உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கட்சித் தொண்டர்கள் பலரும் கொண்டாடிவருகின்றனர். உதயநிதி அமைச்சராகப் பதவியேற்ற 14-ஆம் தேதி ஈரோட்டில் ஒரு சவரத் தொழிலாளி தனது சலூன் கடைக்கு வந்த அனைவருக்கும் இலவசமாக முடிதிருத்தம், சவரம் செய்து அசத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தன்னரசு. தன்னரசு தி.மு.க.வின் தீவிர தொண்டர். நடுப்பாளையம் கிராமத்தில் சலூன் கடை வைத்து நடத்திவருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதைக் கொண்டாடும் வகையில், பதவியேற்பு நாளில் தனது சலூன் கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடிதிருத்தம், சவரம் செய்வதாக முன்னதாகவே அறிவிப்பு செய்திருந்தார் தன்னரசு. அதற்காக மேலும் மூன்று சவரத் தொழிலாளர்களை அன்றைய தினம் பணியிலமர்த்தி காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடைக்கு வந்த அனைவருக்கும் கட்டிங், சேவிங் செய்துள்ளார். இதனால் 120-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். தொண்டர் செய்த தொண்டு!
ஜீவா
கிழக்கு இருந்தால் மேற்கும் இருக்கத்தானே செய்யும். இந்தியாவுக்கு மக்கள்தொகை அதிகரிப்பு பிரச்சனை என்றால், ஜப்பானுக்கு மக்கள் தொகை சரிவு பிரச்சனை. அந்த நாட்டின் மக்கள் தொகையே 12.5 கோடிதான். ஆனால் கடந்த சில வருடங்களாக அங்கு இறப்பு விகிதம் அதிகரிக்க, பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. கடந்த ஆண்டு அங்கு பிறந்தவர்களின் எண்ணிக்கை 8,11,604. இறந்தவர்களின் எண்ணிக்கை 14,39,809. ஜப்பான் அரசு கடந்த சில வருடங் களாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகை களை வழங்கிவருகிறது. இதுவரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ2.50 லட்சம் வரை மானியம் வழங்கிவந்தது. அதனை சமீபத்தில் ரூ.3 லட்சமாக உயர்த்தியுள்ளதாக ஜப்பானின் நிதியமைச்சர் கட்சுனோபு கட்டா தெரிவித்தார்! ஐந்து பெற் றால் ஆனந்தம்னு விளம் பரம் செய்வாங்களோ!
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் சில படங்கள் வசூல்ரீதியாக வெற்றிபெறாததை அடுத்து, நீண்ட இடைவெளிக்குப் பின் ஷாருக் நடித்து வெளிவரப் போகும் படம் "பதான்.' இப்படத்தின் பேஷ்ரம் ரங் பாடல் காட்சியில் நாயகி தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்பாடல் காட்சியில் தீபிகா காவி நிற உடையில் கிளாமராகத் தோன்றியுள்ளது ஆர்.எஸ். எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இந்நிலை யில் இப்படத்தை விமர் சித்துள்ள மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, "இந்த காவியுடைக் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை ம.பி.யில் திரையிட முடியாது' என எச்சரித்துள்ளார். இந்துத்துவ அமைப்புகள் படத்தைப் புறக்கணிக்க அழைப்புவிடுத்துள்ளன. ஏற்கெனவே அமீரின் "லால்சிங் சத்தா' படத்தையும் இந்துத்துவ அமைப்புகள் புறக்கணிக்க அழைப்பு விடுத்ததில், அப்படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கை ஷாக் ஆக்கிப் பார்க்கிறாங்க!
2002 குஜராத் கலவரத்தின் வடு இன்னும் மோடியை விடுவதாக இல்லை. அண்மையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு சபை கவுன் சில் கூட்டத்தில், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுவருவதாக பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலால் பூட்டோ குற்றம்சுமத்தி னார். அதற்கு இந்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்வதாக குற்றம்சாட்டியதோடு, பின்லேடனுக்கு அடைக்கலம் தந்ததையும் சுட்டிக்காட்டி னார். இதற்கு பதிலடி தந்த பிலால், "பின்லேடன் இறந்துவிட்டார். குஜராத் கசாப்புக் கடைக்காரர் உயிருடன் இருக்கிறார்'’என மோடியை விமர்சித்தார். "பிலாலின் இந்தப் பேச்சு நாகரிகமற்றது' என கண்டனங்கள் எழுந்திருப்பதோடு, இந்தியா முழுக்க பிலாலுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஊர் வாயை மூட உலைமூடி இல்லை!
மோடி முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததும் தனது பிரதம மந்திரி பிரகாசம் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பேர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கி, விறகடுப்பு பயன்படுத்தி வந்தவர்களை எரிவாயு அடுப்பு பயன் பாட்டுக்கு மாற்றினார். ஆனால், இவர்களுக்கு சில சிலிண்டர்கள் இலவசமாகத் தந்ததற்குப் பின் அது முடிவுக்குவந்தது. எரிவாயு மானியமும் படிப்படியாகக் குறைந்த நிலையில், தற்போது எரிவாயு உருளை ஒன்றின் விலை ரூ.1040 ஆக இருக்கிறது. விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான், வரும் பட்ஜெட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பயனாளிகளுக்கு எரிவாயு உருளையை ரூ.500-க்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. "பிரகாசம் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் சிலிண்டர் இப்போது காலியாக உள்ளது. இத்திட்டம் நடை முறைக்கு வந்தால் அவர்கள் மாதம் 500 விலைக்கு 12 சிலிண்டர்கள் வரை பெற்றுக்கொள்ளலாம்' என்றி ருக்கிறார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். அவங்க விரலாலே அவங்க கண்ணைக் குத்துறார்!
-நாடோடி