லேசியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராகத் தொடங்கி, கல்வி அமைச்சர், துணைப் பிரதமர், பிரதமர் என சீராக சிகரங்களைத் தொட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கு மேல்முறையீட்டில் தோல்வியடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார்.

மலேசியாவின் 6-வது பிரதமராகவும், 2009 முதல் 2018 வரை பதவியிலும் இருந்த நஜீப் சிறை செல்லுமளவுக்கு என்ன குற்றம் செய்தார்?

cc

Advertisment

அரசு நிறுவனமான 1 மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹார்ட்டிலிருந்து (1 ஙஉஇ) மில்லியன்கணக்கான டாலரை ஊழல் மூலம் அபகரித்துவிட்டார் என 2015-ல் புகார்க் குரல்கள் எழும்பின. அமெரிக்க பத்திரிகையொன்று நஜீப்பின் ஊழல்களைக் குறித்து கட்டுரை எழுத, மலேசியாவில் நஜீப்புக்கு எதிரானவர்கள் அணிதிரளத் தொடங்கினர். நஜீப்பை ராஜினாமா செய்யச் சொல்லி பேரணிகள் நடந்தன. பிரதமர் நஜீப், குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதற்குப் பதில், தனது அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டு எதிர்க்கட்சியினர், குற்றம் சொல்பவர்களை ஒடுக்க ஆரம்பித்தார்.

ஆனால் 2018 தேர்தலில் நஜீப்பின் அத்துமீறல் களுக்கு மலேசிய மக்கள் கடிவாளமிட்டனர். மக்கள் அவரைத் தோற்கடிக்க, அரசுப் பணம் 2.67 பில்லியன் மலேசிய ரிங்கிட்டுகளை நஜீப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றிய ஊழல் குற்றச்சாட்டில், ஊழல் தடுப்புக் குழு அவரைக் கைதுசெய்தது. இந்திய மதிப்பில் இது 50 ஆயிரம் கோடி ரூபாய். அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப் பட்டிருந்தன.

நஜீபின் மனைவி ரோஸ்மா மேன்ஸர் மீதும் நிதி மோசடி, வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் சோதனை நடத்தப் பட்டபோது எப்படி ஆடம்பரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோ, அதுபோல இந்தத் தம்பதியிடமிருந்து 306 கைப்பைகள், 401 கைக் கடிகாரங்கள், 234 மூக்குக் கண்ணாடிகள், ஆடம்பர நகைகள் கைப் பற்றப்பட்டபோது மலேசியாவே திகைத்துப் போனது.

முறைகேடாகத் திரட்டப்பட்ட பணத்தில், ரியல் எஸ்டேட் முதல் சொகுசுக் கப்பல்கள்வரை பல்வேறு வகைகளில் முதலீடு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் நஜீப். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸில் சொத்துக்கள், பிகாசோ போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள், ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, ‘டாடிஸ் ஹோம்’ போன்ற ஹாலிவுட் படங்களின் தயாரிப்புக்கு நிதி வழங்கியது எனப் பல்வேறு விதங்களில் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தார்கள். தவிரவும் உலகின் மெகா ஊழல்களில் ஒன்றாகவும் இது முத்திரை குத்தப்பட்டி ருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 8 நாடுகள் விசாரணை நடத்திவந்தன.

cc

Advertisment

2020, ஜூலை 18-ல் நஜீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜீப்புக்கு 12 ஆண்டு சிறையும், 210 மில்லியன் ரிங்கிட்டுகள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அப்போதே நஜீப்பின் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன்பிறகு அவர் மேற்கொண்டதெல்லாம், வெள்ளத்தில் சிக்கியவன் வைக்கோலைப் பிடித்து கரையேறும் முயற்சிகள்தான். இதனை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகினார் நஜீப். 2021-ல் அங்கும் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. கடைசிப் புகலிடமாக, பெடரல் நீதிமன்றத்தைத் தஞ்சமடைந்தார்.

இங்கேயும் தனக்கு விடுதலை கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லாத நஜீப், சட்ட ஆலோசகர்களின் வழிகாட்டு தல்படி ஒரு யுக்தியைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது இந்த வழக்கில் தனக்கு சில புதிய ஆதாரங்கள் கிடைத் திருப்பதாகவும் அதை வழக்கில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். பின் தனது வழக்கமான வழக்கறிஞரான ஷாஃபி அப்துல்லாவை மாற்றிவிட்டு, ஹிஷாம் தே என்பவரை நியமித்தார். இந்த வழக்கு விவரங்களைப் படித்துப் புரிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும். அதனால் வழக்கை சில மாதங்களுக்குத் தள்ளிவைக்கவேண்டும் என்று பெடரல் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் ஹிஷாம் தே.

வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அமர்வின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன், நஜீப் தரப்பின் இந்த இரு கோரிக்கைகளையுமே நிராகரித்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவுபெற்ற நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற தோடு, அது விதித்த தண்டனைகளையும் உறுதிசெய்தார்.

தனது ஆதரவாளர்கள் முன், "தான் தோற்கவில்லை... ஆனால் நீதி கிடைக்க வில்லை'’என்று கையசைத்தபடி சிறைக் குச் சென்றிருக்கிறார் நஜீப். இது மட்டுமல்லாமல் எம்.டி.பி. நிறுவனத்தின் கணக்கறிக்கையில் மாற்றம் செய்தது, அரசாங்கச் சொத்தில் நம்பிக்கை மோசடி செய்தது, 2.3 பில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றது என மேலும் நான்கு வழக்குகள் நஜீப் மீது உயர்நீதிமன்றத்தில் இருக்கின்றன. இந்த வழக்குகளிலும் எதிராகத் தீர்ப்பு வருமெனில், அவர் சிறையில் கழிக்க வேண்டிய வருடங்களும், அரசுக்குச் செலுத்தவேண்டிய அபராதத் தொகையும் இன்னும் உயரலாம்.

மலேசிய நீதிமன்றம் மாதிரி ஒவ்வொரு நீதிமன்றமும் முதுகெலும்புடன் நடந்து கொண்டால், பல நாடுகளைச் சேர்ந்த அதிபர்களும் பிரதமர்களும் சிறை யில்தான் அடைக்கலமாக வேண்டியிருக்கும்.

-க.சுப்பிரமணியன்