மாணவிகளால் அம்பலமாகி, நக்கீரன் முயற்சியால் கைது செய்யப்பட்ட கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா வழக்கில் ஏற்படும் தடுமாற்றங்கள் குறித்து தொடர்ந்து பதிவுசெய்து வருகிறோம். விசாரணையில் முனனேற்றம் இல்லை என்பதையும், சாட்சிகள் மிரட்டப்பட்டு வருவதையும் நக்கீரன் சுட்டிக்காட்டி வருகிறது.
விசாரணை அதிகாரிகளில் ஒருவரான ஆய்வாளர் கோமதி, ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதையும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகியான சரண்யாவிடம் மாணவிகளின் வாக்குமூலத்தை தரும்படி கேட்டதையும், கடந்த நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்,
இந்த விவரம் உளவுத்துறை மூலம் மேலிடம் செல்லவே... தமிழக டி.ஜி.பி.யின் நேரடி உத்தரவின் பெயரில் பெண் ஆய்வாளர் கோமதி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார், இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே போடப்பட்ட மூன்று போக்சோ வழக்குகளில் இரண்டு வழக்கிற்கு ஜாமீன் கிடைத்த நிலையில்... ஒரு வழக்கில் 59 நாளுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் முதல்வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் இரண்டு மானபங்க வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்... மேலும் இரண்டு போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு, ஒரு வழக்கில் நீதிமன்றக் காவலில் சேர்க்கப் பட்டுள்ளார்.
ஜெயிலில் சொகுசாக இருக்கும் சிவசங்கர பாபாவின் பண பலம், ஆன்மீக பலம், டெல்லி மேலிட செல்வாக்குகள் மூலம் அவரை வெளியே கொண்டுவர பெரும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா சிறையில் இருந்தபடி, தன் பக்தர்களுக்கு எழுதிய கடிதம் நமக்கு சிக்கியுள்ளது.
அதில், சம்ரட்சனா அனைவருக்கும்...
1. வழக்கு சம்பந்தமாக அட்வகேட் நாகராஜன் மூலம் பெரிய வழக்கறிஞர் வைத்து ஹைகோர்ட் மூலம் ஃபெயில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதனால் தாமதம் என்று வெளிப்படையாக சொல்ல, சில சிக்கல்கள் உள்ளதால் வெளியில் சொல்ல முடியவில்லை.
2. சட்டரீதியாக முயற்சியும், அதற்கான வசூலையும் வேறு யாரும் கட்டாயம் செய்யக்கூடாது. நீங்கள் அவசியம் இல்லாமல் நடுவில் குழப்பங்களை விளைவித்துவிட்டால் பிரச்சினை அதிகம் ஆகிவிடும்.
3. தற்போதுள்ள சூழ்நிலையில் ராமராஜியம் மெயின்கேட்டை பூட்டிவிடவும்.
4. கணேஷ் பூரி, துர்கா அப்பார்ட்மெண்ட் உள்ளவர்கள் மட்டும் விஜயமாருதி அல்லது காலனி வழியை பயன்படுத்தவும். மற்றவர்கள் அவரவர் காலனியிலேயே பூஜை செய்துகொள்ளவும்.
ராமராஜியத்தில் மற்றவர்கள் கூடுவதோ, மீட்டிங் போடுவதோ தேவையில்லை. இதனால் யாராவது நமது அமைப்பின் உள்ளே நுழைந்து பிரச்சினைகள் வரலாம். எனவே தயவுசெய்து யாரும் வரவேண்டாம். அமைப்பு ரீதியாக யாரும், யாரையும் குறை சொல்ல வேண்டாம். நான் நேரில் வந்தவுடன் முடிவெடுத்துக் கொள்ளலாம். அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக சச்சரவு செய்யாமல் செயல்படவும்.
-என சிறையில் இருந்தபடி தன் பக்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, சிவசங்கர் பாபா கடந்த நவம்பர் 16-ஆம் தேதி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது... வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மாதம் 30-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத் தார். இந்தநிலையில் சிவசங்கர் பாபாவுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள் ளது. மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் வரும் 25 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
கடந்த முறையும் தனியார் மருத்துவமனை சிகிச்சை கேட்ட பாபா தரப்புக்கு எதிராக, "சி.பி.சி.ஐ.டி. தரப்பில் எட்டு பேர் கொண்ட அரசு மருத்துவர் நிபுணர் குழு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும், அரசு மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவித்தால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரலாம்' என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், கடந்தமுறை அவருக்கு அரசு மருத்துவமனையிலே சிகிச்சை வழங்கப்பட்டது. "இந்த முறை அவருக்கு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு அனுமதித்தால், அதை வைத்து அங்கிருந்தபடியே ஜாமீன் பெறும்வரை சுகமாக இருந்தபடியே வெளியே வர வாய்ப்புள்ளது. இதை அரசுத் தரப்பு எப்படி கையாளப்போகிறது' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.