ரட்டை இலையில் நின்று வென்றவரான நீங்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது ஏன்?

Advertisment

இரட்டை இலையில் போட்டியிட்டது ஒரு தேர்தல் வியூகம். அவ்வளவுதான். அதற்காக எமது தனித்தன்மைகளை, கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா? நாட்டின் ஜனநாயகம், பன்மை கலாச்சாரம், அரசியல் சட்டம், சமூக நீதி, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கோடு இம்முடிவை எடுத்திருக்கின்றோம். மீண்டும் மோடி பிரதமராக வருவாரேயானால் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து விடுவார். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை முற்றிலுமாக சீரழித்து விடுவார். இந்த அபாயங்களிலிருந்து நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நீங்கள், இன்று அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

போன நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா? லேடியா? என ஜெயலலிதா கேள்வியெழுப்பினார். அதனால் தமிழக மக்கள் அவருக்கு 37 எம்.பி.க்களை பரிசளித்தனர்.

Advertisment

உதய் மின் திட்டம், தேசிய புலனாய்வு முகமை, நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை ஆகியவற்றில் மாநில உரிமைகளுக்காக மோடி அரசோடு மோதினார். தனி ஆளுமையாக இயங்கினார்.

இன்றைய அ.தி.மு.க. அரசு ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு எதிரான முடிவை எடுத்து, அ.தி.மு.க.வை சீரழித்த பா.ஜ.க.வோடு முரண்பாடான கூட்டணியை வைத்துள்ளார்கள். அ.தி.மு.க. தொண்டர்களின் மனநிலைக்கு எதிரான கூட்டணி இது.

thaminansari

Advertisment

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட் டின் நலன்களை காக்க முடியும் என்று சொல்லுகிறார்களே?

இணக்கமாக இருப்பதற்கும், பயந்து நடுங்கி பதுங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்களும் சொல்கிறோம். ஆனால் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைக்கவேண்டும் என்று சொல்ல வில்லையே?

"ஜெயலலிதா இருந்தாலே இந்த மாதிரியான கூட்டணிதான் உருவாகியிருக்கும்' என்று ஓ.பி.எஸ். சொல்லுகிறாரே?

அண்ணன் ஓ.பி.எஸ். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க.வுடன் அதிக நெருக்கம் பாராட்டுவது தெரிந்ததே. அதனால்தான் அ.தி.மு.க.வில் பூசல்கள் உருவானது. இப்போது அவர் அப்படியெல்லாம் பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

"எதிரி நாடுகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் மோடி தலைமையில்தான் மத்திய அரசு அமைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மும்பை தாக்குதல் நடந்தும் தீவிரவாதத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்களே?

தற்போது மோடி பிரதமராக இருக்கும் போதுதானே, அஜாக்ரதை காரணமாக புல்வாமா தாக்குதல் நடைபெற்றது? வாஜ்பாய் ஆட்சியில்தானே மசூத் அஸார் போன்ற தீவிரவாதிகளை, அந்நிய சக்திகளிடம் ஒப்படைத்தார்கள்? அவர்கள் ஆட்சியில் தானே பாகிஸ்தான் ஆதரவுப் படைகள் கார்கிலுக்குள் நுழைந்தன? சீனாவின் எல்லை அத்து மீறல்கள் மோடியின் ஆட்சியில் தானே அதிகரித்தது?

பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தால் உள்நாட்டில் மதக்கலவரங்களை தூண்டுவார்கள். ஆட்சியில் இருந்தால் தேர்தல் நேரத்தில் போர் வெறியை தூண்டுவார்கள். நல்லவேளை மக்கள் இவர்களின் சித்து விளையாட்டுகளை புரிந்துகொண்டார்கள். அந்த கூட்டணித் தலைவர்கள்தான் புரியாததுபோல நடிக்கிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்களை வெளியில் கொண்டுவந்த நக்கீரன்மீது வழக்கு தொடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

நக்கீரன் மீது வழக்குகள் பாய்வது புதிதல்ல. புதைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட செய்திகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்டுவதில் நக்கீரனின் பணிகளை தமிழ் சமூகம் பாராட்டுகிறது.

இப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நக்கீரன் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது என்பதற்காக, ஆசிரியர் கோபால் அவர்களுக்கு சம்மன் அனுப்பியது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

சிறுபான்மையினர் நலம்பெற எந்த மாதிரியான திட்டங்களை காங்கிரஸ் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பதவிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். நாடு முழுக்க விசாரணைக் கைதிகளாக உள்ளவர் களை உடனே விடுதலை செய்ய வேண்டும். சிறுபான்மையினருக்கு கல்வி வாய்ப்பளிக்கும் வகையில் அலிகர் பல்கலைக்கழகத்தின் கிளைகளை எல்லா மாநிலங்களிலும் அமைக்க முன்வர வேண்டும்

பா.ஜ.க. அரசில் கிடைக்காத எதை, நீங்கள் காங்கிரசிடம் எதிர்பார்த்து காத்திருக் கிறீர்கள்?

ராகுல் அவர்களின் ஸ்டெல்லாமேரீஸ் மாணவிகளுடனான கலந்துரையாடல் ஒரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாகும்.

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை, "நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு, தமிழ் மொழி பாதுகாப்பு, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், மீனவர்களுக்கு தனி அமைச்சகம், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகியவற்றில் ராகுலின் கனிவான அணுகுமுறை நம்பிக்கை யூட்டுகிறது.

-வே.ராஜவேல்

படம்: ஸ்டாலின்