கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர் 77

இப்போது தேர்தலை... நடத்தினால் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகும் என ஆய்வு அறிக்கை வெளியாக என்ன காரணம்? தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 2021ல் தேர்தலை தள்ளி வைக்க திட்டமா?

பீகார் மாநிலத்திற்கான தேர்தல்கள் மூன்று கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருப்பதும், தமிழகம்-மேற்குவங்கம்-கேரள மாநிலங்களில் இப்போது இடைத்தேர்தல் இல்லை என்பதும் சட்டமன்றத் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என்பதையே காட்டுகின்றன. 40% வாக்குப்பதிவு என்பதை 80%க்கு மேல் கொண்டு செல்வதற்கான வியூகங்கள் என்ன என்பதை டோர் டூ டோர் கச்சிதமாக செய்துவிடுவார்கள் அரசியல் கட்சியினர்.

mm

Advertisment

ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்

ரசிகர்கள் இல்லாமல் நடந்துவரும் ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு மவுசு இருக்கிறதா?

ஸ்டேடியத்தில் நேரடியாக பார்த்து ரசிக்கும் ஆட்கள் இல்லை என்பது, பின்னணி இசை இல்லாத பாடலைக் கேட்பது போன்றதுதான். ஏலம் எடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் குறைவாக இருக்கலாம். ஆனால், எந்த ஆட்டமாக இருந்தாலும் டி.வியில் பார்க்கும் ரசிகர்களாலும், அதற்காகவே வர்ணனை செய்பவர்களாலும் இப்போதும் ஐ.பி.எல்லுக்கு மவுசும் இருக்கிறது. மார்க்கெட்டும் இருக்கிறது.

Advertisment

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

திமுகவின் அராஜகத்தை மக்களிடம் எடுத்துக் காட்டும் விதமாகத்தான் கை மற்றும் தலையில் கட்டுடன் போராட் டம் நடத்தினோம் என்கிறாரே பா.ஜ.க மகளிரணி நிர்வாகி?

அடடே... பா.ஜ.க. மகளிரணி நிர்வாகியின் இந்த கட்டுப் போராட்டம் கட்சியின் திடீர் துணைத் தலைவரான முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலைக்கு தெரியாமல் போய்விட்டதே! மகளிரணி நிர்வாகியும் அவருடன் இருந்தவர்களும், தி.மு.க.வின் அராஜகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக போலியாக தலையிலும் கையிலும் கட்டுப் போட்டுக்கொண்டு, அதில் ரத்தம் கசிவது போல சாயத்தையும் ஊற்றியிருந்ததை அறியாமல், இப்படி ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் படத்தைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடிப்பவர்களுக்கு மனசாட்சி இல்லையா? இதயம் இல்லையா? கிட்னி இல்லையா? என்கிற ரேஞ்சுக்கு மற்ற கட்சியினர் மீது அண்ணாமலை பொங்கித் தீர்த்துவிட்டார். கடைசியில், சொந்தக் கட்சியினரே போலிக் கட்டு போட்டு அவரை ஏமாற்றியிருக்கிறார்கள்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

சட்டமன்றத் தேர்தலில் சசிகலா-பிரேமலதா இணைய வாய்ப்புண்டா?

பரஸ்பர இலாபம் இருந்தால் இணைப்புக்கு ஏது தடை? அரசியலில் அனைத்தும் சாத்தியம்.

பிரதிபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

தி.மு.க. ஆட்சிக்கு வரவேகூடாது என்பதில் அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் அதிக வேகம் காட்டுகிறார்களே?

தமிழ்நாட்டில் தங்களின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பது திராவிட சித்தாந்தம்தான் என்பது பா.ஜ.க.வுக்குப் புரிந்திருக்கிறது. பெரியார் சிலை மீது காவி பூசினால், அனைத்துக் கட்சிகளும் கொந்தளிக்கின்றன. அதில் பெரும்பாலான கட்சிகள் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கின்றன. ஆளும் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, அடையாள எதிர்ப்புகள் வெளிப்பட்டாலும் பா.ஜ.க.வின் நூலில் ஆடும் பொம்மையாகவே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனால், அதனைக் கையாள்வது பா.ஜ.க.வுக்கு எளிது. அதே நேரத்தில், தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் பா.ஜ.க.வின் ஒவ்வொரு நடவடிக்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்துகின்றன. தி.மு.க.வுக்கு நேரடி எதிரி எனக் காட்டிக்கொள்வதன் மூலமும், 2ஜி மேல்முறையீட்டு வழக்கு போன்றவற்றில் சட்டரீதியாக தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுப்பதன் வாயிலாகவும், அ.தி.மு.க. அரசு மீதான அதிருப்தி வாக்குகள் மொத்தமாக தி.மு.க.வுக்கு விழாத வகையில் புதிய அணிகளை உருவாக்குவதன் மூலமாகவும் தி.மு.க.வின் ஆட்சிக்கனவைக் கலைப்பதில் தீவிரம் காட்டுகிறது பா.ஜ.க.

வாசுதேவன் பெங்களூரு

கண்ணீர் விடுவது எப்பொழுது பலம். எப்பொழுது பலவீனம்?

பிறர் துன்பத்திற்காக கண்ணீர் விடுவது பலம். தன் சுயநலத்திற்காக அழுவது பலவீனம்.

_________

தமிழி

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

பழந்தமிழர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப் பட்டனவா?

காளையை அடக்கினால் கன்னியை மணம் முடிக்கலாம் என்பது போன்ற போட்டிகளைப் பழந்தமிழர் பண்பாடாக தமிழ்த் திரைப்படங்கள் காட்டியுள்ளன. ஏறுதழுவுதல் என்பது காளையை அடக்கும் வீரச்செயலாகப் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. ஆனால், அது இன்றைய ஜல்லிக் கட்டு போலவே இருந்ததா என்பது ஆய்வுக்குரியது. கிரேக்க நாகரிகத்தில் அடிமை வீரர்களை மோதவிட்டு, உயிர் குடிக்கும் வகையிலான விளையாட்டுகள்கூட நடத்தப்பட்டுள்ளன. தொல் தமிழர்களிடையே அத்தகைய கொடூர விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றதில்லை. குதிரை மீது உட்கார்ந்தபடி பந்து ஆடுவது பற்றி தமிழ் இலக்கியக் குறிப்புகள் உள்ளன. மேற்கு நாடு களில் இதனை போலோ என்று இப்போதும் விளையாடுகிறார்கள். உடல்திறனை மேம்படுத்தும் வகையிலான விளையாட்டுகள், வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள், பொழுது போக்குக்கான விளையாட்டுகள் எனப் பலவகை விளையாட்டுகள் தமிழர் வாழ்வில் ஒன்றிணைந் திருந்தன.