நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
பா.ஜ.க. நாலு சீட் வந்ததே எங்களால்தான் என ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து?
சட்டமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் 4 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், அ.தி.மு.க. வுடன் அமைத்த கூட்டணிதானே. அதைத்தான் ஜெயக் குமார் சொல்லியிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போன டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. இந்தியாவில் ஆட்சி அமைத்ததற்கே காரணம் ஜெயலலிதாதான் என்று பழைய சங்கதியை நினைவுபடுத்தி இருக்கிறார். பா.ஜ.க.- அ.தி.மு.க. உறவு என்பது ரத்தத்தைப் போன்ற கெட்டியானது. அவ்வப்போது கீறல் ஏற்பட்டு ரத்தம் கசிந்தாலும் மறுபடியும் ப்ளாஸ்டர் போட்டு ஒட்டி, ரத்த ஓட்டத்தை சரிப்படுத்திக் கொள்வார்கள்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
அடுத்த பிரதமர் தமிழர் என்கிறாரே அமித்ஷா, அப்போ மோடியை வீட்டுக்கு போகச் சொல்வதாகத் தானே அர்த்தம்?
தன் கட்சியில் எந்தத் தமிழரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்போகிறோம் என்பதை அமித்ஷா சொல்லவில்லை. ஏற்கனவே இரண்டு முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு அமைந்தபோது அதை தி.மு.க. தடுத்துவிட்டது என்பதுதான் அமித்ஷாவின் குற்றச்சாட்டு. ஒருவர் காமராஜர். அவரே தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை விரும்பாமல், பிரதமர்களைத் தேர்வு செய்யும் கிங் மேக்கராக இருந்தவர். காங்கிரஸ் பெருந்தலைவரான அவர் எப்படி தி.மு.க. தயவில் பிரதமராக நினைத்திருப் பார். அடுத்தவர், மூப்பனார். வாழ்க்கையில் ஒரே ஒரு தேர்தலில் போட்டியிட்டு, ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்குள், சொந்தத் தொகுதியிலேயே கடைசி ரவுண்டு வரை மல்லுக்கட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளானவர் மூப்பனார். அவரை பிரதமராக்கவில்லை என்று அமித்ஷா முதலைக் கண்ணீர் வடித்து, மூக்கை சிந்தினால், தங்கள் கூட்டணியில் இருக்கும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசனை இவர்தான் நாங்கள் சொன்ன தமிழர், பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கலாமே!
வாசுதேவன், பெங்களூரு
சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தேசியவாத காங். கட்சியின் செயல் தலைவராக ஆகியுள்ளாரே..!
தி.மு.க.வின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் இருந்தவர் கலைஞர். அவர் நினைவாற்றலுடன் இருந்த வரை அவர்தான் அத்தனை முடிவுகளையும் எடுக்கக்கூடிய தலைவராக இருந்தார். அவர் உடல்நலன் குன்றியபோது, மு.க.ஸ்டாலின் செயல் தலைவரானார். கலைஞர் மரணமடைந்த பிறகே, கட்சியின் தலைவரானார் ஸ்டாலின். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது உடல்நலன், வயது மூப்பு ஆகியவற்றைக் காரணமாக வைத்து கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது கட்சியின் மற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் அதை ஏற்க மறுத்து, போராட்டம் நடத்தினார்கள். அப்போது, சரத்பவாருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு ஆலோசனை தெரிவித்தார். நீங்கள் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடியுங்கள். பணிகளைக் கவனிக்க செயல் தலைவரை நியமித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த ஆலோசனை. அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் சரத்பவார். கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோது அவரது மகன் ஸ்டாலின் செயல்தலைவரானார். சரத்பவாருக்கு உடல் முடியாத நிலையில், அவரது மகள் சுப்ரியா சுலே செயல்தலைவராகியிருக்கிறார்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
மணிப்பூர் கலவரம் முடிவுக்கு வராமல் தொடர்வதேன்?
மக்களின் உரிமைகளை மதிக்காத போக்கை கடைப்பிடிக்கும் வழக்கம் பா.ஜ.க.வுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை இருக்கிறது. ஒன்றிய அரசின் கல்வி -வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்ற இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற புதுப் பிரிவைக் கொண்டு வந்தது போல, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்களுக்கான பட்டியலில், அம்மாநிலத்தில் அதிகளவில் உள்ள உயர்சாதியினரான மெய்த்தி சமூகத்தையும் இணைத்ததன் விளைவுதான்... பற்றி எரியும் மணிப்பூர் போராட்டம். மாநில பா.ஜ.க முதல்வர் பிரேன்சிங்கும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தக் கலவர நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய புண்ணியவான்கள்.
எஸ்.அர்ஷத்ஃபயாஸ், குடியாத்தம்
"தி.மு.க. 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், ஏன் ஒரு எய்ம்ஸ் கூட கொண்டு வரவில்லை' என்று அமித்ஷா கேட்டுள்ளாரே..?
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸை கொண்டு வரவில்லை. ஆனால், அது கொண்டுவந்த கத்திப்பாரா மேம்பாலம், சேலம் ரயில்வே கோட்டம், சேலம் பன் னோக்கு மருத்துவமனை, சென்னை-கன்னியா குமரி வரையிலான 4 வழிச்சாலை எல்லா வற்றையும் முழுமையாக நிறைவேற்றியது. பா.ஜ.க.வோ, தன் ஆட்சியில் தமிழ்நாட்டுக் காக மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸை அறிவித்துவிட்டு, நட்டு வைத்த ஒற்றைச் செங்கல்லையும் பறிகொடுத்திருக்கிறது.
அன்பழகன், அந்தணப்பேட்டை
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவ மனையை திறக்க ஜனாதிபதி வராதது ஏன்?
சென்னை என்றாலே டெல்லியின் பார்வை மாறுபாடாகத்தான் இருக்கும்.