மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
உக்ரைன் அதிபரை சர்வாதிகாரி என்கிறாரே ட்ரம்ப்...?
அது சரி உக்ரைன் அதிபரே சர்வாதிகாரி என்றால், அமெரிக்க, ரஷ்ய, சீன அதிபர்களையெல்லாம் அழைப் பதற்கு புதிய வார்த்தையைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். ஒருவேளை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்களை அமெரிக்க அகராதிகள் சர்வாதிகாரி என அழைக்க ஆரம்பித்திருக்கிறதோ என்னவோ!
வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி
மத்திய அரசின் கல்விக் கொள்கை அனை வரையும் கல்வி கற்க வைப்பதா அல்லது அதற்கு எதிரானதா?
நிதியை நிறுத்துகிறார்கள். ஆயிரம் கெடுபிடிகளு டன் நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு, நீட்டில் பெயிலானால்கூட பணம் இருப்பவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கலாமென நீதியைக் கழுத்தறுக்கிறார்கள். இன்னொரு பக்கம் குடும்பத் தொழிலை மேற்கொள்வதை ஊக்குவிக் கும் பி.எம். விஸ்வகர்மா யோஜனாவை கொண்டுவரு கிறார்கள். அப்படியே பின்னகர்ந்து வேத பொற்காலத் துக்குப் போய்விடலாமென திட்டமிடுகிறார்களோ... என்னவோ!.
ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி
தமிழ்நாட்டில் உள்ள வர்கள் தமிழை நேசிப் பதைவிட பிற இந்திய மாநிலங்களிலும், வெளி நாட்டிலும் வாழும் தமிழர்கள்தான் தமிழை அதிகம் நேசிக்கிறார்கள். மறுக்கமுடியுமா?
தன் சொந்தநாட் டைப் பிரிந்து வேறிடங் களில் இருப்பவர்களுக்கு தன் நாடு, மொழி, பண்பாட்டின் மீது தீவிரமான ஆர்வம் இருக்கும்தான். ஆனால் வேற்று மாநிலத்துக்கும் நாட்டுக்கும் போனவனுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை, அவன் சொந்த மொழியைக் காதில் கேட்பதே அபூர்வமாகி விடும். சொந்த மொழியில் படிக்கும் வசதிவாய்ப்பு குறையும். இரண்டு தலைமுறைகளுக்கு அப்புறமும் தமிழ் தெரிந்தவர்கள் அபூர்வமாகிவிடுவார்கள். இதுதான் யதார்த்தம். யாராவது சிலர் பிடிவாதமாக தன் வாரிசு களுக்கு தமிழையும் பண்பாட்டையும் கற்றுத்தந்து கொண்டு இருப்பார்கள். அதேசமயம், சொந்த மாநிலத்தில் இருப்பவர்களும் ஆங்கிலவழிக் கல்வி, இந்திவழிக் கல்வியால் தமிழுக்கு அந்நியமாகித்தான் வருகிறார்கள். குறைந்தபட்சம் பேச்சுமொழியாக தமிழுடன் உறவாடிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ்வழிக் கல்வியில் பயிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகள் மட்டும்தான் இங்கே தமிழை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
தேசியம், திராவிடம் தவிர்த்து ஒரு அரசியல் உண்டா?
அரசியல்வாதி தொட்டதெல்லாம் அரசியல்தான். சாதி அரசியல், மத அரசியல், பக்கத்து மாநிலம் தண்ணீர் விஷயத்தில் அரசியல் செய்தால் தண்ணீர் அரசியல் இப்படி எத்தனை பிரச்சனையுண்டோ அத்தனை அரசியலும் உண்டு.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
உ.பி. மாநிலம் லக்னோ வில் திருமண வரவேற்பு நிகழ்வில் திடீரென்று சிறுத்தை புகுந்திருக் கிறதே?
கல்யாண பிரியாணி சாப்பிடலாமென வந்திருக்கும். ஒருத்தர்கூட வரவேற்று பந்தியில் அமர வைக்காமல் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
எலான் மஸ்கை பதவியிலிருந்து நீக்க அமெரிக்காவில் போராட்டங்கள் வலுத்துவருகிறதே?
அதெல்லாம் எலான் மஸ்கை ஒன்றும் செய்து விடாது. உலகம் முழுக்க, கார்ப்பரேட்டுகளுக்கும் ஆட்சியி லிருப்பவர்களுக்குமான கூட்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதானி -மோடியென்றால், அமெரிக்காவில் அது மஸ்க் -ட்ரம்ப். இந்த புதிய போக்கை எதிர்கொள்ள மக்கள் புதிய வழிகளைத்தான் கண்டறியவேண்டும்.
க.சந்திரா, வேளச்சேரி
ரயில்களில் பதிவு செய்யாதவர்களுக்கென இருந்த நான்கு பெட்டிகளை இரண்டு பெட்டியாக்கி யிருக்கிறார்களே?
ஏற்கெனவே, மத்திய அரசு பழைய எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தயாரிப்பதேயில்லை. எல்லாம் வந்தே பாரத் போன்ற காஸ்ட்லி கட்டணம் வசூலிக்கும் ரயில்கள் மட்டும்தான். முதியோருக்கான சலுகைக் கட்டணத்தை ரத்து செய்துவிட்டது ரயில்வே துறை. இருக்கும் ரயில்களில் நான்கு பெட்டிகளில் பிதுங்கும் கூட்டம், பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் நுழைந்து பயணிகளை இம்சிக்கிறது. இப்போது, அடுத்த அதிரடியைச் செய்திருக்கிறார்கள். பரவலாக எதிர்ப்பு எழுந்ததும், பெட்டிகளைக் குறைக்கும் எண்ணமில்லை என அவசரமாக மறுத்திருக்கிறது ரயில்வே.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
"ஒன்றிணைந்தால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி' என்கிறாரே ஓ.பி.எஸ். அவ்வளவு நம்பிக்கையா?
பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் கதைதான். ஒன்றிணையும் கட்சிக்குள் அவரும் நுழைந்து விடலாமென்ற நப்பாசை.