கள் கேட்கின்றன.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
"2026 சட்டப்பேரவை தேர்தல் நமக்கான தேர்தல்' என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி?
ஒரு அரசியல் தலைவருக்கு கனவும் நம்பிக்கையும் வியூகமும் வேண்டும். எடப்பாடியாருக்கு கனவும் நம்பிக்கையும் இருப்பது தெரிகிறது. வியூகம் இருக்கிறதா என்பதுதான் தெளிவாகத் தெரியவில்லை.
வாசுதேவன், பெங்களூரு
அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால் பங்கை எட்ட இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் ஆகலாம் என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளதாமே?
இன்றைய கணக்குப்படி சராசரி அமெ ரிக்க தனிநபர் வருமானம் 71,60,000. இந்தியாவின் தனிநபர் வருமான சராசரி 2.73 லட்சம். கிட்டத்தட்ட 69 லட்ச வித்தியாசம். இதை ஈடுகட்ட 75 ஆண்டுகள் போதுமா? அதற்கு நத்தை வேகத்தில் போகும் இந்தியாவின் பொருளாதாரம், புலிப் பாய்ச்சல் எடுக்கவேண் டும். இந்தோனேசியா, ஈரான், பங்களாதேஷ் நாடுகள்கூட இந்தியாவைவிட அதிக சராசரி தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளன. ஆட்சியில் மேலே அமர்ந்திருப்பவர்கள் ஜென்ம பூமிகளைக் கண்டறிந்து, கோவில் இடிக்கவும், கோவில் கட்டவுமாக இருந்தால் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கித்தான் போகும்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"நீதிபதியை பாஸ் என்று அழைக்கக்கூடாது' என்று நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளதே?
இதென்ன புது புரளியா இருக்கு. அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை லைகா நிறுவனம் கட்டியதுடன் விஷாலுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அந்த ஒப்பந்தப்படி விஷால் நடந்துகொள்ளவில்லை என்பதே வழக்கு. இதில் நீதிபதி கேட்ட கேள்வியொன்றுக்கு, பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியைக் கேளுங்கள் என்னும் பொருளில் "பாஸ்' என்று கூறினார். "இது ஒன்றும் சினிமா கிடையாது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்' என நீதிபதி கண்டித்தார். மற்றபடி நீதிபதியை பாஸ் என்று அழைக்க வில்லை விஷால்.