மிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. சேலம் ஒன்றியக்குழு கவுன்சில் இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் பின்னணியில் களம் இறங்கியிருக்கும் சுயேட்சையை வீழ்த்த, ஆளுங்கட்சி ஒட்டுமொத்த படையையும் இறக்கி விட்டிருப்பது பரபரப்பை எகிற வைத்துள்ளது.

மொத்தம் 10 கவுன்சிலர்களைக் கொண்ட சேலம் ஒன்றியமானது, காலங்காலமாக அ.தி. மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 5, தி.மு.க. 4, இ.கம்யூ. 1 இடத்திலும் வெற்றி பெற்றன. கம்யூ., ஆதரவுடன் அ.தி.மு.க.வின் சேலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வையாபுரியின் மனைவி மல்லிகா, சேலம் ஒன்றியக் குழுத் தலைவரானார். சேலம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் காலியாக உள்ள 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால், உள்ளாட்சி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துவிட்டது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும் பட்சத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் சேலம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட முடியும் எனக் கணக்குப்போட்டு உடன்பிறப்புகள் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

lol

Advertisment

8-வது வார்டில், அ.தி.மு.க.வின் கிளைச் செயலாளர் வெங்கடேஷ்வரன், சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தி.மு.க. தரப்பில் ஆண்டிப்பட்டி ஊராட்சி கிளைச் செயலாளர் முருகன் களமிறக்கப்பட்டு உள்ளார். இவர்கள் தவிர, மேலும் 14 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தி.மு.க.வின் முருகனும், சுயேட்சை வெங்கடேஷ்வரனும் பங்காளிகள். இருவரின் வெற்றி வாய்ப்பு குறித்து 8-வது வார்டிலுள்ள வாக்காளர்கள், தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம்.

"ஆளுங்கட்சி பலம், உதயசூரியன் சின்னம் ஆகியவை தி.மு.க. வேட்பாளர் முருகனுக்கு சாதகமான அம்சங்கள். கரன்சி பலமும் அதிகம். இதே மண்ணின் மைந்தனான அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாருக்கு இந்த வார்டில் உறவுக்காரர்கள் அதிகம். அவரை, கட்சித் தலைமை தேர்தல் வேலைகளில் இறக்கி விட்டுள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் 8-வது வார்டில், கடந்த 40 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை தவிர மற்ற காலங்களில் அ.தி.மு.க.தான் ஜெயித்து வந்திருக்கிறது. சுயேட்சை வெங்கடேஷ்வரன், சேலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வையாபுரியின் தீவிர ஆதரவாளர். இவருக்கு வையாபுரி மூலமே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் நிழலான இளங்கோவனுக்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவி வழங்கப்பட்டதைக் கண்டித்து தாறுமாறாக விமர்சனம் செய்திருந்தார் வையாபுரி. அவர் மீதான கடுப்பில் வெங்கடேஷ்வரனுக்கு எதிராக இலை கட்சியில் பலர் உள்ளடி வேலைகளில் இறங்கியுள்ளனர். வையாபுரி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளே வெங்கடேஷ்வரனை ஆதரித்து வாக்கு சேகரிக்க வரவில்லை. வேட்பாளர் மட்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொல்லி சொந்த பந்தங்களைத் திரட்டி 'மாஸ்' காட்டி வருகிறார். சுயேட்சைக்கு இருக்கும் உறவுக்காரர்களின் பலத்த ஆதரவுதான், ஆளுங்கட்சி தரப்புக்கும் கொஞ்சம் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் சுயேட்சை சின்னம் பெரிதாக எடுபடாது,'' என்கிறார்கள் ர.ர.க்களும் உ.பி.க்களும்.

Advertisment

பணப்பட்டுவாடா வெளிப்படையாகவே நடக்கிறது எனப் புலம்புகிறார்கள் இதர சுயேட்சை வேட்பாளர்கள். குடும்பத் தலைவிகளுக்கு இன்னும் 1000 ரூபாய் தரப்படாதது, வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராதது ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருவதாக வெங்கடேஷ்வரன் சொன்னார். பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை திட்டங்களைக் கூறி வாக்குச் சேகரிப்பதாக முருகன் கூறினார். அ.தி.மு.க.வின் கோட்டை யைத் தகர்த்து ஆளுங்கட்சி புதிய வரலாறு படைக்குமா என்பது ஜூலை 12-ல் தெரியவரும்.