ளம்கொழிக்கும் தஞ்சையைத் தாயாகக் காக்கும் காவிரி பாசனப் பகுதியில், கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டம் மற்றும் நவீனமயமாக்கல் என்ற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2-2-2021 அன்று, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின்படி, காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் கிளைக் கால்வாய்களின் இருபுறமும் தண்ணீர் ஓடும் தரைப்பகுதியிலும் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம், விவசாயிகளுக்கு விரோதமானது என்பதால் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இணைந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

df

இது குறித்து தஞ்சையை சேர்ந்த வழக்கறிஞரும் விவசாயியுமான பிரகாஷ் நம்மிடம் கூறும்போது, "கல்லணை கால்வாயில் பிரதான கால்வாய் 148 கி.மீ. தூரம். அதன் கிளைக் கால்வாய்கள் 636 கி.மீ. இந்த கால்வாய் மூலம் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2,27,472 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இக்கால்வாய் செல்லும் பகுதிகளில் 403 ஏரிகள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தற்போது இதில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 2,639 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது.

Advertisment

கல்லணை கால்வாயில் இருந்து பிரிந்து வரும் கிளை வாய்க்கால்களின் உட்பகுதி மற்றும் தரைப்பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கப் படுவதால், இக்கால்வாயின் நீர் நிலத்துக்குள் இறங்க வாய்ப்பில்லை. எனவே இக்கால்வாய் பாயும் பகுதியிலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பில்லை. எனவே இந்த நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி நடக்கும் விவசாயமும், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு இப்பகுதிகளில் வறட்சி சூழக்கூடும். எனவே இத்திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.

"இந்த கான்கிரீட் அமைக்கும் திட்டத்தின் மூலம் சுமார் 4,200 கனஅடி தண்ணீரை பாசனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வாய்க்காலும் அதன் கரைகளும் தரமாக உருவாக்கப்பட்டன. தற்போது கரைகள் பலவீனமடைந்ததால் 2,500 கனஅடி நீர் மட்டுமே செல்கிறது. இந்த கரைகளைப் பலப்படுத்தி, கால்வாயைச் சுத்தப்படுத்தினாலே முன்புபோல் போதுமானது. இப்படி கான்கிரீட் அமைப்பது எங்கள் வாழ்வாதாரத்தையே பாதிக்கும்'' என்கிறார் தேசிய மக்கள் கட்சி பனசை அரங்கன்.

ffarmers

Advertisment

"கால்வாயிலுள்ள நீர் பூமிக்குள் இறங்குவதன் மூலம், மழையில்லாத வறட்சிக்காலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய இயலும். கான்கிரீட் போடப்படுவதால், தஞ்சாவூர், பூதலூர், ஒரத்தநாடு, லால்குடி, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி, மணல்மேல்குடி ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் ஆழத்துக்குச் சென்று விவசாயம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும். விவசாயிகளைச் சாகடிக்கவும், ஒப்பந்தக்காரர்களை வாழவைக்கவுமே கொண்டு வந்துள்ள திட்டம்'' என்கிறார், ஆழ்துளை விவசாயிகள் சங்க தலைவர் முருகேசன்.

"இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2,639 கோடி ஒதுக்கீடு செய்து, இரவுபகலாக வேலை நடந்துவருகிறது. ஈரானில் தண்ணீர் சேமிப்புத் திட்டம் என்ற பெயரிலும், சீனா, ஸ்பெயின், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டு, பின்னர் கைவிடப் பட்ட திட்டமாகும். எனவே இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்கிறார்கள் இந்திய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ரபீக், சமூக ஆர்வலர் ராமநாதன் ஆகியோர்.

இத்திட்டத்தை கீழ்பவானியில் செயல்படுத்த முனைந்தபோது, அப்பகுதி விவசாயிகள், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தன. மேலும், மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வருக்கும் மனு farmersஅளிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப் பாளர் ஹூமாயுன்கபீர் கூறினார். "கோதாவரி ஆற்றுப் பாசனக் கால்வாய் பகுதிகளில் இதே திட்டத்தை செயல்படுத்தி, மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது. அதேபோல தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழக விவசாயிகள் அனைவரும் போராடி இத்திட்டத்தை நிறுத்தச்செய்ய வேண்டும்'' என்கிறார், இயற்கை வேளாண் விவசாயி தங்கராசு.

"அதிவேகமாக பஸ், ரயில், விமானங்கள் செல்லலாம். அதே போல மக்களின் உயிராதாரமான தண்ணீரை ஓடவிட்டால், சுற்றுப் புற விவசாயம் எதற்குமே பயனளிக் காமல் வீணே கடலில்தான் கலக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது'' என்கிறார் தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திருநாவுக்கரசு.

மக்களுக்கான திட்டமென்பது, மக்களால் விரும்பக்கூடிய, மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய திட்டமாக இருக்க வேண்டும். இந்த கான்கிரீட் கால்வாய் திட்டம், அப்பகுதியின் நிலத்தடி நீர்வளத்தைச் சிதைப்பதாக இருப்பதால், விவசாயிகளின் எதிர்ப்புக்களைக் கருத்தில்கொண்டு இத்திட்டத்தைக் கைவிட்டு, விவசாயத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டுமென்றும், இல்லையெனில், அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராடு வோம் என்றும் கூறுகிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.