சு.வெங்கடேஷ், கோட்டயம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் அறிக்கை பற்றி மாவலியின் பார்வை என்ன?
அறிக்கையில் சொல்லப்பட்டவை, சொல்லப்படாதவை, ஆராயவேண்டியவை, ஆணையத்தின் அதிகாரம் இவையெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. நாம் ஒரு எளிமையான செய்தியை கவனத்தில் கொண்டால் மட்டும் போதும். 2016, செப்டம்பர் 22 அன்று இரவு, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு மருத்துவமனை நிர்வாகம் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வெளியிட்ட அறிவிப்பு என்னவென்றால் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்பதுதான். அதே மருத்துவமனை நிர்வாகம் அதே நாளில் ஜெயலலிதா எந்த நிலையில் இருந்தார் என்பதை ஆணையத்திலும் தெரிவித்துள்ளது. அதில், நோயாளியை (ஜெ) அழைத்துவரும்போது மயக்கமாகவும், மூச்சுத்திணறலுடனும், ஆக்ஸிஜன் நெருக்கடியுடனும் இருந்தார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், ஹைப்பர் டென்ஷன், ஹைப்போ தைராய்டு ஆகியவை இருந்ததால் அவற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்ச்சலுக் கும் நீர்ச்சத்து குறைபாட்டுக்காகவும் மட்டுமே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வெளியான முதல் அறிவிப்பே உண்மைகளை மறைத்துவிட்டது.
மறுநாள் 23-9-2016 அன்றும் மருத்துவமனை நிர்வாகம் ஓர் அறிக்கை வெளியிடுகிறது. அதில், காய்ச்சல் (மட்டும்) நீடிப்பதாகவும், வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும், தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆணையத்தில் மருத்துவமனை அளித்த விவரத்தில், முந்தைய நாள் இருந்த நிலைமை களில் மேம்பாடு பற்றிக் குறிப்பிடப்படவில்லை. கவனமாகவே பராமரிக்கப்படுகிறார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் 24-9-2016 அன்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில் ஜெயலலிதா மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் வழக்கமான உணவு உண்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தில் கொடுத்துள்ள விவரத்தில், கல்லீரலில் லேசான வீக்கமும், மார்புக்குப் பின்புற எலும்பில் லேசான வலியும் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
29-9-2016 அன்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், காய்ச்ச லுக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர், சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறார் என்றும், மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சையைத் தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே செப்டம்பர் 29 அன்று நோயாளியின் நிலைமை என்ன என்பது பற்றி ஆறுமுகசாமி ஆணையத்தில் கொடுக்கப்பட்ட விவரத்தில், வென்ட்டிலேட்டர் சப்போர்ட்டில் நோயாளி இருந்தார் என்றும், கண் திறந்து பார்த்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பே, 26ந் தேதி தொடர்பான சிகிச்சை விவரங்களில், மேலும் சில பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2, 2016 அன்று லண்டனிலிருந்து ரிச்சர்ட் பீலே வருகை தந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு, அவர் என்னென்ன சிகிச்சை அளித்து வருகிறார் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பீலே நுரையீரல் தொற்று நிபுணர். ஆனால், மருத்துவமனை அதற்குமுன் வெளியிட்ட அறிக்கையில் ஜெ.வுக்கு நுரையீரல் தொற்று இருந்தது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அதே அக்டோபர் 2ம் தேதி சிகிச்சை பற்றி ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களில் வெண்ட்டிலேட்டர் சப்போர்ட்டில் நோயாளி இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3-10-2016 அன்று மருத்துவ மனை வெளியிட்ட அறிக்கையில் நுரையீரல் தொற்று பற்றியும், சுவாச உதவி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்றுக்கான நிபுணர் லண்ட னிலிருந்து வந்தார் என்ற பிறகே லேசாக இதனைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். அன்றைய நாளில் வென்ட்டிலேட்டரில் இருந்த ஜெயலலிதா, மருத்துவர்களின் வார்த்தைகளைக் கேட்டு கண் திறந்து பார்த்தார் என்பதாக ஆணையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அக்டோபர் 4ந் தேதி வெளியான மருத்துவ மனை செய்திக் குறிப்பில், 3ந் தேதி போலவே சிகிச்சை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆணையத்தில் கொடுக்கப்பட்ட விவரத்தில், ஜெ.வுக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் நுரையீரலில் சளி தேங்கியிருப்பதற்கான நிழல் பதிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6ந் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் எத்தனை சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது முதன்முதலாக வெளியிடப்பட்டது. அதாவது, செப்டம்பர் 22 முதல் மறைத்து வைக்கப்பட்ட விவரங்கள் லேசாகக் கோடிட்டுக் காட்டப்பட்டன. அதே நாள் சிகிச்சை குறித்து ஆணையத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களில் வென்ட்டி லேட்டர் சப்போர்ட் தொடர்கிறது என்பதும், டிரக்கியோஸ்டமிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
8-10-2016 அன்று ஜெ.வுக்கு பாஸிவ் பிஸியோதெரபி (அதாவது, நோயாளியால் அசைய முடியாத தால், மருத்துவர்களே அவரது கை-கால்களை அசைக்கும்) சிகிச்சை வழங்கப்படுவதாக மருத் துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. நோயாளியின் நிலை அப்படியே நீடிக்கிறது என ஆணையத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அக்டோபர் 10ந் தேதி அறிக்கையில் எய்ம்ஸ் டாக்டர்கள் டீம் பற்றி செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அவர்கள் 6ந் தேதியே வந்துவிட்டதாக ஆணையத்தில் தெரிவிக்கப் பட்டதுடன், வெண்டிலேட்டர் மற்றும் டிரக்யோஸ்டமி உதவியுடன் நோயாளி இருந்தார் என 10ந் தேதி சிகிச்சை விவரத்தை ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.
இப்படி மக்களுக்கும் ஊடகங் களுக்கும் தெரிவிக்கப்பட்டதைக் கடந்து பலவற்றை ஆணையத்தில் வெளிப்படுத்தியுள்ளது மருத்துவ மனை நிர்வாகம்.
ஜெ. எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதை அவரே முடிவு செய்வார் என 12-11-2016 அன்று அப்போலோ உரிமையாளர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார். (நம்மைப் போன்றவர்கள் தெரியாத்தனமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட நேர்ந்தால், இப்படியெல்லாம் முடிவு செய்ய விடுவார்களா? )
அதே நவம்பர் 12 என்று பகலில் ஆக்ஸிஜன் உதவியுடனும் இரவில் வெண்ட்டிலட்டர் உதவியுடனும் ஜெ. இருந்ததையும், போதுமான அளவு உணவு சாப்பிட முடியவில்லை என்றும், டிரக்யோஸ்டமியுடன் இருந்ததையும் ஆணையத்தில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இறுதியாக, ஜெயலலிதாவின் மரணம் டிசம்பர் 5ந் தேதி இரவு நிகழ்ந்ததாக மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டு, அதையே ஜெ. நினைவு நாளாக அ.தி.மு.க.வினர் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், டிசம்பர் 4ந் தேதி மாலை 3 மணி வாக்கில் மரணம் நிகழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.