நடந்தது என்னன்னு தெரியாம தப்புத்தப்பா நியூஸ் வருது...''
-நம்மைத் தொடர்புகொண்டு இப்படிச் சொன்னார், விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி தாலுகா - உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவர். இவர், அத்திகுளம் கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.
உலக்குடிவாசிகள் மறுப்பதாகச் சொல்லப்படும் தகவல் இதுதான் -
தலித் மக்களுக்கு முடிவெட்டியதால், ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால், மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர், உயிருக்குப் பயந்து எங்கோ காட்டில் மறைந்து வாழ்கின்றனர். மேல் சாதியினர் உட்காரும் அதே சலூன் நாற்காலியில் தாழ்த்தப்பட்டவர்களையும் அமரவைத்து முடி வெட்டியதுதான் இதற்கு காரணம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி நர்மதாவை காட்டில் பாம்பு கடித்துவிட்டது. அவள், மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள். .’
ஆனால் இதனை மறுத்து, ""சிறுமியைப் பாம்பு கடித்தது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். மற்றதெல்லாம், சாதிக் கண்ணோட்டத்தோடு புனையப்பட்டவை'' என்றார் தென்னரசு.
என்ன விவகாரம் இது?
""60 ஆண்டு காலமாக என் கணவர் மாரியும், மருமகன் ராஜாவும், உலக்குடி கிராமத்தில், குலத்தொழிலான சவரத் தொழிலைப் பார்த்து வருகின்றனர். நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்த எங்களின் குடியுரிமையைக் காக்க வேண்டும்''’என, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய மனுவில் வேண்டியிருக்கிறார் பஞ்சவர்ணம்.
மேலும் அவர், ‘ஊர்க்கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய உலக்குடி கிராமத்தினர், ""நானும் என்னுடைய மகள், மருமகன் மற்றும் குழந்தைகள் அனைவரும் ஊரை விட்டு வெளியேற வேண்டுமென்று, வாழவந்தம்மன் கோவில் பூசாரி விருமாண்டி மூலம் சொன்னார்கள். ஊர்க் கட்டுப்பாட்டினை மீறினால், கொலை செய்வோம்’என்று மூர்த்தி, தமிழ் முருகன் ஆகியோர் மிரட்டினார்கள்.
எங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவி ராஜம்மாள், வி.ஏ.ஓ. தென்னரசு போன்றவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென் றால், உலக்குடி மக்களிடம் அடி பட்டுச் சாவதைவிட, எங்கள் உயிரை நாங்களே மாய்த்துக்கொள்வது மேல்'' என்று குமுறலாக எழுதிவிட்டு, ""என் அக்கா மகன் கிருஷ்ணமூர்த்தி, இந்த கிராமத்தைச் சேர்ந்த சுகந்தியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவளது விருப்பத்தின் பேரில், வெளியூருக்கு கூட்டிச் சென்றுவிட்டான். இறைவன் சாட்சியாக, இந்த விஷயம் எங்களுக்குத் தெரியாது'' என்று காதல் விவகாரம் ஒன்றையும், தனது மனுவில் பஞ்சவர்ணம் குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம், உலக்குடிக்கே வந்து விசாரணையைத் தொடரும் நிலையில், நாம் களமிறங்கினோம். காவல்துறை வட்டாரத்தில், சில தகவல்களைக் கொட்டினர்.
""அந்த கிராமத்தில் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உள்ளன. நாவிதர் சமுதாயத்தினருக்கோ இரண்டு குடும்பங் கள்தான். இதுவரையிலும், சாதி வன்கொடுமை எதுவும் அங்கே நடந்ததில்லை. பஞ்ச வர்ணத்தின் அக்கா மகன், 20 வயதே ஆன கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மாணவி யான, அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த சுகந்தியை, மூன்று வருடங் களுக்கு முன்பிருந்தே காதலித்து வந்திருக் கிறான். மைனர் பெண்ணான அவளை, கடந்த 23-ஆம் தேதி இரவு, கடத்திச் சென்றுவிட்டான். இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறான், அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த மகாலிங்கம். அந்த சமுதாய இளைஞர்கள் இதுகுறித்து விசா ரிக்க, அவன் விஷம் குடித்து, உயிர் பிழைத்து, சிறுமி சுகந்தியும் திருப்பூரிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், நரிக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. கிருஷ்ணமூர்த்தி "ரிமாண்ட்' செய்யப்பட்டுள்ளான்.
இந்த சாதி விவகாரத்தால், இனி உள்ளூர் சலூனுக்கு முடிவெட்டவோ, ஷேவிங் பண்ணிக் கொள்ளவோ, நம் சமுதாயத்தவர் யாரும் போகக்கூடாது என்று ஒரு முடிவெடுத்துள்ளனர். தலித்துக்கு முடிவெட்டியதாக எந்தப் பிரச்சினையும் இல்லை'' என்றனர்.
தென்னரசுவும், ""அந்தக் குடும்பத்தினரை யாரும் ஊரைவிட்டு விலக்கவில்லை. இனி இந்த கிராமத்தில் தொழில் பார்க்க முடியாது என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது. அதனால், பக்கத்து ஊரான கட்டனூரிலுள்ள உறவினர் வீட்டுக்குப் போய்விட்டனர். இப்போதும்கூட, மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்த இன்னொரு குடும்பம். இதே உலக்குடியில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வசிக்கிறது. ஆனால், மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்று திட்டமிட்டே, யாருடைய தூண்டுதலிலோ, தொடர்ந்து பொய் சொல்கின்றனர்'' என்றார்.
பஞ்சவர்ணத்தை மீண்டும் தொடர்புகொண்டோம். ""நாங்க எதுக்கு பொய் சொல்லணும்? காலம் காலமா வாழ்ந்துட்டு இருந்த ஊரைவிட்டு ஓடிவந்து, இந்தக் காட்டுக்குள்ள கிடக்கிறதுக்கு, எங்களுக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு? எஸ்.சி.க்கு முடிவெட்டுறோம்னு ஏற்கனவே இருந்த ஆத்திரத்தை, இப்ப பொம்பள புள்ள விவகாரத்தோடு முடிச்சு போட்டு, எங்கள கோளாறா துரத்திட்டாங்க'' என்றார் குமுறலுடன்.
சிறுமி கடத்தலுக்காக கிருஷ்ணமூர்த்தி மீது சட்டம் பாய்ந்ததெல்லாம் சரிதான்! ஆனால்.. சாதி கண்ணோட்டத்தோடு, ஒரு குடும்பத்தை ஊரைவிட்டே விரட்டியடித்ததற்கு, என்ன நீதி கிடைக்கப்போகிறது?
-ராம்கி