எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
மசூதிகள் இருக்குமிடத்தில், இந்துக் கோயில்கள் இருந்தது எனக்கூறி புதிதாக தாக்கல்செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதே..?
“:இது இந்தியா. பெரும்பான்மை மக்களின் கருத்துப்படிதான் இந்த நாடு இயங்கும்'’என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் யாதவ் பேசியிருப்பதை என்னவெனச் சொல்வது? அரசியல் சட்ட விதிகள் சொல்வதைப் பின்பற்றுபவர்களைவிட, அதிகாரத்தில் இருப்பவர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்பவர்கள் நீதிமன்றங்களில் அதிகரித்துவருவது கவலை தரும் போக்காக இருக்கிறது.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
இரட்டை இலை விவகாரத்தில் கோர்ட் மூலம் தேர்தல் கமிஷன் நல்ல முடிவு எடுக்கும் என்கிறாரே தினகரன்?
அது சரி யாருக்கு நல்ல முடிவு என்ற ஒன்று இருக்கிறதல்லவா! தினகரனுக்கு நல்ல முடிவா? சசிகலாவுக்கு நல்ல முடிவா? இன்னும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என பலரும் நல்ல முடிவை எதிர்பார்த்திருக்கிறார்கள். இதுபோக சில முடிவுகள் தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க.வுக்குக்கூட நல்ல முடிவாக அமையலாம்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
ஆதவ் அர்ஜூன்ரெட்டி எதிர்காலம்...?
அர்ஜூன் ரெட்டி, லாட்டரி மார்ட்டினின் உறவினர் என்பதாலும் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பதாலும் எதிர்காலம் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவேண்டியதில்லை. தனக்கென செல்வாக்கை உருவாக்கத்தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். சர்ச்சை அரசியல் சில நேரம் கைகொடுக்கும். பலநேரம், அதைத் தொடங்கிவைப்பவர்களையே காவுவாங்கிடவும் செய்யும்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
புதையல் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
புதையல் எங்கிருந்து கிடைக்கும்? யாரோ கஷ்டப்பட்டு சேர்த்து, திருட்டுப் பயத்திலோ, யாராவது பிடுங்கிவிடுவார்கள் என்ற பயத்திலோ பின்னொரு நாள் தோண்டி எடுத்துக் கொள்ள லாம் என்று புதைத்துவைப்பது. அல்லது ஒரு நகரம் பேரழிவின்போது புதைந்துபோய், சில நூற்றாண்டுகள் கழித்து அங்கே வாழ்பவர்கள் தோண்டும்போது கையில் கிடைப்பது. லட்சம் பேர் புதையலுக்கு ஆசைப்பட்டாலும், அடைவதற்கான நிகழ்தகவு ஒருவருக்கும் குறைவாகவே இருக்கும். அதற்கு நீங்களே கஷ்டப்பட்டு உழைத்தால், ஆயிரக்கணக்கான புதையலுக்கு இணையான பணத்தைச் சம்பாதித்துவிடலாமே!
வாசுதேவன், பெங்களூரு
மேம்பாலங்களில் கார் பார்க்கிங் செய்வது அதிகரித்து வருகின்றதே?
பாலங்களே போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் பயன்பாட்டுக் காகக் கட்டப்படுவது. அது போக்குவரத்துக்கு இடைஞ்சலில்லாமல், வெள்ளத்தில் அடித் துச் செல்லப்படாமல் காரை நிறுத்திவைக்கப் பயன்படுமென்றால் இரட்டை ஆதாயம்தானே!
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
நாட்டில் வலுவான நீதித்துறை இருந்திருந்தால் மோடியும் யோகியும் சிறையில்தான் இருந்திருப்பார்கள் என்று கூறுகிறாரே நிச்சலானந்த ஸ்வாமி...?
கொஞ்சம் முதுகெலும்புள்ள சாமியார்போல! மனதில் பட்டதைப் பேசுகிறார்.
வண்ணை கணேசன், கொளத்தூர்
மும்பையில் ஒரு குடோனில் ஐந்தரை டன் ரேஷன் அரிசியைத் தின்று ஏப்பம்விட்டிருக்கிறதே எலிகள்?
எலிகள் மீது பல பழிகள் உண்டு. கிலோ கணக்கில் போலீசார் பறிமுதல் செய்த கஞ்சாவைத் தின்ற பழி, பிடித்துவைத்த மதுக் குப்பிகளை குடித்துத் தீர்த்த பழி. அத்தோடு இப்போது அரிசியைத் தின்ற பழியும் சேர்ந்திருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இடமலைக்குடியில் பழங்குடியினருக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த ஐந்தரை டன் அரிசியை எலிகள் தின்று தீர்த்ததாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் சொல்லும் மும்பை குடோன் கதை என்னவென்று தெரியவில்லை. குடோன்களில், ஆயிரக்கணக்கான எலிகள் உருவாவதும் அவை மூட்டைகளைத் துளையிட்டு அரிசிகளை திருடிச் செல்வதும் உண்மைதான். ஆனால், பலசமயங்களில் இரண்டு கால் எலிகள் திருடித் தின்ற அரிசிக் கணக்கும் எலிகளின் தலையில் விழுந்துவிடும். இப்படி எத்தனையோ பேருக்கு மீட்பராகத் திகழ்கின்றன எலிகள்.
ஜெ.சுமதி, ஆதம்பாக்கம்
அதென்ன வேலையில்லாத தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதை?
காஷ்மீர், அரியானா தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தவேண்டிய மாநிலம் மகாராஷ்டிரா. ஆள்பற்றாக்குறை, பணி அதிகமென மகாராஷ்டிரா தேர்தலை சில மாதங்களுக்குப்பின் நடத்தியது. இரண்டு மாநிலத்துக்கே விழிபிதுங்கும் தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை எப்படி ஒரேசமயத்தில் நடத்துமென கிடுக்கிப்பிடி போட அந்த உதாரணத்தைச் சொல்கிறார் சீமான்.