தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில், இந்த நிதியாண்டில் 8 இடங் களில் அகழ்வாராய்ச் சிப் பணிகளை செய்ய வுள்ளது தமிழக தொல்லியல்துறை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி யில் முதல்கட்டமாக இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள். கீழ்நமண்டியில் என்ன உள்ளது?
திருவண்ணாமலை மாவட் டம் வந்தவாசியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ்நமண்டி கிராமம். இந்த கிராமத்தின் மலையடிவாரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாக கடந்த 2020-ஆம் ஆண்டு குண்ணகம் பூண்டியைச் சேர்ந்த மின்வாரிய அலுவலர் பழனி, திருவண்ணா மலை மாவட்ட வரலாற்ற ஆய்வு நடுவகத்துக்கு தகவல் தந்தார். அந்த தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் பாலமுருகன், ஆய்வாளர்கள் சுதாகர், பழனிச்சாமி, வெங்கடேஷ் நேரில்சென்று ஆய்வுசெய்தனர்.
அதுகுறித்து நம்மிடம் தகவல்கள் தெரிவித்த செயலர் பாலமுருகன், “"அந்த இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைப் புதைத்த ஈமக்காடு உள்ளது. அந்த ஈமக்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருக்கின்றன. அக்காலத்தில் இறந்துபோன மனிதர்களைப் புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண்குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றையும் உடன்வைத்து புதைத்துவிடுவது வழக்கம். இவ்வாறு புதைத்த இடத்தைச் சுற்றி வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாகப் புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பார்கள். இதனை கல்வட்டங்கள் என குறிப்பிடுவார்கள். இந்த கல்வட்டங்கள் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்பட்டன. தொல்லியல் அறிஞர்கள் இதனை பெருங்கால கல்வட்டங்கள் என்றார்கள். இந்த கல்வட்டப்பகுதியில் நெடுங்கல் அல்லது குத்துக்கல் (ஙங்ய்ட்ண்ழ்) என்று சொல்லப்படுகின்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கூர்மையான பாறைக்கற்கள் இரண்டு இடங்களில் உள்ளன. பெருங்கற்கால கல்வட்டங்களில் சிறப்புக்குரியது குழிக்குறி பாறைகள் (ஈன்க்ஷ ஙஹழ்ந்ள் ள்ற்ர்ய்ங்) கல்வட்டங்கள். இது தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி பகுதியிலும், அந்த வரிசையில் கீழ்நமண்டி கிராமத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. கல்வட்டங்கள் சில சிதிலமடைந்திருந்தன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண்குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. கருப்பு சிவப்புவண்ணப் பானைகள், இரும்பு ஆயுதங்கள் கிடைத்த தன் மூலமாக இங்கு இரும்பு உருக்காலை இருந்ததற்கான அடை யாளங்கள் இருப்பதால் இந்தப் பகுதியினை முறையாக அகழாய்வு செய்தால் தமிழர்களின் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும். தமிழரின் பண்பாட்டை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும் பாது காக்கவும் வேண்டும் என தொல்லியல் அறிஞர்கள் க.ராஜன், சு. இராஜவேல் ஆகியோர் கருத்து தெரிவித்தார்கள்''’என்றார்.
கீழ்நமண்டி தகவல்களை தமிழக தொல்லியல் துறைக்கும், தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு தெரியப்படுத்திய வரலாற்று ஆர்வலர்கள், அகழாய்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழ்நமண்டி கிராமத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய ரூ.30 லட்சம் ஒதுக்கி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல்கட்ட ஆய்வினைத் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு தொல்லியல் துறையின் மூலம் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்டமாக 200-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்களைத் தோண்டி ஆய்வுசெய்யத் துவங்கியுள்ளனர். கீழடியைப் போல இங்கும் தொல்பொருட்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதுகுறித்து தொல்லியல் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "இங்கு நடத்தப்படும் அகழாய்வு புதிய வரலாற்றுக்கு முந்தைய மற்றும் இரும்புக்கால தளங்களைக் கண்டறிய வழிவகுக்கும். அதோடு, இந்தப் பகுதியின் பல்வேறு பண்பாட்டுக் காலவரிசையைப் புரிந்துகொள்ளவும், புதிய கற்காலத்திலிருந்து இரும்புக் காலகட்டத்திற்கு மாறியபோதான பண்பாட்டு மாற்றத்தைப் புரிந்துகொள்ளவும் முடியும். அதேபோல் இப்பகுதியில் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், இரும்புக்கால மக்களின் ஈமப்பழக்க நடைமுறைகளை மதிப்பிடுதல், இவ்விடத்தின் தள உருவாக்கத்தை பகுப்பாய்வு செய்ய உள்ளது. இப்பகுதியிலுள்ள பிற பெருங்கற்கால இடங்களை சரியான தொல்லியல்சூழல் அடிப்படையில் அடையாளம் காணவும் போகிறோம். இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பண்டைய பண்பாட்டு எச்சங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்துதல் போன்றவற்றை இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளவுள்ளது''” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
"வந்தவாசி என்பது வரலாற்றில் மிக முக்கியமான நகரம். வந்தவாசியை சுற்றியுள்ள தெள்ளார், சீயமங்கலம் குடைவரைக்கோவில், வெண்குன்றம், நெடுங்குணம், திருமால்பாடி, மடம், சளுக்கை, கொடுங்காலூர், பாதூர், ரகுநாதசமுத்திரம், வயலூர், தென்னாங்கூர் பகுதிகளில் சோழர்கள், பாண்டியர், பல்லவர், சம்புவராயர்கள் கால கல்வெட்டுகள் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன. வந்தவாசிக்கு அருகிலுள்ள செஞ்சி, காஞ்சிபுரம் போன்ற வை மிக முக்கிய நகரங்களாக இருந்துள்ளன. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த துறவியான திக்நாகர், சீயமங்கலத்தில் பிறந்தார் என்கிறது மயிலை.வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் நூல். ஆங்கிலேயர் -பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையிலான போர் வந்தவாசி யில் நடைபெற்று வந்தவாசி கோட்டையை அழித்தது. இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நடத்தப்படும் அகழாய்வு தமிழர்களின் பண்பாட்டு, வாழ்க்கை முறையைக் கண்டறிய உதவும்'' என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.