மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

சமூகத்தில் பணம், அதிகாரம், பதவி -இது எதுவுமே இல்லாமல் மக்கள் மனதில் நின்றவர் யாரேனும் இருக்கிறார்களா?

பணம், அதிகாரம், பதவி இவற்றை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து மக்களின் மனங்களில் நிலைத்து நின்றவர்கள் உண்டு. இவை எதுவுமில்லாதவர்களை மக்கள் எப்படி மதித்தார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

கேரள பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கி அவசரச் சட்டம் போட்டிருப்பது குறித்து?

பல்கலைக்கழகங்களை வைத்து அரசியல் செய்வது ஆளுநர்களுக்கும் அவர்களை நியமித்தவர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. அதிலும், பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களாக இருப்பவர்கள் அரசியல் செய்வதற்காகவே பல்கலைக்கழகங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உச்சகட்டமாக, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என அறிவித்தார். அதனை எதிர்த்து, உயர்நீதிமன்றத் தில் இடைக்காலத் தடை பெற்றிருக்கிறார்கள் துணை வேந்தர்கள். மாநில அரசு பரிந்துரைக்கும் துணை வேந்தர்கள் அனைவரும் லஞ்ச ஊழல் அடிப்படையில் நியமிக்கப்படுவது போலவும், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் மூலம் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் எல்லாரும் சுத்த சுயப்பிரகாசம்கள் போலவும் பா.ஜ.க. சித்தரிக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்துவதில் கேளராவின் இடதுசாரி அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைதான் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்குவதற்கான அவசர சட்டம். தமிழ்நாடு ஏற்கனவே சட்டமன்றத்தில் இதே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மேற்கு வங்கமும் இதே வழியைப் பின்பற்றியுள்ளது. எனினும், மாநில அரசின் சட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டியவரே ஆளுநர்தான் என்பதால் இது ஓர் அரசியல் சட்டப் போராட்டமாக மாற வாய்ப்புள்ளது. மாறட்டும். அதன்பிறகாவது ஒரு முடிவு தெரியட்டும்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் செமி பைனலில் இங்கிலாந்து அணியிடம் இப்படி தோற்றுவிட்டதே இந்திய அணி?

mm

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரக்கூடியவைதான். அவற்றை விளையாட்டாக எடுத்துக்கொள்ள ரசிகர்களின் மனம் ஏற்பதில்லை. கிரிக்கெட் என்பது இங்கிலாந்து நாட்டு பிரபுக்களின் விளையாட்டு. மற்ற விளையாட்டுகள் பெரும்பாலும் அரைக்கால் சட்டை அணிந்து விளையாடப்படுபவை. கிரிக்கெட், கோல்ஃப் போன்ற பெரும் பணக்காரர்களின் விளையாட்டுகளில்தான் பேன்ட் எனும் முழுக்கால் சட்டை அணிந்திருப்பார்கள். குளிர் அதிகம் கொண்ட இங்கிலாந்து நாட்டு தட்பவெப்ப நிலையில், வெயில் காலம் வரும்போது சூரிய ஒளி நாள் முழுவதும் உடலில் படுவதற்கேற்ப 5 நாள் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமானது. இங்கிலாந்தும் அதன் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கின. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்தது. அதில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. அப்போது முதலே இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியா வுக்கும் கிரிக்கெட்டில் ஜென்மப் பகைதான். அதுபோல, இங்கிலாந்தின் ஆளுகையில் ஒன்றாக இருந்து, தனித்தனி நாடுகளாக விடுதலையடைந்த இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட்டிலும் பகை நாடுகளாக வளர்க்கப்பட்டுவிட்டன. டெஸ்ட் போட்டியில் தொடங்கிய இத்தகைய பகையுணர்வு, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து, இப்போது 20 ஓவர் போட்டிகள் வரை நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அந்த நாட்டு அணியால் அரை இறுதிக்கு வர முடியவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும்தான் இறுதிப் போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரை இறுதியில் இந்தியாவைத் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தேறியது இங்கிலாந்து. என்ன இருந்தாலும் நமக்கு பாகிஸ்தான்தான் ஜென்ம எதிரி என்று இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தையும், நமக்கு கிரிக்கெட்டில் ஜென்மப் பகை இங்கிலாந்துதான் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் பாகிஸ்தானையும் இறுதிப் போட்டியில் ஆதரித்தனர். ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்குள்தான் எத்தனை விளையாட்டுகள்!

சி.கார்த்திகேயன், சாத்தூர்

அ.தி.மு.க.வை பி.ஜே.பி. ஒன்றுசேர்க்க முயற்சி செய்து வருகிறதாமே?

nn

பிளவுபட்டுக் கிடப்பதும் பி.ஜே.பி.க்குத்தான் லாபம். சேர்ந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளப்போவதும் பி.ஜே.பி.தான். டெல்லியின் நூலுக்கேற்ப அ.தி.மு.க. அசைந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் பக்கத்துப் பக்கத்தில் சீட் போட்டதற்காக வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டம்-தர்ணா எல்லாம் நடத்தியது அ.தி.மு.க.! அதே இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் அருகருகே நின்றுதான் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்கள். தனித்தனியாக சந்திக்க அனுமதி கேட்டும் ஒன்றாக வரச் செய்ததற்காக எந்தக் கோபத்தையும் காட்டவில்லை.